Home Blog Page 1649

இன்றைய வானிலை

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடக்கு, வடமத்திய, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீசக்கூடும் எனவும் அது மேலும் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், தென்மேற்கு வங்காள விரிகுடாவில் “மண்டஸ்” சூறாவளி புயல் நேற்று இரவு 10.30 மணியளவில் யாழ்ப்பாணத்தில் இருந்து வட-வடகிழக்கே 280 கிமீ தொலைவில் 12.2N மற்றும் தீர்க்கரேகை 80.6Eக்கு அருகில் நிலைகொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த அமைப்பு வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று அதிகாலை தென்மேற்கு வங்கக்கடலில் வட தமிழகம், புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திரா கடற்கரையை கடக்க வாய்ப்பு உள்ளது.

இதன்படி, நாடு மற்றும் தீவைச் சூழவுள்ள கடற்பரப்புகளின் வானிலையில் இந்த அமைப்பின் தாக்கம் படிப்படியாகக் குறையும்.

இன்று கொழும்பில் நீர் வெட்டு

கொழும்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை   10 மணி முதல் இரவு 8 மணி வரை 10மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

குறித்த காலப்பகுதியில் கொழும்பு, தெஹிவளை, கல்கிஸ்ஸ, கோட்டே, கடுவெல மாநகர சபை பகுதிகள், மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவ நகரசபை பகுதிகள், கொட்டிகாவத்தை, முல்லேரிய பிரதேச சபை பகுதிகள் மற்றும் இரத்மலானை மற்றும் கட்டுபெத்த ஆகிய பகுதிகளுக்கு நீர் வெட்டு அமுல்படுத்தப்படும்.

5 முறைகள் உலகக்கிண்ணம் வென்ற பிரேசில் காலிறுதியுடன் ‘அவுட்’!

உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் பிரேசில் அணி கால்இறுதியில் பெனால்டி ஷூட்-அவுட்டில் குரோஷியாவிடம் வீழ்ந்தது.

22 ஆவது உலகக் கோப்பை கால்பந்து போட்டி கட்டாரில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு எஜூகேசன் சிட்டி மைதானத்தில் அரங்கேறிய முதலாவது கால்இறுதியில் 5 முறை சாம்பியனும், நம்பர் ஒன் அணியுமான பிரேசில், குரோஷியாவுடன் மோதியது.

தொடக்கத்திலேயே கோல் அடித்து முன்னிலை பெறும் முனைப்புடன் இரு அணியினரும் வரிந்து கட்டினர். ஆட்டத்தின் 105-வது நிமிடத்தில் பிரேசில் கோல் அடித்தது. அந்த அணியின் நட்சத்திர வீரர் நெய்மார் இந்த கோலை அடித்தார். ஆனால் வெற்றியை நெருங்கிய சமயத்தில் பிரேசில் கோட்டை விட்டது.

116-வது நிமிடத்தில் குரோஷியாவின் புருனோ பெட்கோவிச் கோல் போட்டு சமனுக்கு கொண்டு வந்தார். கூடுதல் நேரத்தின் முடிவில் ஆட்டம் 1-1 என்ற கணக்கில் சமநிலை ஆனதால் முடிவை அறிய பெனால்டி ஷூட்-அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. பெனால்டி ஷூட்-அவுட்டில் குரோஷியா தனது முதல் 4 வாய்ப்புகளையும் கோலாக்கியது. அதே சமயம் பிரேசில் 4 வாய்ப்புகளில் 2-ஐ வீணடித்தது. பரபரப்பான பெனால்டி ஷூட்-அவுட் முடிவில் குரோஷியா 4-2 என்ற கணக்கில் பிரேசிலை வீழ்த்தி தொடர்ந்து 2-வது முறையாக அரைஇறுதிக்குள் நுழைந்தது.

