இலங்கை, பங்களாதேஷ் உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து ஆராய்வு!
பங்களாதேஷின் பிரதமராக பதவியேற்றுள்ள தாரிக் ரஹ்மானை . அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.
பிரதமரின் பதவியேற்பு விழா டாக்காவில் நேற்று நடைபெற்றது. இதில் இலங்கையின் சார்பில் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ பங்கேற்றிருந்தார்.
இந்நிகழ்வின் பின்னர் பங்களாதேஷின் பிரதமரான தாரிக் ரஹ்மானை சந்தித்த அமைச்சர், இலங்கை அரசாங்கத்தின் சார்பாகத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை உறுதிப்படுத்திய தலைவர்கள், குறிப்பாக கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்துக் கலந்துரையாடினர்.
பங்களாதேஷிடம் இருந்து மருந்துப் பொருட்களைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகள் மற்றும் இருதரப்பு வர்த்தக மேம்பாடு குறித்தும் இந்த சந்திப்பில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.
மேலும், பங்களாதேஷின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும் இலங்கைத் தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் நலன் குறித்தும் இரு தரப்பினரும் ஆலோசித்தனர்.
மலையகத்தில் புதிய அத்தியாயம் ஆரம்பம்!
“மலையகத்தில் புதிய அத்தியாயத்துக்கு சிறப்பான ஆரம்பம் வழங்கப்பட்டுள்ளது.” -என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
“ இலங்கையில் காலகாலமாக இனவாதப் பிரச்சினைகள் மேலோங்கியே காணப்பட்டன. தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் வஞ்சிக்கப்பட்டனர். ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டனர்.
எனினும், நாடாளுமன்றத்தில் சலுகைகளைப் பெற்றுக்கொண்டு வாழ்ந்த அரசியல்வாதிகள் இன நல்லிணக்கத்தை மற்றும் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
மாறாக இனரீதியான பாகுபாட்டுக்கு தீணி போடுபவர்களாகவே செயல்பட்டனர்.
இப்படியானவர்களுக்கு மக்களின் வரிப்பணத்தில் சலுகைகள் எதற்கு? எனவே, ஓய்வூதியம் தேவை இல்லை.” எனவும் அமைச்சர் கூறினார்.
கடந்த காலங்களில் நாசமாக்கப்பட்டிருந்த நாட்டை தற்போதே கட்டியெழுப்பி புதிய அத்தியாயத்தை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கின்றோம். அனைத்து இன மக்களும் ஒன்றிணைந்து பயணிக்ககூடிய சூழலை ஏற்படுத்தியுள்ளோம்.
தமிழ் மக்களுக்கு கடந்தகாலங்களில் பாகுபாடு காட்டப்பட்டது. இந்நிலை தற்போது மாற்றப்பட்டுள்ளது. எவருக்கும் பிரிவினை காட்டப்படுவதில்லை.
கடந்த 200 வருடங்களாக இந்நாட்டுக்கு மலையக மக்கள் உழைத்தனர். அந்த சமூகம் தொடர்பில் கடந்தகாலங்களில் கவனம் செலுத்தப்படவில்லை. அவர்களுக்காக குரல் எழுப்படவில்லை.
இந்நிலைமையும் மாற்றப்பட்டுள்ளது. மலையகத்தில் புதிய அத்தியாயத்துக்கு சிறப்பான ஆரம்பம் வழங்கப்பட்டுள்ளது.
அதேவேளை, கடந்த கால அரசியல்வாதிகள் இனவாதம் மற்றும் மதவாதத்தை தூண்டி, நாட்டை படுபாதாளத்துக்குள் தள்ளுவதற்கு முற்படுகின்றனர். தமிழ் அரசியல்வாதிகள் சிலரும் இந்த செயலில் ஈடுபடுகின்றனர்.
எனினும், இனவாதம் மற்றும் மவாதத்தை தூண்டுவதற்கு இடமளிக்கமாட்டோம்.” – என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மேலும் கூறினார்.
பசறையில் உள்ளூர் உற்பத்தி மையம் திறப்பு!
“வளமான நாடு, அழகான வாழ்க்கை” என்னும் அரசாங்கத்தின் கருத்திட்டத்திற்கமைய, கிராமப்புற பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் பசறை தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள உள்ளூர் உற்பத்தி மையம் இன்று திறந்து வைக்கப்பட்டது.
