“இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடையத் தொடங்கியுள்ளது. வெகுவிரைவில் ஒரு முழுமையான வீழ்ச்சியைக் காண முடியும்.” என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இதில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார் என ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கை அரசாங்கம் எல்லாப் பக்கங்களிலும் சிக்கலில் உள்ளது. ஒருபுறம் பொருளாதார மந்தநிலையும், மறுபுறம் மனித உரிமை மீறல்களும் உள்ளன.
முன்னாள் படையினர் ஒடுக்கப்படுவதை நம்மால் காண முடிகிறது, அதே நேரத்தில் பௌத்த பிக்குகளும் அதே கதியை அனுபவிக்கின்றனர்.
வெகுவிரைவில் அரசாங்கம் பௌத்த சங்கங்களைக் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளும்.
வெகுவிரைவில் இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடைவதையும் காண முடியும்.
முன்னாள் அரச புலனாய்வு சேவை தலைவர் சுரேஷ் சாலேயின் கைது மற்றும் அவர் நடத்தப்படும் விதம் தொடர்பான பிரச்சினைகள் உள்ளன எனவும் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, எதிர்க்கட்சிகளிடையே ஒரு வலுவான பிணைப்பு தேவை. சில எதிர்க்கட்சிகள் ஒரு கூட்டு எதிர்க்கட்சியாக ஒன்றிணைந்துள்ளன.
எனினும், இந்தக் கூட்டமைப்பு விரிவுபடுத்தப்பட வேண்டும். கூட்டு எதிர்க்கட்சியை விரிவுபடுத்துவதற்காக நாங்கள் தற்போது பல கட்சிகளுடன் கலந்தாலோசித்து வருகிறோம்,” என்றும் ரணில் விக்ரமசிங்க மேலும் கூறியுள்ளார்.
