Home Blog Page 34

இஸ்ரேலுக்கு எதிராக நட்பு நாடுகள் போர்க்கொடி!

இஸ்ரேலுக்கு அதன் நட்பு நாடுகளான இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் கனடா ஆகியவை திடீர் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இதுதொடர்பாக இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரான், கனடா பிரதமர் மார்க் கார்னி ஆகியோர் வெளியிட்ட கூட்டு அறிக்கையில், காசாவில் ஏற்பட்டுள்ள நிலைமைகள் சகிக்க முடியாதது என சுட்டிக்காட்டியுள்ளனர்.

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அரசாங்கம் இந்த மோசமான நடவடிக்கைகளைத் தொடரும் வரை நாங்கள் காத்திருக்க மாட்டோம். இஸ்ரேல் தனது ராணுவத் தாக்குதலை நிறுத்தி, மனிதாபிமான உதவி மீதான கட்டுப்பாடுகளை நீக்காவிட்டால் இஸ்ரேலுக்கு எதிராக உறுதியான நடவடிக்கைகளை எடுப்போம்.

பொதுமக்களுக்கு அத்தியாவசிய மனிதாபிமான உதவியை இஸ்ரேல் தடுப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டத்தை மீறும் செயலாகும்.

இஸ்ரேல் உடனடியாக காசாவிற்கு முழுமையாக உதவியை மீண்டும் தொடங்க அனுமதிக்க வேண்டும் என்றும் மேற்படி நாடுகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் 3 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மனிதாபிமான உதவிகளை, காசாவிற்குள் முழுமையாக அனுமதிக்க இஸ்ரேல் முடிவு செய்துள்ளது.

உக்ரைன், ரஷ்யா போர் நிறுத்தம்: ட்ரம்ப் அறிவிப்பு!

 

ரஷ்யாவும் உக்ரைனும் உடனடியாக போர்நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கவுள்ளன.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடனான இரண்டு மணி நேர தொலைபேசி உரையாடலுக்குப் பிறகு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக தளத்தில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

“ரஷ்ய ஜனாதிபதியுடனான உரையாடல் மிகவும் சிறப்பாக நடந்தது என நான் நம்புகிறேன். ரஷ்யாவும் உக்ரைனும் உடனடியாக போர் நிறுத்தம் தொடர்பாக, இன்னும் முக்கியமாக, போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளைத் தொடங்க உள்ளன. அதற்கான நிபந்தனைகள் குறித்து இரு தரப்பினருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்படும்.” எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ரத்தக்களரியான பேரழிவு முடிந்ததும், அமெரிக்காவுடன் பெரிய அளவிலான வர்த்தகம் செய்ய ரஷ்யா விரும்புகிறது. அதை நான் ஒப்புக்கொள்கிறேன். ரஷ்யாவுக்கு மிகப் பெரிய அளவிலான வேலைவாய்ப்பு மற்றும் வளத்தை உருவாக்க மிகப் பெரிய வாய்ப்பு உள்ளது. அதன் ஆற்றல் அளவில்லாதது. அதேபோல், உக்ரைனும் தனது நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் செயல்பாட்டில், வர்த்தகத்தில் பெரும் பயனாளியாக இருக்க முடியும். ரஷ்யாவுக்கு உக்ரைனுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் உடனடியாகத் தொடங்கும்.” – எனவும் அமெரிக்க ஜனாதிபதி கூறியுள்ளார்.

புடினுடனான அழைப்புக்குப் பிறகு, உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான், இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி, ஜெர்மனி ஜனாதிபதி பிரீட்ரிக் மெர்ஸ், பின்லாந்து ஜனாதிபதி அலெக்சாண்டர் ஸ்டப் ஆகியோருக்கு நான் தகவல் தெரிவித்துள்ளேன்.

போப் பிரதிநிதித்துவப்படுத்தும் வாடிகன், இந்த பேச்சுவார்த்தையை முன்னெடுப்பதில் மிகவும் ஆர்வமாக இருப்பதாகக் கூறியுள்ளது. செயல்முறை தொடங்கட்டும்” என ட்ரம்ப் மேலும் தெரிவித்தார்.

பட்டலந்த அறிக்கை: ஐவரடங்கிய குழு இன்று கூடுகிறது!