இந்த உற்பத்தி மையத்தை கிட்டணன் செல்வராஜ் ஆரம்பித்து வைத்தார்.
இந்நிகழ்வில் உரையாற்றிய அவர்,
கிராம மக்களின் சுயதொழில் வாய்ப்புகளை அதிகரிப்பதோடு, உள்ளூர் வளங்களை பயன்படுத்தி உற்பத்தி நடவடிக்கைகளை மேம்படுத்துவதன் மூலம் குடும்பங்களின் வருமான நிலையை உயர்த்துவதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும் என தெரிவித்தார்.
மேலும்,இந்த உற்பத்தி மையம் ஊடாக சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கு தேவையான பயிற்சிகள், தொழில்நுட்ப ஆதரவு மற்றும் சந்தைப்படுத்தல் வசதிகள் வழங்கப்படவுள்ளதுடன், இளைஞர்கள் மற்றும் பெண்களின் தொழில் முனைவுத்திறனை ஊக்குவிக்கும் மையமாகவும் இது செயல்படும் எனவும் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வில் பிரதேச அதிகாரிகள், சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்
நடராஜா மலர்வேந்தன்
பசறை நிருபர்
சிறுவர் பராமரிப்புச் சீர்திருத்த சாசனம்: முதல் தெற்காசிய நாடாக இணைகிறது இலங்கை
சிறுவர் பராமரிப்பு சீர்திருத்தம் தொடர்பான உலகளாவிய சாசனத்தில் இணைவதற்கான உத்தியோகபூர்வ விருப்பத்தை இலங்கை இன்று வெளிப்படுத்தியது.
கொழும்பு 07, பௌத்தாலோக மாவத்தையிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் வளாகத்தில் வைத்து இவ்வாறு விருப்பம் தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிரிட்டன் துணை பிரதமர் டேவிட் லம்மி கலந்துகொண்டார்.
இலங்கை அரசாங்கத்தின் சார்பில், மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜினால் இதற்கான உத்தியோகபூர்வ விருப்பக் கடிதம் கையளிக்கப்பட்டது.
இலங்கை நீண்டகாலமாக ஐக்கிய நாடுகளின் சிறுவர் உரிமைகள் பிரகடனத்தில் (UNCRC) ஒரு பங்காளியாக இருந்து வருவதுடன், சர்வதேச சட்டங்களின் கீழ் சிறுவர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் தொடர்ச்சியாக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது.
சிறுவர்களுக்கான மாற்றுப் பராமரிப்பு தொடர்பான 2009 ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் வழிகாட்டுதல்கள், பெற்றோர் பராமரிப்பு அற்ற சிறுவர்களின் உரிமைகள் தொடர்பான 2019 பொதுச் சபை தீர்மானம் (A/RES/74/133), 2022 நிறுவனமயமாக்கலை நீக்குதல் தொடர்பான வழிகாட்டுதல்கள் (CRPD/C/5),
2022 கிகலி (Kigali) பிரகடனம் மற்றும் 2024 சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முதலாவது உலகளாவிய அமைச்சர்கள் மாநாடு ஆகியவற்றின் அடிப்படையில் இந்த உலகளாவிய சாசனம் உருவாக்கப்பட்டுள்ளது.
தற்போது வரை உலகில் 34 நாடுகள் இந்த சாசனத்தை அங்கீகரித்துள்ளன.
தெற்காசிய பிராந்தியத்தில் இதுவரை எந்தவொரு நாடும் இந்த சாசனத்தில் இணையாத நிலையில், அதில் இணையும் முதல் தெற்காசிய நாடாக இலங்கை திகழ்கின்றது.
இலங்கையின் தேசிய சிறுவர் பராமரிப்புக் கொள்கைகளை மேலும் வலுப்படுத்துவதும், அவற்றை சர்வதேச தரத்திற்கு ஏற்ப நடைமுறைப்படுத்துவதும் இந்த சாசனத்தில் இணைவதன் முதன்மை நோக்கமாகும்.
இந்நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர், சிறுவர்களின் நலன் என்பது வெறுமனே ஒரு வார்த்தையாக மட்டுமல்லாது, அது ஒரு நடைமுறையாக இருக்க வேண்டும்,” எனக் குறிப்பிட்டார்.
