புசல்லாவை ரொச்சைல்ட் தோட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஐவர் முன்னெடுத்து வந்த உண்ணாவிரதப் போராட்டம் இன்று (19) பிற்பகல் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.
மேற்கண்ட ஐந்து தொழிலாளர்களுக்கும் மீண்டும் வேலை வழங்குவதற்குத் தோட்ட நிர்வாகம் உறுதிமொழி வழங்கியதை அடுத்தே, இந்த உண்ணாவிரதப் போராட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது எனத் தொழிலாளர் தேசிய முன்னணியின் உப தலைவர் சண்முகராஜ் தெரிவித்தார்.
தொழிலாளர்களுடன் இணைந்து இவரும் கடந்த மூன்று நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தான் நோய்வாய்ப்பட்டிருந்த நிலையிலும், தொழிலாளர்களுக்காக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத் தலைவர் சண்முகராஜுக்குத் தோட்ட மக்கள் தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.
ஐவருக்கும் வேலை வழங்க உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளதால் உண்ணாவிரதம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதாகவும், அவர்கள் அனைவரும் வரும் திங்கட்கிழமை முதல் வேலைக்குச் செல்வார்கள் என்றும் சண்முகராஜ் கூறினார். மலையகத்திலுள்ள ஏனைய தொழிற்சங்கங்களும் இப்போராட்டத்திற்குத் தங்களது ஆதரவை வழங்கியிருந்தன.
தோட்ட நிர்வாகத்தினால் அநீதியான முறையில் பணிநீக்கம் செய்யப்பட்ட தங்களை, எவ்வித நிபந்தனையுமின்றி மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ளக் கோரியே தொழிலாளர்கள் கடந்த 17 ஆம் திகதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலைநீக்கம் செய்யப்பட்ட ஐவருக்கும் மீண்டும் வேலை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி, தோட்டத் தொழிலாளர்கள் அனைவரும் இரண்டு நாட்கள் வேலைநிறுத்தப் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இதன் விளைவாக, இச்சம்பவம் குறித்து ஆராய்வதற்காக எதிர்வரும் 22 ஆம் திகதி திங்கட்கிழமை கம்பளை தொழிலாளர் திணைக்களத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்றிற்கான நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இக்கலந்துரையாடலின் போது தமக்குச் சாதகமான தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில், ஏனைய தொழிலாளர்கள் தங்களது பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தைத் தற்காலிகமாகக் கைவிட்டு, கடந்த 17 ஆம் திகதி முதல் மீண்டும் வேலைக்குத் திரும்பியிருந்தனர்.
எனினும், பணிநீக்கம் செய்யப்பட்ட ஐந்து தொழிலாளர்களும் தமக்கு உறுதியான தீர்வு கிடைக்கும் வரை தங்களது போராட்டத்தைத் தொடர்ந்தனர். இந்நிலையிலேயே, இன்று தமக்குச் சாதகமான தீர்வு கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தொழிலாளர்கள் அறிவித்துள்ளனர்.