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழு இன்று(20) முதன்முறையாக கூடவுள்ளது.

சட்ட மாஅதிபர் பாரிந்த ரணசிங்கவினால் சிரேஷ்ட மேலதிக சொலிஸிட்டர் ஜெனரல் ரொஹாந்த அபேசூரிய தலைமையில் ஐவரடங்கிய குழு நியமிக்கப்பட்டது.

குழுவின் ஏனைய உறுப்பினர்களாக பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் வசந்த பெரேரா, அரச சிரேஷ்ட சட்டத்தரணி ஜயனி வேகடபொல, அரச சட்டத்தரணி ஷக்தி ஜாகொட ஆரச்சி ஆகியோர் நியமிக்கப்பட்டிருந்தனர்.

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள சாட்சிகளினூடாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முடியுமா என்பது தொடர்பில் குறித்தக் குழுவினால் ஆராயப்படுகின்றது.

208 பக்கங்களைக் கொண்ட ஆணைக்குழு அறிக்கையை ஆய்வு செய்யும் போது வெளிக்கொணரப்படும் உண்மைகளின் அடிப்படையில் இறுதி அறிக்கையை உடனடியாக சட்ட மாஅதிபரிடம் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென குறித்தக் குழு தெரிவித்தது.

 

கொழும்பை ஆளப்போவது யார்? ஓங்குகிறது என்பிபியின் கை!

கொழும்பு மாநகர சபையில் அதிகாரத்தை நிலைநாட்ட, தேசிய மக்கள் சக்தியை ஆதரிக்க, சுயாதீன குழுக்களின் ஒன்பது பிரதிநிதிகள் முடிவு செய்துள்ளனர்.

மேற்படி மாநகர சபைக்கு சுயேட்சைக் குழுக்களின் கீழ் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்களுடன், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று நடத்திய கலந்துரையாடலைத் தொடர்ந்தே, இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

கொழும்பு மாநகர சபையில் உள்ள 117 இடங்களில் தேசிய மக்கள் சக்தி 48 இடங்களை வென்றது. ஐக்கிய மக்கள் சக்தி 29 இடங்களையும், ஐக்கிய தேசியக் கட்சி 13 இடங்களையும் வென்றது.

மேலும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 05 இடங்களையும், முஸ்லிம் காங்கிரஸ் 04 இடங்களையும், சுயேட்சைக் குழு எண் 03 இடங்களையும், சர்வ ஜன பலய கட்சி 02 இடங்களையும் வென்றன. அத்துடன், சுயேட்சைக் குழுக்கள் எண் 04 மற்றும் எண் 05 ஆகியவை, தலா 2 இடங்களை வென்றன.

இதேபோல், தேசிய சுதந்திர முன்னணி, பொதுஜன பெரமுன, ஜனநாயக தேசிய முன்னணி, தேசிய மக்கள் முன்னணி, ஐக்கிய குடியரசு முன்னணி, அத்துடன் சுயேச்சைக் குழு ஆகியவை தலா 01 மற்றும் 02 இடங்களை வென்றன.

இத்தகைய பின்னணியில்தான், சுயாதீன குழுக்களின் பிரதிநிதிகள் நேற்று ஜனாதிபதியுடன் கலந்துரையாடினர்.

இதற்கிடையில், அரசாங்கத்திற்கு பெரும்பான்மை இல்லாத உள்ளூராட்சி நிறுவனங்களில் அதிகாரத்தை அமைப்பதற்காக, மற்ற எதிர்க்கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய தேசியக் கட்சியும் நேற்று உடன்பாட்டை எட்டின.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட குழுவினருக்கும் ஐக்கிய தேசியக் கட்சி பிரதிநிதிகள் குழுவினருக்கும் இடையில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற சிறப்புக் கலந்துரையாடலைத் தொடர்ந்து இத்தீர்மானம் எட்டப்பட்டது.

அதன் பிறகு, இரு கட்சிகளும் இரு கட்சிகளின் பொதுச் செயலாளர்கள் கையெழுத்திட்ட கூட்டு அறிக்கையை வெளியிட்டன. அதில், அரசாங்கத்திற்கு பெரும்பான்மை இல்லாத உள்ளூராட்சி நிறுவனங்களில் மற்ற எதிர்க்கட்சிகளுடன் கூட்டணி அமைக்க உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது.

