வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் இன்று ஏ – 9 பிரதான வீதியில் மாபெரும் கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் தற்போது தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நடவடிக்கைகளைப் பார்வையிடுவதற்காக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தின் பிரதானிகள் ஆகியோர், செம்மணி மனிதப் புதைகுழி அடையாளம் காணப்பட்ட சித்துப்பாத்தி இந்து மயானப் பகுதிக்கு இன்று மாலை நேரில் வருகை தரவுள்ளனர்.
அமைச்சரின் இந்த வருகையை முன்னிட்டு, இன்று பிற்பகல் 2 மணி முதல் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சித்துப்பாத்தி இந்து மயானத்தின் முன்றலில், ஏ – 9 வீதியை மறித்துத் தமது கவனவீர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்து நடத்தி வருகின்றனர்.
அவர்கள் பல்வேறு கோஷங்களை எழுப்பித் தமது ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
“நீதி இல்லாத நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு?”, “செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுகளுக்குச் சர்வதேச மேற்பார்வை வேண்டும்”, “உள்ளகப் பொறிமுறைகளில் எமக்கு நம்பிக்கை இல்லை” மற்றும் “சர்வதேச விசாரணையே இறுதித் தீர்வு” உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய சுலோக அட்டைகளை ஏந்தியவாறு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நீதி அமைச்சரின் வருகை மற்றும் உள்ளூர் அதிகாரிகளின் விசாரணைகள் வெறும் கண் துடைப்பு நடவடிக்கை என்று சுட்டிக்காட்டியுள்ள போராட்டக்காரர்கள், தமக்கு உள்நாட்டுப் பொறிமுறைகளில் துளியும் நம்பிக்கையில்லை என்றும், சர்வதேச சமூகத்தின் நேரடித் தலையீடும் விசாரணையுமே தமக்கான நீதியைப் பெற்றுத் தரும் என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.










