Home Blog Page 2688

எரிவாயு மாஃபியா தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்துமாறு கோரிக்கை

எரிவாயு மாஃபியா ஒன்று செயற்படுவதாக வெளியான தகவல் குறித்து சுயாதீன விசாரணையொன்றை நடத்துமாறு லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் முன்னாள் தலைவர் அனில் கொஸ்வத்த கோரிக்கை விடுத்துள்ளார்.

 

கடிதமொன்றின் ஊடாக நிதி அமைச்சிடம் அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

நாட்டில் எரிவாயு மாஃபியா ஒன்று செயற்படுவதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தற்போதைய தலைவர் நேற்று முன்தினம் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டிருந்தார்.

கண்டி இரஜவெல இந்து தேசிய கல்லூரிக்கு நவீனமயப்படுத்தப்பட்ட வினைத்திறன் விஞ்ஞான ஆய்வுகூட வசதிகள் மற்றும் விஞ்ஞான கல்லூரியாக தரம் உயர்த்த தீர்மானம்- பாரத் அருள்சாமி

அமைச்சர் ஜீவன் தொண்டமான் இரஜவெல இந்து தேசிய கல்லூரிக்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

இதுதொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப செயலாளர் மற்றும் பிரஜாசக்தி அபிவிருத்தி செயல்திட்டத்தின் பணிப்பாளர் நாயகம் பாரத் அருள்சாமி, எதிர்வரும் 2022 ஆம் ஆண்டில் கல்வி மற்றும் சுகாதார அபிவிருத்திக்கு அமைச்சர் ஜீவன் தொண்டமான்  முதல் இடம் வழங்கியுள்ள நிலையில் கண்டி மாவட்டத்தில் பின்தங்கிய பாடசாலைகளை அபிவிருத்தி செய்தலும் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் விசேட வேலைத் திட்டங்களை நாம் முன்னெடுத்துள்ளோம்.

அந்த வகையில் இக்கல்லூரி விஜயத்தின்போது மாணவர்களின் கல்வி நடவடிக்கை உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி தொடர்பாக கல்லூரியின் அதிபரிடமும் ஆசிரியர்களிடமும் கலந்துரையாடியதுடன் அங்கு நவீன மயப்படுத்தப்பட்ட வினைத்திறன் விஞ்ஞான ஆய்வுக் கூடங்களை( இரசாயனவியல், பௌதிகவியல்) நிர்மாணிக்க நிதி ஒதுக்கீட்டையும் அமைச்சர் வழங்கினார்.

அதுமட்டுமல்லாது நீண்டகாலமாக நிலவிவந்த பிரச்சனையான மத்திய மாகாண விளையாட்டு அமைச்சின் கீழ் உள்ள விளையாட்டு மைதான தொகுதியை கல்லூரியின் மாணவர்கள் இலவசமாக பயன்படுத்த மத்திய மாகாண ஆளுநரிடம் உடன் கலந்துரையாடி தீர்வையும் நாம் பெற்றுக் கொடுத்தோம்.

இக் கல்லூரியை ஒரு விஞ்ஞான கல்லூரியாக மாற்றுவதே எமது நோக்கம். இப்பகுதி மாணவர்கள் மட்டுமல்லாது பன்விலை, ரங்கலை, தெல்தெனிய மற்றும் குண்டசாலை பகுதிகளிலுள்ள அனைத்து மாணவர்களும் விஞ்ஞான பிரிவில் மிளிர இது ஒரு வாய்ப்பாக அமையும். அத்தோடு மறைந்த தலைவர் ஆறுமுகன் தொண்டமானினால்  இங்கு வழங்கப்பட்ட கட்டிட தொகுதியையும் நாம் பார்வையிட்டோம்.
இவ் விஜயத்தின் போது அமைப்பாளர் ஆசிரியர் கௌரிசங்கர், கண்டி தமிழ் வர்த்தக சங்கத்தின் தலைவர் திரு அன்பழகன் திகன நகர வர்த்தகர்கள், இ. தொ. கா இளைஞர் அணி அமைப்பாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