குட்டி சபைகளில் எதிரணிகளின் கூட்டு அரசாங்கம் சாத்தியமா?

எதிரணிகள் பெரும்பான்மை பலத்தை பெற்றுள்ள உள்ளுராட்சிசபைகளில் இணைந்து ஆட்சியமைப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி என்பன தீர்மானித்துள்ளன.

இது தொடர்பில் ஏனைய கட்சிகளுடனும் பேச்சு நடத்தி, இவ்வாரத்துக்குள் இறுதி நிலைப்பாட்டை எட்டுவதற்கும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்திக்கும், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையிலான விசேட சந்திப்பு நேற்று கொழும்பில் நடைபெற்றது.

ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, சிரேஷ்ட உப தலைவர் லக்ஷ்மன் கிரியல்ல, பிரதி பொதுச்செயலாளர் முஜிபூர் ரஹ்மான் ஆகியோர் பங்கேற்றனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் அதன் பொதுச்செயலாளர் தலதா அத்துகோரள, பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன, தவிசாளர் வஜிர அபேவர்தன மற்றும் தேசிய அமைப்பாளர் சாகல ரத்நாயக்க ஆகியோர் மேற்படி சந்திப்பில் கலந்துகொண்டனர்.

சந்திப்பு முடிவடைந்த பின்னர் இரு கட்சிகளின் செயலாளர்களும் கூட்டறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
அவ்வறிக்கையிலேயே எதிரணிகள் பெரும்பான்மை பலத்தை பெற்றுள்ள சபைகளில் இணைந்து ஆட்சியமைக்க இணக்கம் எட்டப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, பொதுஜன ஐக்கிய முன்னணி உள்ளிட்ட தரப்புகளும் இணைந்து ஆட்சியமைக்க ஆதரவு தெரிவித்துள்ளன. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியும் சாதகமான நிலைப்பாட்டிலேயே உள்ளது.

சுமார் 132 உள்ளுராட்சி சபைகளில் ஐக்கிய மக்கள் சக்தி தலைமையில் ஆட்சி மலரும் எனக் கூறப்படுகின்றது.

அதேவேளை, கொழும்பு மாநகரசபை உட்பட முக்கிய சபைகளில் சுயாதீன உறுப்பினர்கள் மற்றும் தனிப்பட்ட உறுப்பினர்களின் ஆதரவுடன் ஆட்சியமைப்பதற்குரிய முயற்சியில் அரசாங்கமும் ஈடுபட்டுவருகின்றது.

ஜெனிவாவில் வெளியக விசாரணைக்கு உரமூட்டுகிறது அரசு! மொட்டு கட்சி குற்றச்சாட்டு

இலங்கைக்கு எதிராக ஜெனிவாவில் முன்னெடுக்கப்பட்டுவரும் வெளியகப் பொறிமுறைக்கு உரமூட்டும் வகையிலேயே அமைச்சர் பிமல் ரத்நாயக்க கருத்து வெளியிட்டுவருகின்றார் – என்று முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“பட்டலந்தையில் தமது சிங்கள மக்களையே சித்திரவதைக்குட்படுத்தியவர்கள், போர் காலத்தில் தமக்கு தெரியாத தமிழ் மக்களை எப்படி கவனித்திருப்பார்கள் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க நாடாளுமன்றத்தில் சந்தேகம் எழுப்பியுள்ளார்.
போர்க்குற்றம் தொடர்பில் ஜெனிவாவில் முன்னெடுக்கப்பட்டுவரும் வெளியக பொறிமுறைக்கு உரமூட்டும் வகையிலேயே இந்த அறிவிப்பு அமைந்துள்ளது.

நாடாளுமன்றத்தில் வைத்து இப்படி கருத்து வெளியிட்டால் அது ஹென்சாட்டில் இடம்பெறும். பின்னர் அதனை சாட்சியாக எடுத்துக்கொள்ளக்கூடும்.
போர் இடம்பெறும் காலப்பகுதியில் பிமல் ரத்நாயக்க எங்கே இருந்தார்? புலிகள் அப்பாவி மக்களை கொலை செய்யும்போது அவர் என்ன செய்தார்?

