Home Blog Page 1648

அமைச்சு பதவிக்காக ‘அரசியல் காவடி’ தூக்கும் எஸ்.பி.!

அமைச்சரவை மாற்றத்துக்காக  மொட்டு கட்சி உறுப்பினர்கள் சிலர் வழிமீது விழிவைத்து காத்திருக்கின்றனராம். இம்முறை தமக்கு எப்படியாவது அமைச்சு பதவியொன்று கிடைத்துவிடுமென தனது விசுவாசிகளிடம் அவர்கள் நம்பிக்கை வெளியிட்டு வருகின்றனராம். இந்த பட்டியலில் எஸ்.பி. திஸநாயக்க முன்னிலை வகிக்கின்றார். அவர் தற்போது ‘ரணில் புராணம்’ பாடி வருகிறாராம். சிறிகொத்தவுக்கு ‘அரசியல் காவடி’ தூக்குவதற்கும் தயார் நிலையில் உள்ளாராம்.

இந்நிலையில் மொட்டு கட்சி முக்கியஸ்தர்களும், பஸிலின் சகாக்களுமான ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, ரோஹித அபேகுணவர்தன ஆகிய இருவருக்கும் கட்டாயம் அமைச்சு பதவி வழங்கப்பட வேண்டுமென மொட்டு கட்சி எம்.பிக்கள் சிலர், கட்சி மட்டத்தில் வலியுறுத்த ஆரம்பித்துள்ளனராம். இது குறித்து ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பி வைக்குமாறு மொட்டு கட்சி செயலாளரிடம் வேண்டுகோளும் விடுத்துள்ளனராம்.

எது எப்படி இருந்தாலும் இவ்விருவருக்கும் அமைச்சு பதவிகளை வழங்குவது குறித்து அரச தலைமை இன்னும் முடிவெடுக்கவில்லையாம்.  துமிந்த திஸாநாயக்க உட்பட எதிரணியில் இருந்து ஆளுங்கட்சி பக்கம் வரவுள்ள முக்கியஸ்தர்களுக்கு அமைச்சு பதவிகளை வழங்கி, தேசிய அரசொன்றை ஸ்தாபிப்பதே அரச தலைமையின் திட்டமாக உள்ளதாம். பாதீடு கூட்டத்தொடர் முடிவதற்குள்  அல்லது முடிவடைந்து ஓரிரு நாட்களுக்குள் தெற்கு அரசியலில் அதிரடி மாற்றங்கள் நிகழக்கூடும் என அரசல் புரசலாக கதை அடிபடுகின்றது.

கடந்த 3 ஆண்டுகளில் 461 இந்திய மீனவர்கள் விடுதலை

2020-22 காலப்பகுதியில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 485 இந்திய மீனவர்களில் 461 பேரை இலங்கை விடுதலை செய்துள்ளதாக இந்திய வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் வி முரளீதரன் தெரிவித்துள்ளார்.

இந்திய நாடாளுமன்ற மேலவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் மாநில அமைச்சர் முரளீதரன், சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி இலங்கை கடற்பரப்பில் மீன்பிடித்ததாகக் கூறி இந்திய மீனவர்கள் அவ்வப்போது இலங்கை அதிகாரிகளால் கைது செய்யப்படுகின்றனர்.

அவர் பேசுகையில், “இந்திய மீனவர்களின் பாதுகாப்பு, பாதுகாப்பு மற்றும் நலனுக்கு இந்திய அரசு அதிக முன்னுரிமை அளிக்கிறது. இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் செய்திகள் கிடைத்தவுடன், இராஜதந்திர வழிகள் மூலம் அரசாங்கம் இலங்கை அரசாங்கத்துடன் இந்த விவகாரத்தை எடுத்துக் பேசிக் கொள்கிறது.

கிடைத்த தகவல்களின்படி கடந்த 3 ஆண்டுகளில் மொத்தம் 485 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று மாநில அமைச்சர் முரளீதரன் தெரிவித்தார்.

இதில் 2020ல் 74 மீனவர்களும், 2021ல் 159 பேரும், 2022ல் 252 பேரும் அடங்குவர்.