சீனாவின் அழுத்தம் : கழிவு உரக்கப்பல் இலங்கை கடல் பரப்பில் அனுமதி

சர்ச்சைக்குரிய சேதன பசளையை தாங்கிய சீன கப்பல், பேருவளை மற்றும் களுத்துறைக்கு இடையிலான இலங்கை கடற்பரப்பில் இருப்பதாகக் கப்பல் பயணங்கள் தொடர்பான தகவல்களை அறிக்கையிடும் மெரின் ட்ரெபிக் (MarineTraffic) இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த உரத்தை இலங்கைக்கு கொண்டுவந்ததாகக் கூறப்பட்ட சீன நிறுவனத்திற்கும், அதன் உள்ளூர் முகவருக்கும் பணம் செலுத்துவதை தடுத்து, மக்கள் வங்கிக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவு தொடர்ந்தும் அமுலில் உள்ள நிலையில், குறித்த கப்பல் இலங்கை கடல் பரப்பில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தக் கப்பல் நேற்று மாலை 4.30 அளவில், கொழும்பு துறைமுகத்தை வந்தடையுமென கப்பல் பயணங்கள் தொடர்பான மெரின் ட்ரபிக் இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டதையடுத்து, இதுகுறித்து துறைமுக கட்டுப்பாட்டாளரான கெப்டன் நிர்மால் சில்வாவிடம் எமது செய்திச் சேவை வினவியது.

இதன்போது பதிலளித்த அவர், குறித்த கப்பலானது சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்காகக் கொழும்பு துறைமுகத்துக்கு வர முடியும் என்றாலும், அதில் உள்ள சட்டவிரோதமானதும், தீங்கு விளைவிக்கக்கூடியதுமான உரத்தை நாட்டில் இறக்குவதற்கு அனுமதிக்கப்பட மாட்டாது எனக் குறிப்பிட்டார்.

சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்காக, அந்தக் கப்பல் துறைமுகத்திற்குள் பிரவேசிக்குமாயின், உள்ளூர் பிரதிநிதி ஒருவரை நியமித்து, கப்பலின் வருகையைப் பதிவுசெய்து, அதற்கான கொடுப்பனவை செலுத்தி, கப்பலில் உள்ள பொருட்கள் தொடர்பில் அறிக்கையிட்டு, அதன் சான்றிதழையும், சுகாதார சான்றிதழையும் பெற்றுக்கொள்வது கட்டாயமானதாகும்.

எவ்வாறிருப்பினும் குறித்த கப்பல், இது போன்ற எந்தவொரு செயன்முறையையும் இதுவரையில் செய்யவில்லையெனத் துறைமுக கட்டுப்பாட்டாளர் உறுதிப்படுத்தினார்.

இளைஞர்கள் சீமைக்குச் செல்வதில் தவறில்லை : பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ்

மக்கள் வெளிநாட்டுக்கு செல்வது பிரச்சினைக்குரியதல்ல என்றும், அது அவர்களின் எதிர்காலத்திற்கு சிறந்ததாகும் என்றும் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கண்டியில் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்தபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தங்களது வாழ்க்கையை மிகவும் சிறந்ததாக்கவும், வருமானத்தை அதிகரித்துக்கொள்ளவும் மக்கள் வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர். அது தவறான விடயமில்லை.

வெளிநாடுகளுக்கு செல்பவர்கள் எப்போதும் அந்த நாடுகளிலேயே வாழ்வதில்லை.

இவ்வாறு வெளிநாடுகளுக்கு செல்லும் பெரும்பாலானோர் மீண்டும் நாடு திரும்புகின்றனர்.

அத்துடன், நாட்டுக்குப் பெருமளவான அந்நிய செலாவணியை அவர்கள் பெற்றுத் தருவதாகவும் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பலாங்கொடை தமிழ் கல்வி வளர்ச்சியில் இராஜரட்ணம் எனும் நாமம் கௌரவத்துக்குரியது! -இ.தொ.கா உப செயலாளர் ரூபன் பெருமாள் புகழாரம்-

இ/கனகநாயகம் தமிழ் தேசிய கல்லூரியின் அதிபர், கோவிந்தன் இராஜரட்ணம்  தமது அதிபர் சேவையிலிருந்து ஓய்வு பெரும் இந்நாளில் அவர் எமது சமூகத்திற்கு செய்த கல்விச் சேவையானது அளப்பரியது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப செயலாளர் ரூபன் பெருமாள் தெரிவித்துள்ளார்.

தமது 60ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் கோவிந்தன் இராஜரத்தினதுக்கு  வாழ்த்து தெரிவிக்கும் முகமாக கல்லூரி வளாகத்தில் பலாங்கொடை பிரதேச சபை உறுப்பினர் நிரஞ்சன் மயில்வாகனத்துடன் இணைந்து கௌரவித்துள்ளார்.

