நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (10) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…
மலையக மக்களை மாற்றான் தாய் பிள்ளைகளாக நடத்த வேண்டாம்!
மலையகப் பெருந்தோட்ட மக்கள் அனைவருக்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊடாகக் காணி உரிமை உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனத் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார்.
கொட்டக்கலையில் நேற்று நடைபெற்ற ‘மலையக வாழ்வுரிமை மாநாட்டில்’ கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
மாநாட்டில் தொடர்ந்தும் உரையாற்றிய மனோ கணேசன் எம்.ப். குறிப்பிட்டதாவது:-
“காணி, வீடு, மற்றும் நியாயமான ஊதியம் ஆகிய மூன்றே ஒரு சமூகத்தின் வாழ்வுரிமையைத் தீர்மானிக்கும் பிரதான காரணிகளாகும். இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மக்கள் ஏனைய சமூகங்களை விடப் பொருளாதார ரீதியாகப் பின்தங்கியுள்ளனர். எனினும், நாம் எவருக்கும் தாழ்ந்தவர்கள் அல்ல. 1948-இல் பறிக்கப்பட்ட எமது குடியுரிமை, நீண்ட போராட்டங்களுக்குப் பின்னரே மீளப் பெறப்பட்டது.
நல்லாட்சி அரசாங்கத்தின் நான்கு வருடக் காலப்பகுதியில் மாத்திரமே நாம் அதிகாரத்தில் இருந்தோம். அந்தக் குறுகிய காலத்தில் 7 பேர்ச் காணி உரிமை, தனி வீட்டுத் திட்டம், மலையக அதிகார சபை மற்றும் பாடசாலைகளுக்கான காணி ஒதுக்கீடு போன்ற பல அபிவிருத்திகளை முன்னெடுத்தோம். ஆனால், 40 வருடங்களாகப் பல்வேறு அரசாங்கங்களுடன் ஒட்டிக்கொண்டிருந்தவர்கள் எதனையும் செய்யவில்லை.” – என்றார்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்த அவர், மலையக மக்களுக்கு வெறும் ‘கண்காட்சிகளை’ காட்ட வேண்டாம் எனவும், முறையான ஆட்சியை வழங்குமாறும் கேட்டுக்கொண்டார்.
அவர் மேலும் கூறுகையில்,
“பெருந்தோட்டங்களில் வேலை செய்தாலும் செய்யாவிட்டாலும், அங்கு வாழும் அனைத்து மக்களுக்கும் காணி உரிமை வழங்கப்பட வேண்டும். பயிரிடப்படாத காணிகளை மக்களுக்குப் பகிர்ந்தளிப்பதாக ‘ஹட்டன் பிரகடனத்தில்’ ஜனாதிபதி அறிவித்திருந்தார். ஆனால் அது இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
அனுராதபுரம் மற்றும் குருணாகல் பகுதிகளில் சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 50 இலட்சம் ரூபாய் வழங்கி உதவிய அரசாங்கம், மலையகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அந்த உதவியை வழங்கவில்லை. நாம் ஒன்றும் மாற்றான் தாய் பிள்ளைகள் அல்லர்.” – என்றார்.
டிக்கோயா – கிழங்கன் ஆதார வைத்தியசாலையின் பிணவறையில் சகோதரி ஒருவரின் சடலத்திற்கு நேர்ந்த அசாம்பவிதம் தொடர்பில் தான் உரிய அமைச்சருடனும் பொலிஸ் அதிகாரிகளுடனும் பேசியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இது குறித்து நாளைக்குள் முறையான நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் பாரிய தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்க நேரிடும் என்றும் எச்சரித்தார்.
