புசல்லாவை இந்து தேசிய கல்லூரியின் புதிய நிரந்தர அதிபராக இராமன் பாலசந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனக் கடிதம் கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சின் செயலாளரால் நேற்று (17) அதிகாரப்பூர்வமாக வழங்கிவைக்கப்பட்டது.
புதிய அதிபராக நியமிக்கப்பட்டுள்ள இராமன் பாலசந்திரன் , முன்னதாக இப்பாடசாலையில் தற்காலிக அதிபராகக் கடமையாற்றிய காலத்தில், தனது சிறந்த நிர்வாகத் திறமையாலும் அர்ப்பணிப்புமிக்க கல்விச் சேவையாலும் அனைவரினதும் மதிப்பைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன் பின்னர் கம்பளை இந்து கல்லூரிக்கு இடமாற்றம் பெற்றுச் சென்று, அங்கும் தனது சிறந்த கல்விப் பணியைத் தொடர்ந்த அவர், தற்போது ஒரு முழுமையான, நிரந்தர அதிபராக மீண்டும் புசல்லாவை இந்து தேசிய கல்லூரிக்கு வருகை தந்துள்ளார்.
அவரது இந்த மீள்வருகையானது பாடசாலையின் கல்வி மற்றும் ஒழுக்க மேம்பாட்டை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
இராமன் பாலசந்திரன் அவர்களின் இந்த நியமனம் மற்றும் வருகைக்காக, தன்னோடு இணைந்து சகல வழிகளிலும் கைகோர்த்து, தொடர் முயற்சிகளையும் ஒத்துழைப்புகளையும் வழங்கிய அனைவருக்கும் பாடசாலை அபிவிருத்தி குழுவின் (SDC) செயலாளர் வீரப்பதேவர் பிரபாகர் அவர்கள் தனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துள்ளார்.
“எமது கல்லூரியின் இந்த முக்கியமான நகர்வுக்குப் பக்கபலமாக இருந்த பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் மற்றும் அதன் செயற்குழு உறுப்பினர்கள், அன்பான பெற்றோர்கள், நலன் விரும்பிகள் என அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைச் சமர்ப்பிக்கின்றேன்” எனக் கூறினார்.