மாரதென்ன தெத்தனகல தோட்டத்தை பிறப்பிடமாகக் கொண்ட அவர் தனது கல்வியை  இந்துக் கல்லூரியில் கற்றுள்ளார். அதனைத்தொடர்ந்து ஒரு ஆசிரியராக, அதிபராக தமிழ் கல்வி வளர்ச்சிக்காக அயராது உழைத்துள்ளார். கனகநாயகம் தமிழ் மத்திய கல்லூரியின் பரீட்சைப் பெறுபேறுகள் வளர்ச்சிக்காக அயராது பாடுப்பட்டு, உயர்தர கணித, விஞ்ஞான வகுப்புகளை தமது காலப்பகுதியில் ஆரம்பித்து, தனது அதிபர் பதவியை மிளிரச்செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரது ஓய்வுக்காலம், அவருக்கு தேக ஆரோக்கியத்துடன் கூடிய, நிம்மதியான காலப்பகுதியாக அமைய வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப செயலாளர் ரூபன் பெருமாள்  தமது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.

கல்வியின் கலையகமாக,
கலை தேவி பெற்றெடுத்த ஒரு தவப்புதல்வராக,
கனகநாயகத்தின் பெரு விருட்சமாக மணிமகுடம் சூடி,
சமூகத்தின் கலங்கரை விளக்காக சமூகப் பணிகள் பல செய்து நம் மண்ணில் நற்பிரஜைகளை உருவாக்கியவர்.

மணி விழா கொண்டாடும் இந்நாள் உங்களது ஓய்வு நாளல்ல?
பவள விழாவாக,
அமுத விழாவாக,
நூற்றாண்டு விழாவாக உங்களது சேவை தொடரும் என்ற நம்பிக்கையில் இன்றைய தினம் அறுபதாவது அகவை தினத்தை கொண்டாடும் கனகநாயகத்தின் அதிபரான திரு.இராஜரட்ணம் நீண்ட ஆயுளோடும் நிறைந்த ஆரோக்கியத்தோடும் வாழ இறைவனிடம் பிரார்த்தித்து வாழ்த்து பூ மாலை சூடுகிறோம்…

என மேலும் குறிப்பிட்டுள்ளார்.

10 ஆம் தரத்துக்கு மேற்பட்ட வகுப்புகளுக்கான கற்பித்தல் செயற்பாடுகள் நாளை முதல் மீள ஆரம்பம்!

நாடு முழுவதும் உள்ள அனைத்து பாடசாலைகளிலும், 10 முதல் 13 வரையான தரங்களுக்கான கற்றல் நடவடிக்கைகள் நாளை (08) முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.

அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா  தெரிவித்தார்.

கல்விப் பொதுத் தராதர சாதாரணதர மற்றும் உயர்தர பரீட்சைகளுக்காகக் குறித்த தரங்களுக்கான கற்றல் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்கு, கொவிட் தடுப்பு குழுவின் அனுமதிக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய பாடசாலைக்குள் முகக்கவசம் அணிதல், கைகளைக் கழுவுதல், சமூக இடைவெளியைப் பேணுதல் முதலான சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றுவது கட்டாயமானதாகும்.

கொவிட் பரவல் காரணமாக சுமார் 2 வருட காலமாக நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளும் இடைக்கிடையே மூடப்பட்டன.

கொவிட் பரவல் நிலையானது ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதை அடுத்து, நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் உள்ள ஆரம்பப் பிரிவுகள் கடந்த மாதம் 25 ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்பட்டது.

6 முதல் 9 வரையான வகுப்புகளுக்குப் பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பிலும், தவறவிடப்பட்ட பாடநெறிகளை முழுமைப்படுத்தல் மற்றும் பரீட்சைகளை நடத்துதல் என்பன தொடர்பிலும் தற்போது அவதானம் செலுத்தப்படுகிறது.

இதனிடையே தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த வருடத்தின் இறுதி பாடசாலை தவணையை, அடுத்த வருடம் மார்ச் மாதம் 31 ஆம் திகதிவரை நீடிக்குமாறு, தேசிய கல்வி நிறுவனத்தினால் கல்வி அமைச்சுக்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

தவறவிடப்பட்ட பாடநெறிகளை முழுமைப்படுத்துவதற்காகவும், பரீட்சைகளை நடத்துவதற்கான காலத்தைப் பெற்றுக்கொள்வதற்காகவும் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கல்வி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதேநேரம் சாதாரணதர மற்றும் உயர்தர வகுப்புகளுக்கான பிரத்தியேக வகுப்புக்களை அதிகபட்சமாக 50 சதவீத மாணவர் கொள்ளளவுடன் எதிர்வரும் 16ஆம் திகதி முதல் ஆரம்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நுவரெலியாவில் அதிக பனிமூட்டம் சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

மலையகத்தில் தொடர்ந்து மழையுடனான காலநிலை நிலவுவதால்  நுவரெலியா மாவட்டத்தில் அதிக பனிமூட்டம் நிறைந்து காணப்படுகிறது.