கோப்பைபை வெல்லும் வாய்ப்பில் இருந்த 5 முறை சாம்பியனான பிரேசில் கால்இறுதியோடு மூட்டையை கட்டியது. 2002-ம் ஆண்டுக்கு பிறகு அந்த அணி கோப்பையை வென்றதில்லை.

இபோச பஸ் மோதி நபரொருவர் பலி! நுவரெலியாவில் விபத்து!!

அம்பாறையிலிருந்து நுவரெலியா நகரை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் மோதியதில் நபரொருவர் பலியாகியுள்ளார்.

நுவரெலியா சாந்திபுர பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய பி,ஏ ரோகித்த பெரேரா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நுவரெலியா பிரதான பேருந்து தரிப்பிடத்தினுள் இன்று மதியம், வீதியியை கடக்க முட்பட்ட பாதசாரி ஒருவர் மீது குறித்த பேருந்து மோதியதாலேயே விபத்து இடம்பெற்றுள்ளது.

மேலும் சம்பவத்துடன் தொடர்புடைய இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பில் நுவரெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

தி.தர்வினேஷ்

நுவரெலியா, பதுளையில் இ.தொ.கா. முன்னெடுத்த தொழிற்சங்க நடவடிக்கை வெற்றி!

நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களில் தோட்ட நிர்வாகங்கள் தான்தோன்றித்தனமாக செயற்பட்டன. தொழிலாளர்களின் உரிமைகள் நசுக்கப்பட்டன. உரிய இழப்பீடுகள் வழங்கப்படவில்லை. தொழிலாளர்கள் வீதியில் இறங்க வேண்டி ஏற்பட்டது. இந்நிலையில் இவ்விரு மாவட்டங்களிலும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முன்னெடுத்த தொழிற்சங்க நடவடிக்கை வெற்றியளித்துள்ளது என்று இதொகாவின் பொதுச்செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

இதொகா தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” ஹொரண பெருந்தோட்ட யாக்கத்திற்கு எதிராக கடந்த 26 ஆம் திகதி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டோம். இவ் தொழிற் சங்க நடவடிக்கை மாபெரும் வெற்றியை வழங்கியதுடன், மக்களிடத்தில் பெரும் நம்பிக்கையும் ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து இ.தொ.காவின் ஊழியர்களுக்கும், மாற்று தொழிற்சங் ஒத்துழைப்பு வழங்கியோருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

மேலும் கட்சி பேதமின்றி இதற்கு ஒத்துழைப்பு வழங்கியமையால் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைத்தவுடன், தேயிலை நிறையில் ஏற்பட்டிருந்த பிரச்சினைக்கும் தீர்வு காண பட்டதுடன்
மழைகாலத்திற்கு வேறாகவும் வெயில் காலத்திற்கு வேறாகவும் நிறை மாற்றப்பட்டு ள்ளது.

அத்துடன் 15 வருட காலமாக பெருந் தோட்டத்தில் சேவை புரிந்த சிவக்குமார், மின்சாரம் தாக்கி கண்டி வைத்தியசாலையில் அனுமதிமதித்த சந்தர்ப்பத்தில் இறந்து விட்டார். இச் சந்தர்ப்பத்தில் பெருந் தோட்ட அதிகாரிகள் இவரது குடும்பத்தினருடன் தனிப்பட்ட ரீதியாக பேச்சு வார்த்தை நடாத்தி குறைந்த அளவு பணத்தை வழங்க ஏற்பாடு செய்தனர்.

