டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர்8 சுற்று விறுவிறுப்பான கட்டத்தை எட்டிள்ளது. இதில் குரூப்2-ல் பல்லகெலேயில் இன்று நடக்கும் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான இங்கிலாந்து- பாகிஸ்தான் அணி கள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இவ்விரு அணிகளும் லீக் சுற்றில் தலா 3 வெற்றி, ஒரு தோல்வியுடன் சூப்பர்8-ஐ எட்டின.
சூப்பர்8 சுற்றில் பாகிஸ்தான் அணி தனது தொடக்க ஆட்டத்தில் நியூசிலாந்துடன் மோத இருந்தது. ஆனால் இந்த ஆட்டம் மழையால் ரத்தானதால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. எஞ்சிய இரு ஆட்டத்திலும் வெற்றி பெற்றால் அரைஇறுதியை அடைய முடியும் என்பதால் இன்றைய மோதல் பாகிஸ்தானுக்கு வாழ்வா-சாவா? ஆட்டமாக அமைந்துள்ளது.
பாகிஸ்தானின் பிரதான அஸ்திரமே சுழல் தாக்குதல் தான். நடப்பு உலகக் கோப்பையில் அவர்களின் சுழற்பந்து வீச்சாளர்கள் மொத்தம் 26 விக்கெட்டுகளை அறுவடை செய்திருக்கிறார்கள்.
குறிப்பாக ஓடி வந்து நின்றபடி வித்தியாசமாக பந்துவீசி திணறடிக்கும் உஸ்மான் தாரிக் தான் அவர்களின் துருப்பு சீட்டாக இருப்பார்.
பேட்டிங்கில் சவாலான ஸ்கோரை எட்ட வேண்டும் என்றால் பர்ஹான், பாபர் அசாம், கேப்டன் சல்மான் ஆஹா, சைம் அயூப் உள்ளிட்டோர் நிலைத்து நின்று ஆட வேண்டியது அவசியமாகும்.