யுனிசெப் (UNICEF) மற்றும் இலங்கையிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் ஆகியன இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன.
அதிகாரப்பகிர்வு குறித்து இந்தியா எதுவும் பேசவில்லை: டில்வின் சில்வா தெரிவிப்பு!
“ இந்திய விஜயத்தின்போது அதிகாரப்பகிர்வு, மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் எதுவும் பேசப்படவில்லை. இது தொடர்பில் இந்திய தரப்பில் இருந்து எதுவும் கூறப்படவும் இல்லை.”
இவ்வாறு ஜே.வி.பியின் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பிரதான பங்காளிக்கட்சியான ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா தலைமையிலான குழுவினர் அண்மையில் இந்தியா சென்றிருந்தனர்.
நாடு திரும்பிய நிலையில் தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு இந்திய விஜயம் தொடர்பில் டில்வின் சில்வா நேர்காணல் வழங்கி இருந்தார்.
இதன்போது இலங்கை தரப்பினருடன் நடைபெறும் சந்திப்புகளின்போது அதிகாரப் பகிர்வு மற்றும் மாகாணசபை தொடர்பில் இந்திய தரப்பினர் வலியுறுத்துவது வழமை.
எனவே, தங்களின் விஜயத்தின்போது மாகாணசபை பற்றி பேசப்பட்டதா” என கேள்வி எழுப்பட்டது.
இதற்கு பதிலளித்த டில்வின் சில்வா ,
“ இந்திய வெளிவிவகார அமைச்சரை நாம் சந்தித்தோம். குஜராத் மாநிலத்துக்கு சென்று அம்மாநில முதல்வருடன் பேச்சு நடத்தினோம். கேரளாவுக்கு சென்று அம்மாநில முதல்வருடனும் கலந்துரையாடினோம்.
மேற்படி சந்திப்புகளின்போது மாகாணசபை உள்ளிட்ட மேற்படி காரணங்கள் தொடர்பில் பேசப்படவில்லை. அபிவிருத்தி தொடர்பில்தான் கலந்துரையாடப்பட்டன.
இந்திய வெளிவிவகார அமைச்சருடனான சந்திப்பின்போதும் இது பற்றி பேசப்படவில்லை நினைவூட்டல்கூட செய்யப்படவில்லை.
மாகாணசபைத் தேர்தலை நடத்த முடியாது என நாம் கூறவில்லை. அதனை நடத்தும் நிலைப்பாட்டிலேயே நாம் உள்ளோம்.
பொருளாதார அபிவிருத்தி அதற்குரிய தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதற்கு இந்தியா அர்ப்பணிப்புடன் செயல்பட்டுவருகின்றது.
எனவே, எமது விஜயத்தின்போது பொருளாதார முன்னேற்றமே முதன்மை காரணியாக இருந்தது.
எனினும், இலங்கையில் அரசியல் ரீதியில் அநாதைகளாக்கப்பட்டுள்ளவர்களே இரகசிய ஒப்பந்தம் என்றும், அதற்கான ஆரம்பக்கட்டமே இவ்விஜயம் எனவும் கதைகளை பரப்பி வருகின்றனர். அவ்வாறு எதுவும் இல்லை.” – என டில்வின் சில்வா மேலும் குறிப்பிட்டார்.
அணுசக்தி பேச்சும், இராணுவ அழுத்தமும்!
ஈரான் தனது அணுசக்தி திட்டங்கள் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் அதே வேளையில், சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் நீரிணையை தற்காலிகமாக மூடி தனது வலிமையை வெளிப்படுத்தியுள்ளது.
இந்த மூலோபாய நடவடிக்கை ஒருபுறம் இருக்க, மறுபுறம் இரு நாடுகளும் சுவிட்சர்லாந்தில் நடந்த ஆலோசனைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக நம்பிக்கை தெரிவித்துள்ளன.
ஈரானின் அணுசக்தி இலக்குகளைக் கட்டுப்படுத்த அமெரிக்கா தனது கடற்படை பலத்தை அப்பகுதியில் நிலைநிறுத்தி கடும் அழுத்தம் கொடுத்து வரும் சூழலில் இந்த விவாதங்கள் நடைபெறுகின்றன.
