தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தனது ஆட்சியில் முற்றிலும் தோல்வியடைந்துள்ளதாகவும், இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவதற்கான வேலைத்திட்டம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் ஆரம்பிக்கப்படும் என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்:
“தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிப்பொறுப்பை ஏற்று எதிர்வரும் செப்டம்பர் மாதத்துடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைகின்றன. எனவே, நாட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை இந்த அரசாங்கம் நிறைவேற்றியுள்ளதா என்பதை மீளாய்வு செய்வதற்கு இந்த இரண்டு ஆண்டு காலம் போதுமானது.
எந்தவொரு அரசாங்கமாக இருந்தாலும், ஆட்சிக்கு வந்த முதல் இரண்டு ஆண்டுகளிலேயே தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். எனவே, தேர்தல் விஞ்ஞாபனத்தில் அளித்த உறுதிமொழிகளை இந்த அரசாங்கம் நிறைவேற்றியுள்ளதா என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும்.
முறையான ஆட்சி மாற்றம் (System Change), நல்லாட்சி, சிறந்த நிர்வாகம், சுயாதீன நீதித்துறை மற்றும் வாழ்க்கைச் சுமை குறைப்பு ஆகியவற்றை மக்கள் பெரிதும் எதிர்பார்த்தனர். ஆனால் அவ்வாறு எதுவும் நடக்கவில்லை. வழங்கிய வாக்குறுதிகளை மறந்து, அரசாங்கம் தனது பழைய பாதையிலேயே பயணிக்கின்றது.
எனவே, அரசாங்கத்தின் ஈராண்டு நிறைவை முன்னிட்டு, செப்டம்பர் மாத இறுதியில் இரண்டு நாட்கள் மக்களைத் தொடர்ச்சியாகச் சந்தித்து நாட்டின் உண்மை நிலைவரத்தை எடுத்துரைக்கவுள்ளோம். அரசாங்கத்தின் இயலாமை, ஊழல் மற்றும் மோசடிகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
அத்துடன், ஐக்கிய மக்கள் சக்தியைப் பலப்படுத்தும் வகையில் 10 லட்சம் புதிய ஆதரவாளர்களை இணைத்துக் கொள்ளும் வேலைத்திட்டமும் செப்டம்பரில் தொடங்கப்படும். சுருக்கமாகச் சொன்னால் இந்த அரசாங்கம் முற்றிலும் தோல்வியடைந்துள்ளது (Fail). எனவே, இந்த அரசாங்கத்தை விரட்டியடிப்பதற்கான பணிகள் செப்டம்பரில் வலுப்பெறும்” என்றார் திஸ்ஸ அத்தநாயக்க.