2 லட்சத்துக்கு 95 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்களை பாதுகாத்து – மீட்டெடுத்தே நாம் போரை முடிவுக்கு கொண்டுவந்தோம். இது தமிழ் மக்களுக்கு எதிரான போர் அல்ல. புலிகள் அமைப்புக்கு எதிரான போராகும்.

இலங்கைப் படையினர் போர்க்குற்றங்களில் ஈடுபடவில்லை. சர்வதேச நிபுணர்களும் இதனை குறிப்பிட்டுள்ளனர். நிலைமை இப்படி இருக்கையில் தமிழ் டயஸ்போராக்களுக்கு ஒத்துழைப்பு வழக்கும் வகையிலேயே பிமல் ரத்நாயக்க கருத்து வெளியிட்டுவருகின்றார்.

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த 11 பேர் கைது!

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக பஞ்சாப், ஹரியானா, உ.பி. ஆகிய 3 மாநிலங்களில் யூடியூபர் முதல் மாணவர் வரை 11 பேரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இந்தியாவில் நாசவேலைகளை அரங்கேற்ற எல்லையில் தீவிரவாதிகளை பாகிஸ்தான் ராணுவம் ஊடுருவச் செய்கிறது. மேலும் இந்தியாவில் பணத்துக்கு மயங்கும் ஆட்களை பிடித்து பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த தகவல்களை பெற்று சதி வேலையில் ஈடுபடுகிறது.

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவில் பாகிஸ்தானின் உளவு நெட்வொர்க்கை தகர்க்கும் நடவடிக்கையில் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இதில் பஞ்சாப், ஹரியானா மற்றும் உ.பி.யில் 11 பேரை அதிகாரிகள் சமீபத்தில் கைது செய்துள்ளனர். அவர்களைப் பற்றிய விவரம் வெளியாகியுள்ளது.

ஜோதி மல்ஹோத்ரா: இவர், ஹரியானா மாநிலம் ஹிசார் நகரை சேர்ந்த 33 வயது யூடியூபர். ‘டிராவல் வித் ஜேஓ’ என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றிய டேனிஷ் என்ற அதிகாரியுடன் இவருக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. மேலும் டெல்லியில் அசன்-உர்-ரஹிம் பாகிஸ்தான் அதிகாரியை சந்தித்துள்ளார். கடந்த 2004-ல் இவர் 2 முறை பாகிஸ்தான் சென்று ரகசிய தகவல்களை பகிர்ந்துகொண்டுள்ளார்.

தேவேந்திர சிங் தில்லான் (25): இவர், பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் உள்ள கல்சா கல்லூரியின் எம்ஏ (அரசியல் அறிவியல்) முதலாமாண்டு மாணவர்.

சிறிது காலத்துக்கு முன்பு ஐஎஸ்ஐ உடன் இவருக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதன் பிறகு இந்தியாவுக்கு எதிராக உளவு நடவடிக்கையில் ஈடுபடத் தொடங்கினார். இவர் கடந்த 12-ம் தேதி ஹரியானாவில் கைது செய்யப்பட்டார். இவர் கடந்த

2004-ல் பாகிஸ்தான் எல்லையில் உள்ள கர்தாபூர் சாகிப் சென்றுள்ளார். அப்போது ஐஎஸ்ஐ அதிகாரிகளிடம் பாட்டியாலா ராணுவ கன்டோன்மென்ட் படங்கள் உட்பட முக்கிய தகவல்களை பகிர்ந்து கொண்டதாக ஒப்புக்கொண்டுள்ளார்.

முகம்மது டரிப்: இவர், ஹரியானாவின் நூ மாவட்டம் கங்கர்கா கிராமத்தை சேர்ந்தவர். இவர் சிர்சா விமானப் படை தளம் உட்பட பாகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து பாகிஸ்தானுடன் பகிர்ந்து வந்துள்ளார்.

