நுவரெலியா லயன்ஸ் கழகத்தின் 2026-2027 ஆம் ஆண்டுக்கான புதிய தலைவராக மகாலிங்கம் பெரியசாமி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அண்மையில் நடைபெற்ற கழகத்தின் உத்தியோகபூர்வ பதவியேற்பு விழாவில் அவர் தனது பதவியை ஏற்றுக்கொண்டார்.
நுவரெலியா, லவர்ஸ்லீப் (Lovers Leap) தோட்டத்தைச் சேர்ந்த மகாலிங்கம் – செல்லம்மா தம்பதியரின் புதல்வரான மகாலிங்கம் பெரியசாமி, தனது ஆரம்பக் கல்வி முதல் உயர்கல்வி வரை நுவரெலியா பரிசுத்த திரித்துவ மத்திய கல்லூரியில் (Holy Trinity Central College) பயின்றார்.
தொடர்ந்து கொட்டகலை ஆசிரியர் பயிற்சி கலாசாலைக்குத் தெரிவு செய்யப்பட்டு, 1997 ஆம் ஆண்டு பட்டதாரி ஆசிரியராகத் தனது கல்விச் சேவையை ஆரம்பித்தார். அவர் தற்போது நுவரெலியா பம்பரகலை வித்யாலயத்தின் அதிபராகச் செயலாற்றி வருகின்றார்.
இவர் கொழும்பு தேசிய கல்வி நிறுவகத்தில் (NIE) கல்வி இளமாணி (B.Ed) பட்டத்தைப் பெற்றுள்ளதுடன், பல்வேறு பொது அமைப்புகளிலும் இணைந்து தீவிரமாகச் செயற்பட்டு வருகின்றார்.
குறிப்பாக, நுவரெலியா இந்து கலாசார பேரவை மற்றும் சீதாஎலிய ஸ்ரீ சீதையம்மன் ஆலய நிர்வாகச் சபை ஆகியவற்றில் பல முக்கிய பதவிகளை வகித்துச் சேவை செய்துள்ளார்.
நுவரெலியா லயன்ஸ் கழகத்தில் கடந்த 7 வருடங்களாக உறுப்பினராகத் தொடர்ச்சியாகப் பணியாற்றி வந்த நிலையிலேயே, தற்போது அவர் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவருடன் கழகத்தின் புதிய செயலாளராக பாலகிருஷ்ணன் விதுசாந்த் மற்றும் பொருளாளராக ஆர். குணசேகரன் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
நுவரெலியா லயன்ஸ் கழகமானது 60 ஆண்டுகளைக் கடந்து, மலையகப் பிராந்தியத்தில் தொடர்ச்சியான சமூக மற்றும் மக்கள் நலச் சேவைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நுவரெலியா நிருபர் எஸ்.தியாகு