இறுதியாக, மலையகத்தில் விரைவில் ஒரு பலமான ‘தொழிற்சங்க சம்மேளனம்’ உருவாக்கப்படும் என்றும் அவர் இதன்போது பிரகடனம் செய்தார்
ஹார்முஸ் நீரிணையை முடக்கினால் ஈரான் மீது இருபது மடங்கு தாக்குதல்: ட்ரம்ப் எச்சரிக்கை
ஹார்முஸ் ஜலசந்தியில் எண்ணெய் விநியோகத்தை தடுக்கும் பணியில் ஈடுபட்டால், ஈரான் மீது இன்னும் கடுமையாக தாக்குதல் நடத்தப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளின் தாக்குதல் தீவிரமடைந்துள்ளது. இதனால், வளைகுடா நாடுகளில் பெரும் பதற்றம் நிலவுகிறது.
ஈரானும் அமெரிக்க ராணுவ தளங்கள் அமைந்துள்ள வளைகுடா நாடுகள் மீது பதில் தாக்குதல் மேற்கொண்டுள்ளது. இதனால் வளைகுடா நாடுகளில் கச்சா எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கச்சா எண்ணெய் சரக்கு போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் கச்சா எண்ணெய் விநியோகம் தடைபட்டுள்ளது. சர்வதேச நாடுகளில் எரிபொருள் மற்றும் எரிவாயு விலை ஏற்றம் கண்டுள்ளது. கச்சா எண்ணெய் விலையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், ஈரானுக்கு புதிய எச்சரிக்கை ஒன்றை ட்ரம்ப் கொடுத்துள்ளார்.
“ஹார்முஸ் ஜலசந்தியில் எண்ணெய் விநியோகத்தை தடுக்கும் பணியை ஈரான் செய்தால், அவர்கள் இதுவரை எதிர்கொண்ட தாக்குதலை காட்டிலும் இருபது மடங்கு கூடுதலாக மிக கடுமையான தாக்குதலை அமெரிக்கா மேற்கொள்ளும்” என ட்ரம்ப் கூறியுள்ளார்.
மத்திய கிழக்கில் அமைதியை வலியுறுத்துகிறது சீனா! மக்கள்மீதான தாக்குதலுக்கு கண்டனம்!!
உக்கிர போர் சூழலுக்கு மத்தியில், மத்திய கிழக்குக்கான சீனாவின் சிறப்பு தூதுவர் Zhai Jun, சவுதி அரேபியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
அமைதி முயற்சியை முன்னெடுக்கும் நோக்கிலேயே அவரது விஜயம் அமைந்துள்ளது என தெரியவருகின்றது.
வளைகுடா பிராந்தியத்தில் பாதுகாப்பையும், ஸ்தீரத்தன்மையையும் உறுதிப்படுத்த சவுதியுடன் இணைந்து செயல்பட சீனா தயாராக உள்ளதாகத் தெரிவித்தார்.
சவுதி வெளிவிவகார அமைச்சர் மற்றும் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலின் தலைவருடன் நடத்திய ஆலோசனையில், பிராந்தியத்தின் இறைமையைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.
அப்பாவிப் பொதுமக்கள் மற்றும் இராணுவமற்ற இலக்குகள் மீதான தாக்குதல்களைக் கண்டித்த சீனா, இராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.
சீனாவின் இந்த நகர்வு, தற்போதைய பதட்டமான சூழலில் ஒரு முக்கியமான சமரச முயற்சியாக பார்க்கப்படுகிறது. இது பிராந்திய அமைதிக்காக சர்வதேச நாடுகளுடன் சீனா கொண்டுள்ள உறவின் வலிமையை வெளிப்படுத்துகிறது.
தொடரும் சோகம்!
இந்திய அணி நேற்று பெற்ற வெற்றிமூலம் நியூசிலாந்தின் உலகக்கோப்பை கனவு மீண்டும் ஒருமுறை தகர்ந்துள்ளது.
அதன்படி கடந்த 11 ஆண்டுகளில் ஐசிசி நடத்தும் முக்கிய கிரிக்கெட் தொடர்களின் இறுதிப் போட்டிகளில் நியூசிலாந்து அணி தோல்வியைத் தழுவுவது இது 6-வது முறையாகும்.
