நாட்டில் நிலவி வரும் வறட்சியுடனான காலநிலை காரணமாக, பதுளை மாவட்டத்தில் உள்ள 5 பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த 2,227 குடும்பங்களைச் சேர்ந்த 8,383 பேர் தற்போது பாதிக்கப்பட்டுள்ளதாக பதுளை மாவட்டச் செயலகம் தெரிவித்துள்ளது.
இதன்படி, பதுளை பிரதேச செயலகப் பிரிவில் 592 குடும்பங்களைச் சேர்ந்த 2,090 பேரும், மஹியங்கனை பிரதேசத்தில் 1,392 குடும்பங்களைச் சேர்ந்த 5,167 பேரும், ரிதிமாலியத்த பிரதேசத்தில் 62 குடும்பங்களைச் சேர்ந்த 175 பேரும், கண்டகெட்டிய பிரதேசத்தில் 180 குடும்பங்களைச் சேர்ந்த 550 பேரும், ஹல்துமுல்ல பிரதேச செயலகப் பிரிவில் 96 குடும்பங்களைச் சேர்ந்த 401 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன் அடிப்படையில், மொத்தம் 2,227 குடும்பங்கள் நீர்த் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளன. அவர்களுக்குத் தேவையான நீர் வசதியை வழங்குவதற்காக பதுளை மாவட்டச் செயலாளர் சுனில் கலகம அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் பேரில் விசேட வழிகாட்டல் அறிவுறுத்தல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அந்த அறிவுறுத்தல்களுக்கு அமைவாக, மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவினால் விசேட வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
நீர் விநியோக நடவடிக்கைகளின் போது, குடிநீர் வசதி முற்றிலும் இல்லாத குடும்பங்கள், சிறு குழந்தைகள், கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் வயோதிபர்கள் வசிக்கும் குடும்பங்கள், பாடசாலைகள், முன்பள்ளிகள் மற்றும் சுகாதார நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கடுமையான நீர்த் தட்டுப்பாடு நிலவும் பகுதிகள் மற்றும் சாதாரண நீர் தேவையுடைய பகுதிகள் என முன்னுரிமை அடிப்படையில் நீர் விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மாவட்ட அனர்த்த நிவாரண சேவைப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, பதுளை மாவட்டத்தின் எந்தவொரு பகுதியில் குடிநீர் விநியோகம் தொடர்பாக பிரச்சினைகள் காணப்பட்டாலோ அல்லது மேலதிக தகவல்களைப் பெற வேண்டுமெனில், உதவி மாவட்டச் செயலாளரை 0715546685 என்ற தொலைபேசி இலக்கத்திலும், மாவட்ட அனர்த்த நிவாரண சேவை அதிகாரிகளை 0719456078 மற்றும் 0705166692 என்ற தொலைபேசி இலக்கங்களிலும் தொடர்புகொள்ள முடியும் என பதுளை மாவட்டச் செயலகம் தெரிவித்துள்ள
த.டிமேஷன்