அர்மான் (23): இவர், ஹரியானாவின் நூ மாவட்டத்தில் 16-ம் தேதி கைது செய்யப்பட்டார். இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் உச்சத்தில் இருந்தபோது முக்கிய தகவல்களை இவர் பகிர்ந்து கொண்டதாக இவரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

நவுமான் இலாகி: ஹரியானாவில் காவலாளியாக பணியாற்றி வந்த இவர் பானிபட் நகரில் சில நாட்களுக்கு முன் கைது செய்யப்பட்டார். உ.பி.யை சேர்ந்த இவர் பாகிஸ்தானில் உள்ள ஐஎஸ்ஐ ஆட்களுடன் தொடர்பில் இருந்துள்ளார். உளவுத் தகவல்களுக்கு பாகிஸ்தானில் இருந்து தனது மைத்துனரின் வங்கிக் கணக்கில் பணம் பெற்று வந்துள்ளார்.

ஷாஜாத்: உ.பி.யின் ராம்பூரில் சொந்த தொழில்நடத்தி வருபவர் ஷாஜாத், மொராதாபாத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார். இவர் பலமுறை பாகிஸ்தான் சென்று வந்துள்ளார். தேசப் பாதுகாப்பு தொடர்பான தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார். மேலும் அங்கிருந்து அழகுசாதனப் பொருட்கள், துணிகள் மற்றும் மசாலாப் பொருட்களை கடத்தி வந்துள்ளார்.

முகம்மது முர்தாசா அலி: ஜலந்தரில் நடந்த சோதனையில் இவர் கைது செய்யப்பட்டார். இவரே உருவாக்கிய மொபைல் செயலி மூலம் தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார். இவரிடம் 4 மொபைல் போன்கள் மற்றும் 3 சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இவர்களை தவிர பஞ்சாபில் கசாலா என்ற பெண் மற்றும் யாமின் முகம்மது, சுக்பிரீத் சிங், கரன்பீர் சிங் என்ற 3 இளைஞர்களை உளவு நடவடிக்கைக்காக போலீஸார் கைது செய்துள்ளனர்.

மரக்கறி விலைப்பட்டியல் (20.05.2025)

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (20) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…

காசாவை முழுமையாக கைப்பற்ற நெதன்யாகு உறுதி

காசாவில் இஸ்ரேலின் உக்கிர தாக்குதல்களில் நேற்றும் பலஸ்தீனர்கள் பலர் கொல்லப்பட்ட நிலையில், பட்டினி நெருக்கடியை தவிர்ப்பதற்கு காசாவுக்கு ‘அடிப்படை அளவான’ உணவை அனுமதிக்க இஸ்ரேல் உறுதி அளித்துள்ளது.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே மறைமுக போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை இடம்பெற்று வருவதோடு, காசாவில் புதிதாக தீவிரப்படுத்தி இருக்கும் தாக்குதல்களில் ‘விரிவான தரைவழி படை நடவடிக்கை’ ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக இஸ்ரேல் இராணுவம் அறிவித்து சில மணி நேரங்களின் பின்னரே உதவிகளுக்கு அனுமதி அளிக்கும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதில் காசா முழுவதையும் இஸ்ரேல் கைப்பற்றும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேற்று அறிவித்துள்ளார். ‘மோதல் தீவிரமடைந்திருப்பதோடு நாம் முன்னேற்றம் கண்டுள்ளோம். அனைத்து நிலத்தையும் நாம் கைப்பற்றுவோம்’ என்று டெலிகிராமில் வெளியிட்ட வீடியோ பதிவில் நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.

காசாவில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக நீடிக்கும் முழுமையான முற்றுகையை அகற்றுவதற்கு, பிரதான ஆதரவு நாடான அமெரிக்கா உட்பட சர்வதேச அளவில் இஸ்ரேல் மீது அழுத்தம் அதிகரித்துள்ளது.

இராணுவத்தின் பரிந்துரை அடிப்படையில் ‘காசா பகுதியில் பட்டினி நெருக்கடி ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் மக்களுக்கான அடிப்படை அளவான உணவுகள் செல்வதற்கு இஸ்ரேல் அனுமதி அளிக்கும்’ என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அலுவலகம் கடந்த ஞாயிறன்று வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறான நெருக்கடி இராணுவத்தின் புதிய நடவடிக்கையை சீர்குலைக்கக் கூடும் என்றும் இந்த மனிதாபிமான உதவியை ஹமாஸ் கைப்பற்றுவதை தடுப்பதற்கு இஸ்ரேல் செயற்படும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் காசாவில் சரமாரி தாக்குதல்கள் இடம்பெறுவதோடு தெற்கு நகரான கான் யூனிஸில் உக்கிர தாக்குதல்கள் நீடிப்பதாக மீட்பாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதல்களில் நேற்று காலை தொடக்கம் 11 பேர் கொல்லப்பட்டிருப்பதோடு மேலும் பலர் காயமடைந்திருப்பதாக காசா சிவில் பாதுகாப்பு நிறுவனத்தின் பேச்சாளர் மஹ்மூத் பசல் குறிப்பிட்டுள்ளார். அருகில் இருக்கும் அப்சான் பகுதியில் மேலும் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