2020ல் 11 இந்திய படகுகளும், 2021ல் 20 படகுகளும், 2022ல் 35 படகுகளும் இலங்கை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

எவ்வாறாயினும், டிசம்பர் 2 ஆம் திகதி வரையில் 24 இந்திய மீனவர்கள் மாத்திரமே இலங்கைக் காவலில் உள்ளனர்.

அரிசி இறக்குமதியை நிறுத்த வர்த்தமானி வெளியிடப்படும்

அரிசி இறக்குமதியை உடனடியாக இடைநிறுத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

அமைச்சர் மஹிந்த அமரவீர விடுத்த கோரிக்கைக்கு அமைய ஜனாதிபதி விக்ரமசிங்க தனது சிரேஷ்ட ஆலோசகர் ஆர்.எச்.எஸ் சமரதுங்கவிடம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

800,000 ஹெக்டேயர் நெல் வயல்களில் 675,000 ஹெக்டேயர் நிலத்தில் விவசாயிகள் ஏற்கனவே பயிர்ச்செய்கையை ஆரம்பித்துள்ளதாலும், 2023 ஆம் ஆண்டு அரிசி தட்டுப்பாடு ஏற்படுமெனவும் கவலையில்லை என அமைச்சர் அமரவீர ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளார்.

நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் போது, சில விவசாயிகள் மூன்று பருவகால அறுவடைகளை கையிருப்பில் வைத்திருப்பதாகவும், எனவே இறக்குமதியை நிறுத்த வேண்டும் எனவும் அமைச்சர் அமரவீர ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளார்.

அதன்படி வர்த்தமானியை வெளியிட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.2021 மஹா பருவம் தோல்வியடைந்ததால், நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்ற கவலைகள் எழுப்பப்பட்டன.

அனைத்து தமிழ் அரசியல் கைதிகளுக்கும் பொங்கலன்று பொதுமன்னிப்பு – மனோ கோரிக்கை

தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் பொது மன்னிப்பின் கீழ் ஒரே தடவையில் விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கொள்ள வேண்டுமென மனோ கணேசன் எம்பி பாராளுமன்றத்தில் நேற்று கேட்டுக்கொண்டார்.

கடந்த தீபாவளியின் போது எட்டு பேரை விடுதலை செய்வதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்தது போன்று எதிர்வரும் தைப்பொங்கல் தினத்திலும் மேலும் சிலரை விடுதலை செய்யுமாறு நாம் அவரிடம் கேட்டுக் கொண்டுள்ளோமென சபையில் சுட்டிக்காட்டிய அவர், அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் பொது மன்னிப்பின் கீழ் ஒரே தடவையில் விடுதலை செய்வதற்கு ஜனாதிபதி கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற நிதி, பொருளாதார உறுதிப்பாடு, மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சுக்கான வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டு குழு நிலை விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சபையில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

நீதி அமைச்சர் விஜேயதாச ராஜபக்ஷ, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் தெரிவிக்கும்போது, இன்னும் 40 பேரே அவ்வாறு சிறைச்சாலைகளில் உள்ளதாகவும் அவர்கள் தொடர்பான விசாரணைகள் சம்பந்தமாகவும் தெரிவித்தார்.

நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அவர்களை கட்டம் கட்டமாக அல்லாமல் ஒரே தடவையில் பொது மன்னிப்பு வழங்கி விடுவிக்க முடியும். அத்தகைய நம்பிக்கையளிக்கும் நடவடிக்கைகள் மூலமே தமிழ் மக்களின் மனங்களை வெல்ல முடியுமென்றும் அவர் தெரிவித்தார்.

சுதந்திரக்கட்சிக்குள் அரசியல் போர் உக்கிரம்! நடக்கபோவது என்ன?

ஶ்ரீலங்கா  சுதந்திரக்கட்சிக்குள் ஏற்பட்டிருந்த உள்ளக மோதல் தற்போது சந்திவரை வந்து, குத்தாட்டம் போட்டுக்கொண்டிருக்கின்றது. அரசுக்கு ஆதரவளிப்பவர்களும், கட்சியில் இருப்பவர்களும்  கடும் சொற்போரில் ஈடுபட்டுவருவதால் ‘அரசியல் போர்’ உக்கிரமடைந்துள்ளது.

