மலையக மக்களுக்கு ரணசிங்க பிரேமதாசவே குடியுரிமை பெற்றுகொடுத்தார்: – சஜித்!
“ பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினையை அடிப்படையாகக் கொண்டு விமர்சனம் முன்வைக்கப்படுகின்றது. குறித்த அமைச்சுக்கான குழுநிலை விவாதத்தின்போது இதற்குரிய உரிய பதில் வழங்கப்படும்.
பெருந்தோட்ட மக்கள் தொடர்பில் உங்களிடம் (தேசிய மக்கள் சக்தி) இருந்து எங்களுக்கு உபதேசம் அவசியமில்லை.
மலையக மக்களுக்கு குடியுரிமை வழங்குவதற்கு ரணசிங்க பிரேமதாசவே நடவடிக்கை எடுத்தார் என்பதை மறக்க வேண்டாம்.”
இவ்வாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
மீள் நிகழாமையை உறுதிப்படுத்த அரசியல் தீர்வு வேண்டும்!
“இறுதிக்கப்பட்டப்போரின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறல் அவசியம். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி பரிகாரம் வேண்டும். மீள் நிகழாமை உறுதிப்படுத்த நீதியான அரசியல் தீர்வு வேண்டும்.” என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா. ஸ்ரீநேசன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் உரையாற்று கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இதுதொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ வெள்ளையர்கள் இந்நாட்டைவிட்டு வெளியேறும்போது ஆசியாவில் பொருளாதாரத்தில் நாம் மூன்றாவது இடத்தில் இருந்தோம். ஆனால் 76 ஆண்டுகளில் நாடு வங்குரோத்து நிலைக்கு சென்றது. இந்நிலையில்தான் தேசிய மக்கள் சக்தி பொறுப்பேற்றுள்ளது.
இனவாத ஆட்சியாளர்களால்தான் இந்நாட்டில் இனப்பிரச்சினை உருவாக்கப்பட்டது. ஜே.ஆர். ஜயவர்தனவால் கொண்டுவரப்பட்ட பயங்கரவாத தடைச்சட்டமானது மிகவும் பயங்கரமான சட்டமாக அமைந்தது. அச்சட்டம் இன்னும் நீக்கப்படவில்லை என்பது வேதனைக்குரிய விடயம்.
இந்த பயங்கரவாத தடைச்சட்டத்தின் ஊடாக மனித உரிமைகள் மீறப்பட்டன. பேரவலங்கள் அரங்கேறின. அச்சட்டத்தின்கீழ் ஜே.வி.பி. தோழர்களும் இச்சட்டம் ஊடாக வஞ்சிக்கப்பட்டனர் என்பதை நாம் அறிவோம். வடக்கு, கிழக்கு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
போர் காலத்தில் ஏற்பட்ட இழப்புகள், மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவும் பொறுப்பு கூறல் வேண்டும். உண்மைகள் கண்டறியப்பட வேண்டும். நீதி பரிகாரம் வழங்கப்பட வேண்டும்;. மீள் நிகழாமையை உறுதிப்படுத்த இனப்பிரச்சினைக்கு நீதியான தீர்வு காணப்பட வேண்டும்.” என்றார்.
19 ஆம் திகதி தமிழரசுக் கட்சியினரை சந்திக்கிறார் ஜனாதிபதி!
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும், இலங்கை தமிழரசுக் கட்சியினருக்கும் இடையிலான சந்திப்பு எதிர்வரும் 19 அல்லது 20 ஆம் திகதியளவில் நடைபெறும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர், செயலாளர் மற்றும் எம்.பிக்கள் ஆகியோர் மேற்படி சந்திப்பில் பங்கேற்கவுள்ளனர் எனவும் அவர் கூறினார்.
இலங்கை தமிழரசுக் கட்சியால் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அனுப்பட்ட கடிதத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் பற்றியே இதன்போது கலந்துரையாடுவதற்கு எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இலங்கை தமிழரசுக் கட்சிக்கும், ஜனாதிபதிக்கும் இடையில் விரைவில் சந்திப்பு நடக்கும் எனவும், நல்லிணக்க சமிக்ஞையாக வரவு- செலவுத்திட்ட விவாதத்தில் விலகி இருப்பதற்கு தமிழரசுக் கட்சி முடிவு செய்துள்ளது எனவும் சாணக்கியன் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் சந்திப்புக்குரிய திகதி விபரம் பற்றி அவரிடம் வினவியபோதே அவர் இவ்வாறு கூறினார்.