காசாவின் மற்ற பகுதிகளில் இடம்பெற்ற தாக்குதல்களில் மேலும் 11 பேர் பேர் வரை கொல்லப்பட்டிருப்பதோடு இதில் ஒரே குடும்பத்தின் மூவரும் அடங்குகின்றனர்.

இந்நிலையில் நேற்றுக் காலை தொடக்கம் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் 46 ஆக அதிகரித்துள்ளது. அதேபோன்று காசாவின் இரண்டாவது மிகப்பெரிய நகரான கான் யூனிஸில் இருந்து மக்களை வெளியேறும் உத்தரவை இஸ்ரேல் இராணுவம் நேற்று பிறப்பித்தது. கான் யூனிஸ் நிர்வாகப் பகுதி அபாயகரமான போர் வலயமாக கருதப்படுவதாக எக்ஸ் சமூகதளத்தில் வெளியிட்ட அறிவிப்பில் இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

கடந்த மார்ச் 2 ஆம் திகதி தொடக்கம் காசாவுக்கான உதவிகள் செல்வதை இஸ்ரேல் முற்றாக முடக்கி இருப்பதோடு பலஸ்தீன போராட்ட அமைப்பு மீது அழுத்தம் கொடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக இஸ்ரேல் குறிப்பிடுகிறது. எனினும் காசாவில் உணவு, சுத்தமான நீர், எரிபொருள் மற்றும் மருந்துகளுக்கு கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாக ஐ.நா. நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.

கடந்த வாரம் பிராந்தியத்திற்கு விஜயம் மேற்கொண்ட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ‘பெரும் எண்ணிக்கையான மக்கள் பட்டினியில் இருப்பதாகவும்’, ‘அதனை நாம் கவனத்தில் கொள்வோம்’ என்றும் குறிப்பிட்டிருந்தார்.

உதவியை ‘உடனடியாகவும், பாரிய அளவிலும், தடையற்ற வகையிலும் அனுமதிப்பதற்கு’ இஸ்ரேலின் புதிய அறிவிப்பை பின்பற்றும்படி பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் ஜீன் நொவேல் பரொட் வலியுறுத்தியுள்ளார்.

பாப்பரசர் 14ஆம் லியோ, நேற்று முன்தினம் தனது முதல் ஆராதனை கூட்டத்தில், போர் காரணமாக வேதனைப்படும் சகோதர, சகோதரிகளை நம்பிக்கையாளர்கள் மறந்துவிடக் கூடாது என்று அழைப்பு விடுத்தார். ‘காசாவில் உயிர் தப்பிய குழந்தைகள், குடும்பங்கள் மற்றும் வயதானவர்கள் பட்டினியால் வாடுகின்றனர்’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேல் இராணுவம் கடந்த ஞாயிறன்று வெளியிட்ட அறிவிப்பில், துருப்புக்கள் வடக்கு மற்றும் தெற்கு காசா பகுதி முழுவதும் விரிவான தரைவழி நடவடிக்கைகளைத் ஆரம்பித்திருப்பதாகவும் தற்போது முக்கிய நிலைகளில் அவர்கள் நிலைநிறுத்தப்பட்டிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பணயக்கைதிகளை விடுவிப்பது மற்றும் ஹமாஸை வீழ்த்தும் இலக்குடன் படை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டிருப்பதாக இஸ்ரேல் குறிப்பிட்டபோதும் இரு தரப்பும் கட்டாரில் மறைமுக பேச்சுவார்த்தையையும் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றன.