இவ்வாறானதொரு  பின்புலத்தில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் (வெற்றிலை சின்னம்) பொதுச்செயலாளர் பதவியில் மைத்திரிபால சிறிசேன மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார். கூட்டணியின் செயலாளர் பதவியில் இருந்து மஹிந்த அமரவீரவை நீக்கிவிட்டு, அந்த இடத்துக்கு திலங்க சுமதிபாலவை நியமித்துள்ளார். இவ்விவகாரம் தற்போது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது.

தனது இந்த முடிவை அங்கீகரிப்பதற்காக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நிறைவேற்றுக்குழுக் கூட்டத்தை கடந்த 30 ஆம் திகதி மைத்திரி அவசரமாக கூட்டியிருந்தார். எனினும், கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஈபிடிபி, தேசிய காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இதில் பங்கேற்கவில்லை.

இதற்கிடையில்  கட்சி பொதுச்செயலாளரின் அனுமதியின்றி கூட்டப்பட்ட இந்த கூட்டம் சட்டவிரோதமானது என மஹிந்த அமரவீரவும் விசேட அறிவிப்பை விடுத்தார். கூட்டணியின் தலைவர் என்ற வகையில் கூட்டத்தை கூட்டுவதற்கான அதிகாரம் தனக்கு இருப்பதாக மைத்திரி பதிலடி கொடுத்திருந்தார். இன்னும் மோதல் ஓயவில்லை. இவ்விவகாரம் விரைவில் நீதிமன்றம்வரை செல்லக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இவ்வாறு சர்ச்சைகளுக்கு மத்தியில் அரசுக்கு ஆதரவு வழங்கும் சுதந்திரக்கட்சி எம்.பிக்கள், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து பேச்சு நடத்தினர். எனவே, இவர்கள் ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணையக்கூடும் அல்லது கூட்டணி அமைக்ககூடும் என தகவல்கள் பரவின.  எனினும், ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையாமல், எதிர்காலத்தில் கூட்டணியாக செயற்படுவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.

மீண்டும் பலத்தை காட்டினார் ரணில்! பாதீட்டு விவாதத்தில் நடந்தது என்ன? விசேட தொகுப்பு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம்,  நாடாளுமன்றத்தில் தமக்கு பெரும்பான்மை உள்ளது என்பதை மீண்டுமொருமுறை நிரூபித்துள்ளது.  அத்துடன், தனக்கான ஆதரவையும் அதிகரித்துக்கொண்டுள்ளது.

இதன்படி 2023 ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை எவ்வித தடையுமின்றி ரணில் அரசாங்கம் நிறைவேற்றிக்கொண்டுள்ளது.

நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால்  2023 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் (இரண்டாம் வாசிப்பு) கடந்த நவம்பர் 14 ஆம் திகதி முன்வைக்கப்பட்டது.

நவம்பர் 15  ஆம் திகதி  முதல்  22 வரை 07 நாட்கள் ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இடம்பெற்று அன்று  மாலை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதன்போது 2 ஆம் வாசிப்புக்கு ஆதரவாக 121 வாக்குகளும், எதிராக 84 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதன்படி 37 மேலதிக வாக்குகளால் 2 ஆம் வாசிப்பு நிறைவேறியது.

இதனையடுத்து நவம்பர் 23 ஆம் திகதி முதல் நேற்று வரை 3 ஆம் வாசிப்பு (குழுநிலை) மீதான விவாதம் நடத்தப்பட்டு மாலை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதன்போது ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக்கட்சி, ஈபிடிபி, இ.தொ.கா,  தேசிய காங்கிரஸ், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, முஸ்லிம் தேசியக் கூட்டணி என்பன ஆதரவாக வாக்களித்தன.

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினரான துமிந்த திஸாநாயக்க,  சுயாதீன அணி உறுப்பினர்களான சுதர்ஷினி பெர்ணான்டோ புள்ளி, ஜோன் செனவிரத்ன,  பிரியங்கர ஜயரத்ன ஆகியோரும் சார்பாக வாக்களித்தனர்.