நாங்கள் தற்பொழுது எழுத்து மூலமாக பெற்றுக் கொண்டதுடன் பாதிக்கப்பட்ட அக் குடும்பத்தினருக்கு ரூ 50 இலட்சமும், விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட காணியும் மேலும் அவர் மனைவிக்கு வேலை வாய்ப்பினையும் பெற்றுக் கொடுத்துள்ளோம். அத்துடன் செந்தில் தொண்டமான் தலைமையில் பதுளை அக்கரபரத்தின பெருந் தோட்டத்திலும் வெற்றியை கொண்டுள்ளதுடன்,மஸ்கெலியா பகுதியிலும், தவிசாளர்.ராமேஸ்வரன் அவர்களது.பகுதியான நுவரெலியாவிலும் வெற்றியை கண்டது அனைத்து பெருந்தோட்ட யாக்கங்களுக்கும் ஒரு பாடத்தை புகர்த்தி இருக்கும் என்பதுடன், எதிர்காலங்களில் இவ்வாறான தவறுகளை செய்யாது இருப்பார் கள்.” – எனவும் ஜீவன் தொண்டமான் குறிப்பிட்டார்.

‘காலநிலை’ குறித்த பிரச்சினையை எதிர்கொள்ளவே ‘காலநிலை செழுமைத் திட்டம்”

உலக நாடுகள் முகங்கொடுத்துள்ள காலநிலை மாற்றம் தொடர்பான பிரச்சினைகள் எதிர்காலத்தில் எமது நாட்டையும் பாதிக்கும் என்பதனை உணர்ந்ததன் காரணமாகவே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க “காலநிலை செழுமைத் திட்டத்தை” தயாரித்ததாக காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜயவர்தன தெரிவித்தார்.

நாட்டின் வளிமண்டலத்தின் தரம் கடந்த இரண்டு நாட்களாக வீழ்ச்சியடைந்து வருவது தொடர்பில் ருவன் விஜயவர்தன, இன்று (09) ஜனாதிபதி அலுவலகத்தில் விசேட அறிவித்தலொன்றை முன்வைத்தபோதே இவ்வாறு குறிப்பிட்டார்.

ருவன் விஜயவர்தன மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள குழப்பநிலைக் காரணமாக வட இந்தியாவில் நிலவி வரும் வளி மாசடைதல் பிரச்சினைக்கு நமது நாடும் முகம்கொடுக்க நேரிட்டுள்ளது. இதுபோன்ற நிகழ்வுகள் இடம்பெறலாம் என்பதை ஜனாதிபதி முன்கூட்டியே அறிந்து வைத்திருந்ததன் காரணமாகவே , அவர் காலநிலை மாற்றம் குறித்த கருத்தாடல் ஒன்றை ஆரம்பித்தார்.

வளி மாசடைதல் நாட்டு மக்களின் ஆரோக்கியத்தையும் விவசாயத்தையும் பாதிக்கிறது. குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியவர்கள் இதனால் பாதிக்கப்படுகின்றனர். எனவே, பாடசாலை மாணவர்களைப் பாதுகாக்க பாடசாலைகளுக்கு விடுமுறை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அலுவலகப் பணியாளர்கள் வருகையிலும் வீழ்ச்சி நிலவுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இவை அனைத்தும் நாட்டின் பொருளாதாரத்தை நேரடியாக பாதிக்கின்றது. அதன் காரணமாகவே ஜனாதிபதி பசுமைப் பொருளாதாரம் பற்றி தெரிவித்திருந்தார். ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றம் தொடர்பான COP 27 மாநாட்டில் இதைப் பற்றி கலந்துரையாடினோம். அதற்கமைய காலநிலை மாற்றம் தொடர்பான பல்கலைக்கழகம் ஒன்றை இந்நாட்டில் நிறுவவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதை மிக விரைவில் செய்வோம்.