இதுவரை 8 முறை ஐசிசி தொடர்களின் இறுதிப் போட்டிகளுக்கு நியூசிலாந்து அணி தகுதி பெற்றுள்ளது. அதில் 2 முறை மட்டுமே (2000 சாம்பியன்ஸ் ட்ராபி, 2021 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்) வெற்றி பெற்றுள்ளது. மீதமுள்ள 6 முறை தோல்வியைச் சந்தித்துள்ளது.
2009 சாம்பியன்ஸ் ட்ராபி: ஆஸ்திரேலியாவிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி.
2015 ஒருநாள் உலகக்கோப்பை: ஆஸ்திரேலியாவிடம் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி.
2019 ஒருநாள் உலகக்கோப்பை: இங்கிலாந்துடன் நடைபெற்ற போட்டியில் பவுண்டரி கணக்கு அடிப்படையில் தோல்வி.
2021 டி20 உலகக்கோப்பை: ஆஸ்திரேலியாவிடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி.
2025 சாம்பியன்ஸ் டிராபி: இந்தியாவிடம் 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி.
2026 டி20 உலகக்கோப்பை: நேற்று அகமதாபாத்தில் நடைபெற்ற போட்டியில் இந்தியாவிடம் 96 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி.
இருப்பினும், ஐசிசி தொடர்களில் அதிகமுறை (14 முறை) அரையிறுதிக்கு முன்னேறிய அணி என்ற பெருமையை நியூசிலாந்து இப்போதும் தக்கவைத்துள்ளது.
சாதனைகளை படைத்த சாம்சன்
சஞ்சு சாம்சனுக்கு மறக்க முடியாத உலக கோப்பை இதுவாகும். உலக கோப்பையை வெல்ல அவரது அதிரடியான ஆட்டம் முக்கிய பங்கு வகித்தது.
அவர் 5 ஆட்டத்தில் 321 ரன் குவித்துள்ளார். இதில் 3 அரை சதம் அடங்கும். சராசரி 80.25 ஆகும். ஸ்டிரைக் ரேட் 199.37 ஆகும். இதனால் தொடர் நாயகன் விருது சஞ்சு சாம்சனுக்கு கிடைத்தது.
இந்த தொடரில் சஞ்சு சாம்சன் பல சாதனைகளை புரிந்துள்ளார். 321 ரன் குவித்தது மூலம் ஒரு உலகக் கோப்பையின் அதிக ரன் எடுத்த இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.
இதற்கு முன்பு 2014-ம் ஆண்டு விராட் கோஹ்லி 319 ரன் எடுத்ததே சாதனையாக இருந்தது.
சாம்சன் இந்த தொடரில் ரன் குவிப்பில் 3-வது இடத்தை பிடித்தார்.சாம்சன் 5 ஆட்டத்தில் 24 சிக்சர்கள் அடித்தார். இதன் மூலம் ஒரு உலகக் கோப்பையில் அதிக சிக்சர் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.
இதே தொடரில் 20 சிக்சர் அடித்த பின்ஆலன் (நியூசிலாந்து) 2-வது இடத்தில் உள்ளார்.
மேலும் சஞ்சு சாம்சன் 20 ஓவர் உலகக் கோப்பையில் தொடர்ந்து 3 ஆட்டங்களில் (97 ரன், 89 ரன். 89 ரன்) 80 ரன்களுக்கு மேல் எடுத்த 2-வது வீரர் என்ற சிறப்பை பெற்றுள்ளார்.
ஏற்கனவே இலங்கையின் மஹேலா ஜெய வர்த்தனே 2010-ம் ஆண்டு உலகக் கோப்பையில் இச்சாதனையை செய்துள்ளார்.89 ரன்கள் விளாசிய சாம்சன் 20 ஓவர் உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் அதிக ரன் எடுத்த வீரராக திகழ்கிறார்.