அத்துடன், ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி, தமிழ் முற்போக்கு கூட்டணி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, விமல் அணி, டலஸ் தரப்பு என்பவற்றின் உறுப்பினர்கள் எதிராக வாக்களித்தனர்.

பாதீட்டை ஆதரித்து ஆளுங்கட்சியுடன் இணைவார் என கூறப்பட்ட ராஜித சேனாரத்னவும் எதிராக வாக்களித்தார்.

இறுதியில் பாதீடு திருத்தங்கள் சகிதம் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவித்தார். 3 ஆம் வாசிப்புமீதான வாக்கெடுப்பின்போது ஆதரவாக 123 வாக்குகளும், எதிராக 80 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதன்படி மேலதிக 43 வாக்குகளால் நிறைவேற்றம் இடம்பெற்றது.

இம்மாத இறுதியில் இந்தியாவின் ECTA உடன் பேச்சுவார்த்தை

தடைப்பட்ட பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம் (ETCA) தொடர்பாக இந்தியாவுடன் இலங்கை விரைவில் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி செயலகத்தின் கீழ் அண்மையில் ஸ்தாபிக்கப்பட்ட சர்வதேச வர்த்தக அலுவலகத்தில் FTAக்களின் பிரதான பேச்சுவார்த்தையாளர் கே.ஜே.வீரசிங்க  தெரிவிக்கையில், ETCA தொடர்பான பேச்சுவார்த்தைகளை இம்மாத இறுதியில் ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளோம் என்றார்.

மேலும் தி ஹிந்து செய்திகளில் , கே.ஜே.வீரசிங்கவை மேற்கோள் காட்டி, “இந்தியா-இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கையில் இருந்து நடைமுறையில் உள்ள [ISFTA] ஐ விரிவுபடுத்தும் மற்றும் ஆழப்படுத்தும் நோக்கத்துடன் கடந்த முறை [2016 மற்றும் 2019 க்கு இடையில்] 11 சுற்று இருதரப்பு பேச்சுவார்த்தைகளை முடித்திருந்தோம்.

நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில், ETCA ஆனது இலங்கையில் உள்ள பிரிவினரிடமிருந்து கணிசமான எதிர்ப்பை எதிர்கொண்டது, முக்கியமாக தேசியவாத குழுக்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் இந்த ஒப்பந்தம் இந்தியாவுக்கு நியாயமற்ற நன்மையை வழங்குவதாகக் கருதியது.

“விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தம் (CEPA)” – ETCA ஆனது பத்தாண்டு கால, ஆனால் பயனற்ற, மற்றொரு உடன்படிக்கையில் பேச்சுவார்த்தைகளை தொடர்ந்தது.

இலங்கையின் பொருளாதார மீட்சிக்கான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் மூலோபாயத்தின் ஒரு பகுதியே சுதந்திர வர்த்தக மற்றும் நேரடி முதலீடுகளுக்கு இலங்கையின் சமீபத்திய முக்கியத்துவம் அதிகரித்துள்ளது.

2023 வரவு செலவுத் திட்ட உரையின் போது, ஜனாதிபதி விக்கிரமசிங்க, உலகச் சந்தைக்கு இலங்கை அதிக அணுகலைப் பெற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

பொது பயன்பாட்டு ஆணைக்குழுவுக்கு ஆப்பு!

மின்சார சபையை மறுசீரமைப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் முன்மொழிவுகளுக்கு அமைய, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவை நீக்குவதற்கு யோசனை முன்வைக்கப்படடுள்ளது.

இவ்வாறு மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக, புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறைகளுக்கென தனியான நிறுவனங்களை நிறுவத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அபிவிருத்தியடைந்த நாடுகளில் இவ்வாறான முறையே நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் மின்சாரம் மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.