எனவே ஹட்டன் நுவரெலியா ,வெளிமடை,கண்டி வீதிகளில் பயணிக்கும் வாகன சாரதிகள் அவதானத்துடன் வாகனங்களின் விளக்குகளை ஒளிரவிட்டு வாகனங்களை செலுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

நாட்டில் அதிகரித்துள்ள கொள்ளைச் சம்பவங்கள் பொலிஸார் எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் திருட்டு, வழிபறி மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக பொலிஸ் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

போதை பொருளுக்கு அடிமையான குழுவினரினால் வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களில் மேற்கொள்ளப்படும் திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

இந்த நிலையில் கொழும்பு உட்பட பல பிரதேசங்களில் பாதுகாப்பினை அதிகரிக்குமாறு பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

போதை பொருள் விலை அதிகரித்துள்ளமையே இந்த நிலைமைக்கு காரணமாகியுள்ளதென தகவல் வெளியாகியுள்ளது. தற்போது ஹெரோயின் பக்கட் ஒன்றின் விலை 3000 ரூபாய் வரை விலை அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இவ்வாறான நிலையில் பொது மக்கள் மிகுந்த பாதுகாப்பாக இருக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.

பின்வாங்கினார் அலிசப்ரி! நடந்தது என்ன?

நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சு பதவி ஆகியவற்றை இராஜினாமா செய்யும் முடிவை நீதி அமைச்சர் அலி சப்ரி மீளப்பெற்றுள்ளார் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் நடைபெற்ற சந்திப்பின் பின்னரே அமைச்சர் அலி சப்ரி இந்த முடிவை எடுத்துள்ளார்.

‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ தொடர்பான ஜனாதிபதி செயலணியை ஸ்தாபிப்பது தொடர்பில் தன்னுடன் ஆலோசனை நடத்தப்படவில்லை என்பதால் நீதி அமைச்சர் அலி சப்ரி கடும் அதிருப்தியில் இருந்தார்.

குறித்த செயலணியின் தலைமைப்பதவி ஞானசார தேரருக்கு வழங்கப்பட்டமை தொடர்பிலும் எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

இந்நிலையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சு பதவியை துறக்கும் நோக்கில் ஜனாதிபதியை சந்தித்திருந்தார்.

குறித்த செயலணியானது தனக்கு ஆலோசனை வழங்கவே நியமிக்கப்பட்டதாகவும், நீதி அமைச்சின் ஆலோசனை இன்றி சட்டக்கட்டமைப்பு மாற்றப்படாது எனவும் ஜனாதிபதி உறுதியளித்துள்ளார். இதனையடுத்தே தனது முடிவை அலிசப்ரி மாற்றியுள்ளார்.

எதிர்வரும் டிசம்பர் மாதம் கொவிட் தொற்று ஒப்பீட்டளவில் அதிகரிக்கும்-சன்ன ஜயசுமன

கொவிட் பரவல் தொடர்பான உலகின் போக்குகள் குறித்த ஆய்வுகளின்படி, எதிர்வரும் டிசம்பர் மாதம் கொவிட் தொற்று ஒப்பீட்டளவில் அதிகரிக்கும் என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

கொவிட்-19 தடுப்பூசி தொடர்பில் அமெரிக்கா நடத்திய புதிய ஆய்வு தொடர்பில் கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் பெருவாரியாக பயன்படுத்தப்படும் மூன்று கொவிட் தடுப்பூசிகளினதும் செயற்திறன் காலம், கணிசமான அளவில் குறைவடைவதாக புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

8 இலட்சம் அமெரிக்கர்களிடையே நடத்தப்பட்ட இந்த ஆய்வில் பைஸர், மொடர்னா மற்றும் ஜொன்சன் எண்ட் ஜொன்சன் முதலான கொவிட் தடுப்பூசிகளின் செயல்திறன் குறித்து ஆராயப்பட்டுள்ளது.