உலகிலுள்ள அபிவிருத்தியடைந்த நாடுகளின் செயல்பாடுகளால் நம்மைப் போன்ற சிறிய நாடுகளே மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டு வருகின்றன. ஜனாதிபதி COP 27 மாநாட்டிலும் இது தொடர்பில் சுட்டிக்காட்டியிருந்தார்.
நாடு என்ற வகையில் எதிர்காலத்தில் நாம் எதிர்கொள்ள வேண்டிய பாரிய சவால் காலநிலை மாற்றம் என்பதனாலேயே ஜனாதிபதி இது தொடர்பில் தொடர்ந்தும் பேசி வருகின்றார். ஜனாதிபதி அன்று இதைப் பற்றிப் பேசியபோது சிரித்த பலர், இன்று யதார்த்தத்தைப் புரிந்து கொண்டிருப்பார்கள் என்று நினைக்கிறேன். எனவே அனைவரும் இத்திட்டத்திற்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

டிசம்பர் 14 நள்ளிரவு முதல் புலமைப்பரிசில் பரீட்சைக்கான பிரத்தியேக வகுப்புகளை நடத்த தடை

டிசம்பர் 14 ஆம் திகதி நள்ளிரவு முதல் புலமைப்பரிசில் பரீட்சைக்கான பிரத்தியேக வகுப்புகளை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது எனபரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 18 ஆம் திகதி நடைபெறவுள்ள புலமைப்பரிசில் பரீட்சை நிறைவடையும் வரை இந்த தடை அமுலில் இருக்கும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில், 14 ஆம் திகதி நள்ளிரவு முதல் பரீட்சையுடன் தொடர்புடைய வகுப்புகள், பயிற்சி வகுப்புகள், கருத்தரங்குகளை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பரீட்சையில் வரக்கூடிய வினாக்கள் அல்லது மாதிரி வினாக்கள் வழங்கப்படும் என சுவரொட்டிகள், பதாகைகள், துண்டுப்பிரசுரங்கள், இலத்திரனியல் ஊடகங்கள் அல்லது சமூக ஊடகங்கள் ஊடாக விளம்பரப்படுத்துவது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் L.M.D.தர்மசேன தெரிவித்துள்ளார்.

புயலின் கோரத்தாண்டம் – 151 கால்நடைகள் உயிரிழப்பு!

‘மாண்டஸ்’ புயலின் தாக்கத்தால் வடக்கு மாகாணத்தில் மாத்திரம் நேற்று ஒரே நாளில் 254 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் 151 கால்நடைகளும் உயிரிழந்துள்ளன என்று மாவட்ட செயலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நேற்றுப் பகலும் இரவும் வீசிய புயல் காற்றாலேயே 254 வீடுகள் சேதமடைந்துள்ளன. அத்துடன் பயன்தரு மரங்கள் பல முறிந்து வீழ்ந்து அழிவடைந்துள்ளன. அதேவேளை, கடும் குளிருடன் மழை பெய்ததால் 136 மாடுகளும், 15 ஆடுகளும் உயிரிழந்துள்ளன.

முல்லைத்தீவு மாவட்டத்திலே அதிக வீடுகள் சேதமடைந்துள்ளன. அம்மாவட்டத்தில் 141 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்த அதேநேரம் 22 கால்நடைகள் உயிரிழந்துள்ளன.

கிளிநொச்சி மாவட்டத்தில் அதிக கால்நடைகள் உயிரிழந்துள்ளன. இங்கு 129 கால்நடைகள் உயிரிழந்த அதேநேரம் 36 வீடுகள் சேதமடைந்துள்ளன.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 31 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் மாவட்டத்தின் பெரும் வாழ்வாதாரமான வாழைச்செய்கை அதிகளவில் அழிவடைந்துள்ளது. வாழைத் தோட்டங்கள் நிறைந்த நீர்வேலி, கந்தன், நவக்கிரி மற்றும் கோப்பாய் ஆகிய பகுதிகளில் வாழை மரங்கள் குலையுடன் முறிந்து வீழ்ந்துள்ளன. இதனால் தங்கள் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது என்று வாழைத்தோட்ட உரிமையாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

அதேநேரம் வவுனியா மாவட்டத்தில் 34 வீடுகளும், மன்னார் மாவட்டத்தில் 12 வீடுகளும் சேதமடைந்துள்ளன.

