இலங்கைக்கு மேலும் 10 பெய்லி பாலங்களை வழங்கியது இந்தியா!

விசாகப்பட்டினத்தில் இருந்து இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் காரியல் கப்பலில் எடுத்து வரப்பட்ட, 10 பெய்லி பாலங்கள், நேற்று இலங்கை அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கான இந்திய துணைத் தூதுவர் சத்யஞ்சல் பாண்டே, துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர் ஜனித ருவான் கொடித்துவக்குவிடம் இந்த பாலங்களை ஒப்படைத்துள்ளார்.

பேரிடரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில், இந்தியாவினால் 5 மில்லியன் டொலர் மானிய உதவியின் கீழ், இந்த பாலங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இலங்கைக்குப் பயணம் செய்தபோது அறிவிக்கப்பட்ட இந்தியாவின் 450 மில்லியன் டொலர் பேரிடர் மீளமைப்பு உதவிப் பொதியின் ஒரு பகுதியாக பெய்லி பாலங்களின் விநியோகம் அமைந்துள்ளது.

புதிதாக வழங்கப்பட்ட பாலங்கள் நாடு முழுவதும் பல இடங்களில் நிறுவப்படும்.

இலங்கை இராணுவம் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகாரசபையுடன் இணைந்து இந்திய இராணுவ பொறியாளர்கள் இந்தப் பாலங்களைப் பொருத்தும் பணிகளில் ஈடுபடுகின்றனர்.

Related Articles

Latest Articles