பொருளாதாரத் தடைகளை நீக்க ஈரான் கோரிக்கை வைக்கும் நிலையில், அமெரிக்கா சில கடுமையான நிபந்தனைகளை முன்வைப்பதால் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் நீடிக்கிறது.
போர் அச்சுறுத்தல்கள் மற்றும் ராணுவ பலப்பரீட்சைக்கு மத்தியிலும், வரும் வாரங்களில் விரிவான திட்டங்களை முன்வைக்க ஈரான் ஒப்புக்கொண்டுள்ளதால் இப்பிரச்சினை ஒரு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. இப்பேச்சுவார்த்தைகள் ஒரு இறுதி உடன்பாட்டை எட்டுமா அல்லது மோதலில் முடியுமா என்பதில் சர்வதேச அளவில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
சூப்பர் 8 சுற்றுக்குள் நுழையுமா பாகிஸ்தான்? இன்று பலப்பரீட்சை!
ICC T20 உலகக்கிண்ண தொடரில் இன்று (18) மூன்று முக்கிய லீக் போட்டிகள் நடைபெறவுள்ளன.
36 ஆவது லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதவுள்ளன. இந்தப் போட்டி அகமதாபாத் நகரில் இன்று இரவு 7 மணிக்கு ஆரம்பமாகிறது.
இந்திய அணி ஏற்கனவே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சூப்பர் 8 சுற்றுக்குள் தகுதி பெற்றுள்ளதால், இன்றைய போட்டியின் வெற்றி அல்லது தோல்வி அடுத்த சுற்று தகுதியில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது.
எனினும், அணியின் தொடர்ச்சியான வெற்றிப் பயணத்தை நிலைநிறுத்த இந்திய அணி உறுதியுடன் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, டெல்லியில் இன்று முற்பகல் 11 மணிக்கு நடைபெறும் 34 ஆவது லீக் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் தென் ஆபிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இந்தப் போட்டி இரு அணிகளுக்கும் முக்கியமானதாகக் கருதப்படுவதுடன், குறிப்பாக தென் ஆபிரிக்கா அணி தங்களது முன்னிலை நிலையை உறுதிப்படுத்தும் நோக்கில் விளையாட உள்ளது.
அதேபோல், கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் நடைபெறும் 25 ஆவது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் நமீபியா அணிகள் மோதுகின்றன.
இந்தப் போட்டி பாகிஸ்தான் அணிக்குப் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைவதற்காக பாகிஸ்தான் அணி இன்றைய போட்டியில் கட்டாயமாக வெற்றி பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால், இன்றைய போட்டிகள் ரசிகர்களுக்கு பரபரப்பான மற்றும் தீர்மானிக்கும் போட்டிகளாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது
பிரதீப் ரங்கநாதனின் ‘எல்.ஐ.கே’ மார்ச் 19 இல் ரிலீஸ்?
பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ படத்தை மார்ச் 19ஆம் திகதி வெளியிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘எல்.ஐ.கே’. இப்படத்துக்கு வெளியீட்டு திகதி அறிவிக்கப்பட்டு பின்பு தள்ளிவைக்கப்பட்டு வருகிறது. இதன் கிராபிக்ஸ் காட்சிகள் இறுதிகட்டத்தை எட்டியிருக்கிறது. இதனால் சரியான வெளியீட்டு திகதிக்காக காத்திருக்கிறது படக்குழு.
தற்போது மார்ச் 19ஆம் திகதி இப்படத்தை வெளியிடலாம் என்று படக்குழு முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. இதன் மலேசியா உரிமையை பெற்றியிருக்கும் நிறுவனம் மார்ச் 19ஆம் திகதி வெளியீடு என குறிப்பிட்டுள்ளது. ஆனால், படக்குழுவினர் இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. விரைவில் இதன் விளம்பரப்படுத்தும் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எஸ்.ஜே.சூர்யா, சீமான், கீர்த்தி ஷெட்டி, யோகி பாபு உள்ளிட்ட பலர் இப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுடன் நடித்துள்ளனர். இதன் ஒளிப்பதிவாளராக ரவி வர்மன், இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். இதனை 7 ஸ்கீரின் நிறுவனம் மற்றும் நயன்தாரா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.
மரக்கறி விலைப்பட்டியல் (18.02.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (18) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…