பெண்களின் மார்பகம், பிறப்புறுப்பை குறிவைத்து துப்பாக்கிச்சூடு? ஈரான் ஹிஜாப் போராட்டம்

ஈரானில் ஹிஜாபுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் பெண்களின் முகம், மார்பகங்கள், பிறப்புறுப்பை குறிவைத்து பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

ஈரானில் இஸ்லாமிய புரட்சி ஏற்பட்டத்திலிருந்து, அதாவது 1979 ஆம் ஆண்டு முதல் அந்நாட்டில் பொதுவெளியில் பெண்கள் ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டது. அதன்படி அங்கு 9 வயது முதல் அனைத்து பெண்களும் பொது இடங்களில் ஹிஜாப் கட்டாயம் அணிய வேண்டும். அப்படி ஹிஜாப் அணியவில்லை என்றால் தண்டனை விதிக்கப்பட்டு வருகிறது. மேலும், ஹிஜாப் அணிவதைக் கண்காணிக்க ஈரான் அரசு தனியாக கலாச்சார காவலர்களையும் நியமித்தது.

அப்படித்தான் கடந்த செப்டம்பர் மாதம் குர்திஸ்தான் மாகாணத்தில் மாஷா அமினி என்ற 22 வயதுடைய இளம்பெண் முறையாக ஹிஜாப் அணியவில்லை என்றுக் கூறி அவரை காவலர்கள் கடுமையாக தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் தலையில் காயமடைந்த அந்தப் பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மாஷா அமினியின் மரணம் ஈரான் நாடு முழுக்க கொந்தளிக்கச் செய்தது.

இதையடுத்து ஹிஜாப் சட்டங்களை நீக்கக் கோரி ஈரானில் பெண்கள் போராட்டத்தில் குதித்தனர். கடந்த செப்.16ஆம் தேதி தொடங்கிய இந்தப் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஹாலிவுட் நட்சத்திரங்கள் தொடங்கிப் பல உலக பிரபலங்களும் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததால் உலக அளவில் இது கவனத்தை ஈர்த்தது. ஹிஜாபுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டத்தில் நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் பாதுகாப்புப் படையினரின் தாக்குதலில் உயிரிழந்துள்ளனர். மேலும் பல்வேறு இடங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் அதிகரித்தி வருகின்றன. இருப்பினும் ஈரானின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில் ஈரானில் ஹிஜாபுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் பெண்களின் முகம், மார்பகங்கள் மற்றும் பிறப்புறுப்பை குறிவைத்து பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியிருப்பதாக பிரிட்டிஷ் ஊடகமான ‘தி கார்டியன்’ செய்தி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து மருத்துவர் ஒருவர் கூறியதாக செய்தி வெளியிட்டுள்ள  ‘தி கார்டியன்’,  ”20 வயதான பெண் ஒருவருக்கு சிகிச்சை அளிக்கும்போது அப்பெண்ணின் பிறப்புறுப்பில் இருந்து  துப்பாக்கிக்குண்டின் இரு துகள்களை அகற்றினோம். தொடைப் பகுதியில் இருந்து 10 துகள்களை அகற்றினோம்” என்றார்.

5 அடிப்படை உரிமை மனுக்களை விசாரிக்க அனுமதி

கடந்த மே மாதம் 09 ஆம் திகதி  அலரி மாளிகையில்  ஒன்று கூடிய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட சிலர், கோட்டாகோகம போராட்டக்களத்தில் அமைதியாக செயற்பட்டவர்கள் மீது தடியடி நடத்தி, கொடூரமாக தாக்கியமைக்கு  எதிராக தாக்கல் செய்யப்பட்ட 5 அடிப்படை உரிமை மனுக்களை விசாரணை செய்வதற்கு  உயர் நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது.