இதன்போது, பைஸர் தடுப்பூசியின் செயற்திறன், கடந்த மார்ச் மாதம் 89.2 சதவீதத்திலிருந்து, 6 மாதங்களின் பின்னர், 58 சதவீதம் வரையில் வீழ்ச்சியடைந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

மொடர்னா தடுப்பூசியின் செயல்திறன் குறித்த காலப்பகுதியில், 86.9 சதவீதத்திலிருந்து, 43 சதவீதம் வரையில் குறைவடைந்துள்ளது.

ஜொன்சன் எண்ட் ஜொன்சன் தடுப்பூசியின் செயல்திறன் 86.4 சதவீதத்திலிருந்து, 13 சதவீதம் வரையில் வீழ்ச்சியடைந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன, தடுப்பூசியின் மூலம் கிடைக்கும் பாதுகாப்பு குறைவடைவதாக கூறுவது நல்ல விடயமல்ல என்று குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையிலும், பைஸர் மற்றும் மொடர்னா தடுப்பூசிகள் பெருமளவில் வழங்கப்பட்டுள்ளன.

எனவே, இது குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், மூன்றாம் தடுப்பூசியை வழங்குவதையும், முகக்கவசத்தை அணிவதையும் ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

எதிர்வரும் டிசம்பர் மாதம் ஆகும்போது நிலைமை சிறந்ததாக அமையாது என்றே இந்த ஆய்வில் தெரிவிக்கப்படுவதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன கூறியுள்ளார்.

சினிமா

உயிரே… உறவே… தமிழே… நன்றி!

0
“எனக்கு உறுதுணையாக இருந்த தமிழகத்துக்கே நன்றி சொல்ல வேண்டும். நான் மேடையில் பேசும்போது, ‘உயிரே... உறவே... தமிழே...’ என்று சொன்னதற்கான அர்த்தத்தை முழுமையாக உணர்கிறேன்” என நடிகர் கமல்ஹாசன் நெகிழ்ச்சியுடன் பேசினார். மணிரத்னம் இயக்கத்தில்...

” விலங்கு தெறிக்கும் “

0
மார்ச் 14 ம் திகதி யாழ்ப்பாணம் ராஜா திரையரங்கில் வெளியாகி மக்களின் அமோக ஆதரவைப் பெற்ற " விலங்கு தெறிக்கும் " திரைப்படம் தொடர்ந்து மன்னார், வவுனியா, மல்லாவி, கிளிநொச்சி போன்ற இடங்களிலும்...

கமலின் படங்களுக்கு கர்நாடகாவில் தடை?

0
சென்​னை​யில் அண்​மை​யில் நடை​பெற்ற ‘தக் லைஃப்’ திரைப்பட நிகழ்​வில் நடிகரும் மக்​கள் நீதி மய்​யத்​தின் தலை​வரு​மான கமல்​ஹாசன் பேசுகை​யில், “தமிழில் இருந்து பிறந்தது தான் கன்​னடம்​” என குறிப்​பிட்​டார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரி​வித்​துள்ள...

செய்தி

யாழில் 17 சபைகளிலும் தமிழரசுக் கட்சியே ஆட்சியமைக்கும்!

0
"எந்தக் கட்சிக்குக் கூடுதலான ஆசனங்கள் இருக்கின்றனவோ அந்தக் கட்சிக்கு ஆதரவளிப்போம் என்று கூறியவர்கள் திடீரெனக் கட்சி என்ற சொற்பதத்தைத் தவிர்த்து அணி எனச் சொல்லத் தொடங்கினார்கள். உதிரிகளை இணைத்துக்கொண்டு இலங்கைத் தமிழரசுக் கட்சியைவிட...

யாழில் சில சபைகளில் என்.பி.பி. ஆட்சியமைக்கும்!

0
"யாழ்ப்பாணம் மாவட்டத்தின் ஒரு சில உள்ளூராட்சி சபைகளில் தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைப்பதற்கான சூழல் ஏற்பட்டிருக்கின்றது. அதற்கான முயற்சிகளை நாங்கள் கண்டிப்பாக மேற்கொள்வோம்." - இவ்வாறு கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். யாழ்.காங்கேசன்துறை ரயில்...

தாய், மகள் உட்பட நால்வர் நீரில் மூழ்கி பலி!

0
பொலன்னறுவை மாவட்டத்துக்குட்பட்ட திம்புலாகல எல்லவெவ வாவியில் மூழ்கி நால்வர் பரிதாபகரமாக பலியாகியுள்ளனர். தாய், மகள் மற்றும் இளம் தம்பதியினர் ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பு, இரத்மலானை பகுதியைச் சேர்ந்தவர்கள் இன்று காலை...