மெட்ரோ சிரிஷின் ‘நான் வயலன்ஸ்’ படத்தில் ஸ்ரேயா!
‘மெட்ரோ’ சிரிஷ், பாபி சிம்ஹா, யோகி பாபு, அதிதி பாலன் உட்பட பலர் நடிக்கும் படம், ‘நான் வயலன்ஸ்’.
ஏகே பிக்சர்ஸ் சார்பில் லேகா தயாரிக்கும் இதை ‘மெட்ரோ’, ‘கோடியில் ஒருவன்’ உள்பட சில படங்களை இயக்கிய ஆனந்த கிருஷ்ணன் இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கும் இப்படத்துக்கு உதயகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
90-களில் நடக்கும் கதையான இது மதுரை பின்னணியில் உருவாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 5 மொழிகளில் வெளியாக இருக்கும் இப்படத்தில் இருந்து ‘கனகா’ என்ற பாடல் வெளியாகி இருக்கிறது. இந்தப் படத்தில் கவுரவ வேடத்தில் நடிக்கும் ஸ்ரேயா, இதில் ஒரு பாடலுக்கும் ஆடியுள்ளார்.
‘மெட்ரோ’ சிரிஷுடன் ஸ்ரேயா ஆடியுள்ள இப்பாடல், இணையத்தில் வரவேற்பைப் பெற்றுள்ளது. ரக்ஷிதா சுரேஷ் பாடியுள்ள இப்பாடல், வெளியான 48 மணி நேரத்தில் 4.8 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்துள்ளது.
திருமலையில் நேற்றிரவு நடந்தது என்ன? நாடாளுமன்றுக்கு விளக்கமளிப்பு!
திருகோணமலையில் அமைதியின்மை ஏற்பட இடமளிக்க முடியாது. சட்டம், ஒழுங்கை நிலைநாட்ட உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, நாடாளுமன்றத்தில் இன்று விளக்கமளித்தார்.
திருகோணமலை கடற்கரையில் பௌத்த பிக்குகளால் அனுமதியின்றி விகாரை அமைக்க முற்பட்டதால் அங்கு நேற்றிரவு ஏற்பட்ட பதற்ற நிலைமை தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, நாடாளுமன்றத்தில் இன்று விளக்கமளித்தார்.
இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
“ குழப்பம் ஏற்பட்டால் புத்தர் சிலைக்கு சேதம் ஏற்படக்கூடும் என தகவல் கிடைத்தது. இதனையடுத்து பொலிஸார் சிலையை அங்கிருந்து அகற்றி, சிலைக்குரிய பாதுகாப்பை உறுதிப்படுத்தினர்.
குறித்த புத்தர் சிலையை விகாரையிலேயே இன்று மீள வைக்குமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அப்பகுதியில் சட்டவிரோதமாக சிற்றுண்டிச்சாலையொன்று நடத்தப்பட்டுவருகின்றது என கரையோர பாதுகாப்பு திணைக்களத்தால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பொலிஸார் சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளனர். காணி குறித்து நீதிமன்றம் வழங்கும் உத்தரவுக்கமையவே நடவடிக்கை எடுக்கப்படும்.” எனவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிட்டார்.
கொங்கோ நாட்டில் சுரங்கத்தில் நிலச்சரிவு – 32 பேர் உயிரிழப்பு !
ஆப்பிரிக்க நாடான கொங்கோவில் உள்ள கலண்டோ செம்பு சுரங்கத்தின் சுற்றுச்சுவர் திடீரென இடிந்து விழுந்ததில் 32 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சுற்றுச்சுவர் திடீரென இடிந்து போது பீதியடைந்த சுரங்க தொழிலாளர்கள் ஓடியபோது ஒருவர் மீது ஒருவர் விழுந்ததால் இறப்பு எண்னிக்கை அதிகரித்ததாக கூறப்படுகிறது.
32 பேர் இறந்ததாக கூறப்பட்டாலும் உண்மையான இறப்பு எண்னிக்கை 40-யை தாண்டக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
மின்சார வாகனங்கள் மற்றும் பிற பொருட்களுக்கான லித்தியம்-அயன் பேட்டரிகளை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் கோபால்ட் கனிமத்தை சுரங்கங்களில் இருந்து அதிக அளவில் காங்கோ உற்பத்தி செய்கிறது. ஆனால் இந்த கனிம உற்பத்தியில் 80 சதவீதத்தை சீன நிறுவனங்கள் கட்டுப்படுத்துகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
ஈரானில் செயற்கை மழை பொழிவிப்பு!
