காணாமல்போன 6 வயது சிறுவன்
கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு!
– பருத்தித்துறையில் சோகம்
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை, புலோலி வல்லிபுரக்குறிச்சி பகுதியில் கிணற்றில் விழுந்து 6 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார் என்று பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வல்லிபுரக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த மேற்படி சிறுவன், நேற்று வெள்ளிக்கிழமை இரவு முதல் திடீரெனக் காணாமல்போயுள்ளார். இது குறித்துக் குடும்பத்தினரால் வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில், பருத்தித்துறை பொலிஸார் அப்பகுதி பொதுமக்களுடன் இணைந்து தீவிர தேடுதல் நடவடிக்கைகளை ஆரம்பித்திருந்தனர்.
இந்நிலையில் இன்று சனிக்கிழமை அதிகாலை முன்னெடுக்கப்பட்ட தொடர் தேடுதல்களின் போது, சிறுவனின் வீட்டுக்கு அருகாமையில் உள்ள பாழடைந்த கிணறு ஒன்றுக்குள் இருந்து அந்தச் சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்த சிறுவனின் தாய் மற்றும் தந்தை ஆகிய இருவரும் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிகள் என்று அந்தப் பகுதி மக்கள் மிகுந்த கவலையுடன் தெரிவித்துள்ளனர்.
சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காகப் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சோகமான சம்பவம் குறித்து பருத்தித்துறை பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
