பிரித்தானியாவின் ஆளும் தொழிற்கட்சியின் தலைவராக ஆண்டி பர்ன்ஹாம் (Andy Burnham) வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டார்.
பிரித்தானிய மக்களுக்கு புதிய நம்பிக்கையையும், தடுமாற்றமடைந்துள்ள அரசாங்கத்திற்கு தெளிவான நோக்கத்தையும் கொண்டு வருவதாக உறுதியளித்துள்ள அவர், அடுத்த வாரம் பிரதமராகப் பதவியேற்பதற்கான தனது இறுதி கட்டத்தை எட்டியுள்ளார்.
மென்செஸ்டர் பெருநகரப் பகுதியின் (Greater Manchester) முன்னாள் மேயரான இவர், கட்சிக்குள்ளேயே ஏற்பட்ட கிளர்ச்சி காரணமாக பதவியில் இருந்து வெளியேற்றப்பட்ட முன்னாள் பிரதமர் கீர் ஸ்டார்மருக்கு (Keir Starmer) பதிலாக, மத்திய-இடதுசாரிக் கட்சியின் தலைமைத்துவப் போட்டியில் போட்டியிட்ட ஒரே வேட்பாளராவார்.
ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் (நாடாளுமன்றக் கீழ் சபை) இல் உள்ள 403 தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களில் 379 பேரின் ஆதரவை பர்ன்ஹாம் பெற்றதை அடுத்து, வெள்ளிக்கிழமை வெளியான இந்த அறிவிப்பு ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாகவே அமைந்தது.
“அரசியல் தங்களுக்கு மீண்டும் ஒருமுறை நம்பிக்கையைத் தரும் என மிக நீண்ட காலமாக காத்துக்கொண்டிருக்கும் மக்களுக்கும் பிரதேசங்களுக்கும்” சேவை செய்யப் போவதாக பர்ன்ஹாம் உறுதியளித்தார்.
தலைவராக ஆற்றிய தனது முதல் உரையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சி செயற்பாட்டாளர்கள் மற்றும் தொழிற்சங்கத் தலைவர்கள் முன்னிலையில் உரையாற்றிய அவர், “நாங்கள் அவர்களுக்கு மீண்டும் நம்பிக்கையைத் தரப் போகிறோம், நான் தயாராக இருக்கிறேன்” என்று குறிப்பிட்டார்.