ஈரானில் செயற்கை மழையை பெய்ய வைப்பதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஈரானில் தற்போது வரலாறு காணாத வறட்சி நிலவுகின்றது. இதனால் ஈரானின் ஆகப் பெரிய ஏரியான உர்மியா வறண்டுவிட்டது.
அந்த ஏரி உள்ள பகுதியில் செயற்கை மழை பெய்ய வைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
கிழக்கு, மேற்கு அஸர்பைஜான் வட்டாரங்களில் கூடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் கூறப்பட்டது.
தலைநகர் தெஹ்ரானில் நூறு ஆண்டு காலத்தில் ஆகக் குறைவான மழைப்பொழிவு இம்முறை பதிவாகியுள்ளது.
நாட்டின் பாதிப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக மழையே பெய்யவில்லi என தெரியவருகின்றது.
பாதீட்டை ஆதரித்திருந்தாலும் சஜித் கூட்டணியிலிருந்து வெளியேறமாட்டோம்!
வரவு- செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்திருந்தாலும் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியில் இருந்து வெளியேறும் திட்டம் இல்லை என்று தமிழ் முற்போக்கு கூட்டணி அறிவித்துள்ளது.
சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணியில் தமிழ் முற்போக்கு கூட்டணி அங்கம் வகிக்கின்றது.
வரவு- செலவுத் திட்டத்தின் 2ஆம் வாசிப்புமீதான விவாதத்தின்போது அதற்கு எதிராக வாக்களிப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்திருந்தது. எனினும், சஜித் கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழ் முற்போக்கு கூட்டணி ஆதரவாக வாக்களித்தது.
இந்நிலையிலேயே, “அரசாங்கத்துடன் இணையும் எண்ணத்துடன் ஆதரவாக வாக்கவிக்கவில்லை. தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்பட்டதாலேயே ஆதரவளிக்கப்பட்டது.
zதன்மூலம் ஐக்கிய மக்கள் கூட்டணி மீதுஅதிருப்தி என்று அர்த்தம் ஆகாது. கூட்டணி உறவு தொடரும்.” என தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவர் இராதாகிருஷ்ணன் எம்.பி. குறிப்பிட்டார்.
கொங்கு வட்டாரப் பின்னணியில் ‘ஒண்டிமுனியும் நல்லபாடனும்’
கொங்கு வட்டார பின்னணியில் உருவாகியுள்ள படத்துக்கு ‘ஒண்டிமுனியும் நல்லபாடனும்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
திருமலை புரொடக் ஷன் சார்பில் கா.கருப்புசாமி தயாரித்துள்ள இப்படத்தை சுகவனம் எழுதி இயக்கியுள்ளார். ‘பரோட்டா’ முருகேசன், கார்த்திகேசன், முருகன், விஜயன், சேனாபதி, சித்ரா, கவுசிகா, தமிழினியன் விகடன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜெ.டி.விமல் ஒளிப்பதிவு செய்துள்ளார். நடராஜன் சங்கரன் இசையமைத்துள்ளார்.
இப்படம் குறித்து பேசிய இயக்குநர் சுகவனம், “கொங்குப் பகுதியை பின்னணியாகக் கொண்டு நிறைய திரைப்படங்கள் வந்திருந்தாலும், இதுவரை சொல்லப்படாத கதையை இப்படம் விவரிக்கும். நிலத்தில் நன்றாக உழைக்கும் பாட்டாளியை நல்லபாடன் என்று அழைப்பது கொங்கு வட்டார வழக்கம். இம்மண்ணில் நிலங்களற்று உழைக்கும் மனிதர்களின் கதை தான் இது.
ஒண்டி முனி எனும் சிறு தெய்வத்தை குலதெய்வமாக வழிபடும் மக்கள் இவர்கள். அவர்கள் கொண்ட கடவுள் நம்பிக்கை, ஆதிக்க மனம் கொண்டவர்களின் உழைப்பு சுரண்டல்கள், மனிதர்களின் வாழ்வு முறை,நல்லபாடனின் போராட்டம் உள்ளிட்டவற்றை இப்படம் பேசுகிறது. படம் பார்க்கும் அனைவரையும் ஒரு கிராமத்தில் வாழ்ந்த உணர்வை கதை ஏற்படுத்தும். இது மக்களுக்கான கலை, நிச்சயம் அவர்களைச் சென்றடையும் என நம்புகிறேன்” என்றார். நவ. 28-இல் இப்படம் வெளியாகிறது.















