சிறைச்சாலைகளில் ஏற்பட்டிருந்த அமைதியற்ற சூழ்நிலை தற்போது முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று (07) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
மகசின் மற்றும் குருவிட்ட சிறைச்சாலைகளில் நிலைமை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், பள்ளன்சேன சிறைச்சாலையிலும் நிலைமை சீரடைந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக அவர் நாடாளுமன்றத்தில் மேலும் உரையாற்றுகையில்:
” நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலையடுத்து மஹர சிறைச்சாலையிலும் குழப்பம் ஏற்பட்டது. அதேபோல மகசின் சிறைச்சாலையில் நேற்றிரவு அமைதியின்மை ஏற்பட்டது. இன்று காலை குருவிட்ட சிறைச்சாலையிலும், அதனைத் தொடர்ந்து பள்ளன்சேன சிறைச்சாலையிலும் அசாதாரண சூழ்நிலை உருவாகியது.
மகசின் சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 10 பேர் காயமடைந்துள்ளனர். குருவிட்ட சிறைச்சாலையில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் 13 பேர் காயமடைந்து இரத்தினபுரி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பள்ளன்சேன சிறைச்சாலையில் 30 கைதிகள் சிறைக்கூரையின் மீது ஏறிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காலை உணவுக்காக வெளியே வந்த கைதிகள் மீண்டும் சிறைக் கூண்டுகளுக்குள் செல்ல மறுத்தமையினாலேயே அங்கு குழப்பம் ஏற்பட்டது.
தற்போது ஏனைய சிறைச்சாலைகளில் நிலைமை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. பள்ளன்சேன சிறைச்சாலையின் நிலைமையும் இன்னும் சில நிமிடங்களில் சீரடைந்துவிடும்” எனக் கூறினார்.
அதேவேளை, சிறைச்சாலைகளில் ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு, உண்மை கண்டறியப்படும் எனவும் அவர் கூறினார்.










