அமைச்சரவை மாற்றத்துக்காக மொட்டு கட்சி உறுப்பினர்கள் சிலர் வழிமீது விழிவைத்து காத்திருக்கின்றனராம். இம்முறை தமக்கு எப்படியாவது அமைச்சு பதவியொன்று கிடைத்துவிடுமென தனது விசுவாசிகளிடம் அவர்கள் நம்பிக்கை வெளியிட்டு வருகின்றனராம். இந்த பட்டியலில் எஸ்.பி. திஸநாயக்க முன்னிலை வகிக்கின்றார். அவர் தற்போது ‘ரணில் புராணம்’ பாடி வருகிறாராம். சிறிகொத்தவுக்கு ‘அரசியல் காவடி’ தூக்குவதற்கும் தயார் நிலையில் உள்ளாராம்.
இந்நிலையில் மொட்டு கட்சி முக்கியஸ்தர்களும், பஸிலின் சகாக்களுமான ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, ரோஹித அபேகுணவர்தன ஆகிய இருவருக்கும் கட்டாயம் அமைச்சு பதவி வழங்கப்பட வேண்டுமென மொட்டு கட்சி எம்.பிக்கள் சிலர், கட்சி மட்டத்தில் வலியுறுத்த ஆரம்பித்துள்ளனராம். இது குறித்து ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பி வைக்குமாறு மொட்டு கட்சி செயலாளரிடம் வேண்டுகோளும் விடுத்துள்ளனராம்.
எது எப்படி இருந்தாலும் இவ்விருவருக்கும் அமைச்சு பதவிகளை வழங்குவது குறித்து அரச தலைமை இன்னும் முடிவெடுக்கவில்லையாம். துமிந்த திஸாநாயக்க உட்பட எதிரணியில் இருந்து ஆளுங்கட்சி பக்கம் வரவுள்ள முக்கியஸ்தர்களுக்கு அமைச்சு பதவிகளை வழங்கி, தேசிய அரசொன்றை ஸ்தாபிப்பதே அரச தலைமையின் திட்டமாக உள்ளதாம். பாதீடு கூட்டத்தொடர் முடிவதற்குள் அல்லது முடிவடைந்து ஓரிரு நாட்களுக்குள் தெற்கு அரசியலில் அதிரடி மாற்றங்கள் நிகழக்கூடும் என அரசல் புரசலாக கதை அடிபடுகின்றது.