நடப்பு உலகக் கோப்பையில் சஞ்சு சாம்சன் மொத்தம் 24 சிக்சர் (5 ஆட்டம்) விளாசி சிக்சர் மன்னனாக வலம் வருகிறார். ஒரு உலகக் கோப்பையில் அதிக சிக்சர் அடித்த வீரர் இவர் தான்
பிரதமர் ஹரிணி பிலிப்பைன்ஸ் பயணம்!
பிரதமர் ஹரிணி அமரசூரிய பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவிற்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் அதிகாரப்பூர்வ அழைப்பின் பேரில் அவர் இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
மணிலாவில் அனைத்துலக பெண்கள் நாளை முன்னிட்டு, ஆசிய அபிவிருத்தி வங்கி தலைமையகத்தில் நடைபெறும் நிகழ்வில் சிறிலங்கா பிரதமர் முக்கிய உரை நிகழ்த்தவுள்ளார்.
அத்துடன் பிலிப்பைன்ஸ் அரசாங்க அமைச்சர்களுடனும் அவர் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தவுள்ளார்.
இலங்கையின் இறையாண்மைக்கு மதிப்பளிப்பு: அமெரிக்கா தெரிவிப்பு!
ஈரானிய போர்க்கப்பலான ஐஅர்ஐஎஸ் புஷேர் மற்றும் அதன் குழுவினர் தொடர்பான விடயங்களை எவ்வாறு கையாள்வது என்பது குறித்த முடிவுகளை எடுப்பதில், இலங்கையின் இறையாண்மையை மதிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் ஒருவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஈரானியக் கப்பல், அதன் 208 பணியாளர்கள் மற்றும் மீட்கப்பட்ட ஈரானிய மாலுமிகள் தொடர்பான இறுதி முடிவு, இலங்கையின் உள்நாட்டு சட்டங்கள் மற்றும் அனைத்துலக சட்டக் கடப்பாடுகளுக்கு ஏற்ப இலங்கையிடம் உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, மூழ்கடிக்கப்பட்ட ஈரானிய கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 32 மாலுமிகளில், 22 பேர் கராப்பிட்டிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், அங்கிருந்து விடுவிக்கப்பட்டு, கொக்கல விமானப்படை தளத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
ஏனைய 10 பேரும் கராப்பிட்டிய மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதாகவும், அவர்களில் 8 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
230 ஈரானிய கடற்படையினருக்கு 30 நாள் சலுகை விசா?
இலங்கை கடற்படையால் மீட்கப்பட்ட 230 ஈரானிய கடற்படையினருக்கு, 30 நாள் சலுகை நுழைவிசைவு வழங்கப்படும் என்று வழங்கப்படவுள்ளதென தெரியவருகின்றது.
ஐஆர்ஐஎஸ் டேனா என்ற கப்பலை அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் மூழ்கடித்த பின்னர், மீட்கப்பட்ட 32 ஈரானிய கடற்படையினரும், இரண்டாவது ஈரானிய கப்பலான ஐஆர்ஐஎஸ் புஷேரில் இருந்த 208 பேரும் இந்தக் குழுவில் அடங்கியுள்ளனர்.
இவர்களுக்கு நுழைவிசைவுவழங்குவது தொடர்பான நடவடிக்கைக்கு நாளை அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் கோரப்படும் என்று பொது பாதுகாப்பு அமைச்சின் அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் ஈரானிய குழுவிற்கு தங்குமிடம் மற்றும் பாதுகாப்பு வழங்கப்படும் என்றும், கொழும்பில் உள்ள ஈரானிய தூதரகத்திடமும் இது தொடர்பாக ஆலோசனை நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய அனைத்துலக சட்டங்களின்படி, அவர்களைத் திருப்பி அனுப்பப்படுவது தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.