பெரும்பாலான பிரதேசங்களில் மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரை வேகத்தில் பலத்தகாற்று வீசக்கூடும்

தென்மேற்குவங்காள விரிகுடா கடற்பரப்புகளில் (திருகோணமலைக்கு கிழக்காக 300 கிலோ மீட்டர் தூரத்தில்) நிலைகொண்டுள்ள“Mandous” என்ற சூறாவளியானது இன்று காலை 0830 மணிக்கு வட அகலாங்கு 9.50 N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 83.80 E இற்கும் அருகில் மையம் கொண்டிருந்தது.

அது மேற்கு- வடமேற்கு திசையில் நகரக்கூடிய சாத்தியம் உயர்வாகக் காணப்படுவதுடன் டிசம்பர் 09 ஆம் திகதி நள்ளிரவுப் பொழுதில் தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் வடதமிழ் நாடு, பாண்டிச்சேரி மற்றும் தென் ஆந்திரப் பிரதேச கரையோரப் பிரதேசங்களை கடக்கக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு மாகாணத்தில் இடைக்கிடையே மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், சில இடங்களில் 100 மி.மீக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

சப்ரகமுவ மாகாணத்திலும் காலி, மாத்தறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரை வேகத்தில் பலத்தகாற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விசேட விடுமுறை!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை வழங்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

சினிமா

நடிகர் ராஜேஷ் காலமானார்

0
தமிழ்த் திரைப்பட நடிகர் ராஜேஷ் காலமானார். அவருக்கு வயது 75. குறைந்த ரத்த அழுத்தத்தின் காரணமாக ஏற்பட்ட உடல்நிலை பாதிப்பினால் அவர் உயிரிழந்ததாகத் தெரிகிறது. இயக்குநர் கே.பாலச்சந்தரின், ‘அவள் ஒரு தொடர்கதை’ படத்தின் மூலம்...

யார் இந்த வேடன்? 

0
கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களிலும், செய்தி ஊடகங்களில் அதிகமாக அடிபட்ட பெயர் ‘வேடன்’. கேரளாவைச் சேர்ந்த மலையாள ராப் பாடகரான இவரது பாடல்கள்தான் சமீபநாட்களாக ரீல்ஸ், ஸ்டோரீஸ் உள்ளிட்டவற்றில் அதிகம் இடம்பெறுபவை. புரட்சிகரமான பாடல்...

நடிகையாக அறிமுகமாகிறார் வனிதாவின் மகள் ஜோவிகா!

0
  நடிகை வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா, வனிதா ஃபிலிம் புரொடக் ஷன்ஸ் சார்பில் தயாரித்துள்ள படம், ‘மிஸஸ் அண்ட் மிஸ்டர்’. இதை வனிதா இயக்கி நாயகியாக நடித்துள்ளார். ராபர்ட், ஸ்ரீமன், ஷகீலா, கணேஷ், ஆர்த்தி...

செய்தி

அபாயகரமான மரங்களை அகற்ற 5 குழுக்கள்!

0
பலத்த மழை மற்றும் காற்றுடன் கூடிய வானிலையினால் கொழும்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் மரங்கள், கிளைகள் முறிந்து வீழ்ந்த 35 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இவற்றில் அதிகமானவை தனியார் இடங்களை அண்டிய பகுதிகளில் பதிவானதாக கொழும்பு மாநகரசபை...

தமிழர்களின் வரலாற்று பொக்கிஷம் அழிக்கப்பட்டு இன்றோடு 44 ஆண்டுகள்

0
யாழ்ப்பாணம் பொதுசன நூலகம் தீயூட்டி எரிக்கப்பட்டமையின் 44 ஆவது ஆண்டு நினைவேந்தல், யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் இடம்பெற்றது. நினைவேந்தலின்போது யாழ்ப்பாண பொதுசன நூலகத்தை உருவாக்குவதற்கு காரணகர்த்தாவாக விளங்கிய செல்லப்பா மற்றும்...

சீரற்ற காலநிலையில் 9,745 பேர் பாதிப்பு

0
கொழும்பு உட்பட நாட்டில் 14 மாவட்டங்களில் நிலவும் அடை மழை, கடும் காற்றுடனான சீரற்ற காலநிலையால் 2, 641 குடும்பங்களைச் சேர்ந்த 9,745 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 19 பேர் காயமடைந்துள்ளனர். மரம் முறிவு உள்ளிட்ட...