தாக்குதலில் பலத்த காயமடைந்த லஹிரு ஷானக்க உள்ளிட்ட போராட்டக்காரர்கள்  இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

விஜித் மலல்கொட, ஜனக்க டி சில்வா உள்ளிட்ட நீதியரசர்கள் முன்னிலையில் மனு  விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணையை அடுத்த வருடம் ஜூன் மாதம் 22 ஆம் திகதி முன்னெடுப்பதற்கு நீதியரசர் குழாம் தீர்மானித்துள்ளது.

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ, முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த, பொலிஸ்மா அதிபர் சந்தன விக்ரமரத்ன, மேல் மாகாணத்திற்கு  பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் உள்ளிட்டவர்கள் இந்த மனுவில் பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், இது தொடர்பில் கருத்துகளை முன்வைக்குமாறு அறிவித்தல் அனுப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மனுதாரர்கள் சார்பில் சட்டத்தரணி புலஸ்தி ஹேவாமன்ன உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழுவும் சட்டமா அதிபர் சார்பில் அரசாங்கத்தின் சிரேஷ்ட சட்டத்தரணி சவீந்திர விக்கிரமவும் ஆஜராகினர்.

சினிமா

” விலங்கு தெறிக்கும் “

0
மார்ச் 14 ம் திகதி யாழ்ப்பாணம் ராஜா திரையரங்கில் வெளியாகி மக்களின் அமோக ஆதரவைப் பெற்ற " விலங்கு தெறிக்கும் " திரைப்படம் தொடர்ந்து மன்னார், வவுனியா, மல்லாவி, கிளிநொச்சி போன்ற இடங்களிலும்...

கமலின் படங்களுக்கு கர்நாடகாவில் தடை?

0
சென்​னை​யில் அண்​மை​யில் நடை​பெற்ற ‘தக் லைஃப்’ திரைப்பட நிகழ்​வில் நடிகரும் மக்​கள் நீதி மய்​யத்​தின் தலை​வரு​மான கமல்​ஹாசன் பேசுகை​யில், “தமிழில் இருந்து பிறந்தது தான் கன்​னடம்​” என குறிப்​பிட்​டார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரி​வித்​துள்ள...

சூடானில் பேராபத்து: 10 லட்சம் பேர் பாதிக்கும் அபாயம்!

0
சூடானில் பரவும் புதியவகை காலரா தொற்று காரணமாக சுமார் 10 லட்சம்பேர் பாதிக்கப்படக்கூடும் என்று ஐ.நா. எச்சரிக்கை விடுத்துள்ளது. வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் ராணுவத்துக்கும், ஆர்.எஸ்.எப். எனப்படும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நீண்ட கால...

செய்தி

” விலங்கு தெறிக்கும் “

0
மார்ச் 14 ம் திகதி யாழ்ப்பாணம் ராஜா திரையரங்கில் வெளியாகி மக்களின் அமோக ஆதரவைப் பெற்ற " விலங்கு தெறிக்கும் " திரைப்படம் தொடர்ந்து மன்னார், வவுனியா, மல்லாவி, கிளிநொச்சி போன்ற இடங்களிலும்...

காசாவில் பட்டினியால் 23 இலட்சம் பேர் பரிதவிப்பு

0
காஸா மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களால், கடந்த மூன்று மாதங்களாக உணவு கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவுகிறது. குழந்தைகள் கடுமையான பசியில் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. காஸாவின் வடக்கு பகுதியில் இரண்டு வயதிற்குட்பட்ட குழந்தைகளில்...

தேசிய கட்சியில் தசி கணேஷனுக்கு உயர் பதவி!

0
தேசிய கட்சியில் தசி கணேஷனுக்கு உயர் பதவி! சர்வஜன அதிகாரம் கட்சியின் நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்பாளராக தசி கணேஷன் நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன், அக்கட்சிக்கு கொத்மலை பிரதேச சபைக்கு கிடைக்கப்பட்ட ஆசனத்துக்கு தசி கணேஷன் நியமிக்கப்பட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்...