உடன்பாடு ஒன்றை எட்டுவதற்கான முயற்சியாக டோஹா பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படுவதாக நெதன்யாகு அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. அமெரிக்காவின் மத்திய கிழக்கு தூதுவர் ஸ்டீவ் விட்கொப்பும் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்றுள்ளார்.

காசாவில் இரண்டு மாத போர் நிறுத்தம் முடிவுக்கு வந்ததை அடுத்தே கடந்த மார்ச் மாதம் தொடக்கம் இஸ்ரேல் காசா மீது மீண்டும் உக்கிர தாக்குதல்களை ஆரம்பித்தது. போர் நிறுத்தத்தை எட்டுவதில்; எகிப்து, கட்டாருடன் அமெரிக்காவும் மத்தியஸ்த முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

எனினும் ஹமாஸை முழுமையாக தோற்கடிக்காதவரை போரை முடிவுக்குக் கொண்டுவர நெதன்யாகு மறுத்து வருவதோடு, ஹமாஸ் இதற்கு எதிர்ப்பை வெளியிட்டு வருகிறது.

இந்நிலையில் விரிவான மற்றும் நிரந்தரமான போர் நிறுத்தம் ஒன்றுக்காக அனைத்து இஸ்ரேலிய பணயக்கைதிகளையும் விடுவிக்க தயாராக இருப்பாக பேச்சுவார்த்தையுடன் தொடர்புபட்ட ஹமாஸ் தரப்பு வலியுறுத்தி இருப்பதாக ஏ.எப்.பி. செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

எனினும் தற்காலிக போர் நிறுத்தம் ஒன்றுக்காக பணயக்கைதிகளின் ஒரு பகுதியினரை விடுவிக்க இஸ்ரேல் கோரி வருகிறது.

சினிமா

உயிரே… உறவே… தமிழே… நன்றி!

0
“எனக்கு உறுதுணையாக இருந்த தமிழகத்துக்கே நன்றி சொல்ல வேண்டும். நான் மேடையில் பேசும்போது, ‘உயிரே... உறவே... தமிழே...’ என்று சொன்னதற்கான அர்த்தத்தை முழுமையாக உணர்கிறேன்” என நடிகர் கமல்ஹாசன் நெகிழ்ச்சியுடன் பேசினார். மணிரத்னம் இயக்கத்தில்...

” விலங்கு தெறிக்கும் “

0
மார்ச் 14 ம் திகதி யாழ்ப்பாணம் ராஜா திரையரங்கில் வெளியாகி மக்களின் அமோக ஆதரவைப் பெற்ற " விலங்கு தெறிக்கும் " திரைப்படம் தொடர்ந்து மன்னார், வவுனியா, மல்லாவி, கிளிநொச்சி போன்ற இடங்களிலும்...

கமலின் படங்களுக்கு கர்நாடகாவில் தடை?

0
சென்​னை​யில் அண்​மை​யில் நடை​பெற்ற ‘தக் லைஃப்’ திரைப்பட நிகழ்​வில் நடிகரும் மக்​கள் நீதி மய்​யத்​தின் தலை​வரு​மான கமல்​ஹாசன் பேசுகை​யில், “தமிழில் இருந்து பிறந்தது தான் கன்​னடம்​” என குறிப்​பிட்​டார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரி​வித்​துள்ள...

செய்தி

தையிட்டியில் போராட்டம் நடத்த தடை!

0
  தையிட்டியில் போராட்டம் நடத்த தடை! தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட 27 பேருக்கு மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தால் நேற்று தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு...

சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் கைது!

0
சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல் தெனிய கைது செய்யப்பட்டுள்ளார். வாக்குமூலமளிப்பதற்காக சென்றிருந்த சந்தர்ப்பத்தில் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல் தெனியவை பணிநீக்கம் செய்வதற்கு நேற்று கூடிய...

ஒரு லட்சம்வரை சம்பளம் பெற்ற தோட்டத் தொழிலாளர்கள்!

0
  எல்பிட்டிய பெருந்தோட்ட யாக்கத்துக்கு உரித்தான பேர்லன்ஸ், கய்ப்புக்கலை மற்றும் ஹேரோ ஆகிய தோட்டங்களில் தொழில்புரியும் தொழிலாளர்கள், கடந்த மாதம் 70 ஆயிரம் ரூபா முதல் ஒ ரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாவரை...