2021ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியதிலிருந்து, சுமார் 24 இலட்சம் ஆப்கான் சிறுமிகள் இடைநிலை மற்றும் உயர்நிலைக் கல்வியைத் தொடர முடியாத வகையில் தடுக்கப்பட்டுள்ளனர் என்று ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பான UNESCO செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
தலிபான்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்ததன் ஐந்தாவது ஆண்டு நிறைவை இந்த வாரம் கொண்டாடத் தயாராகி வருகின்றனர். பெண்களின் உரிமைகள் உள்ளிட்ட மனித உரிமை நிலைமை குறித்து கண்காணிப்பு அமைப்புகள் தொடர்ந்து கடுமையான கவலைகளை வெளியிட்டு வரும் நிலையிலும், சில நாடுகள் தலிபான் அரசாங்கத்துடனான உறவுகளை விரிவுபடுத்தி வருகின்றன.
பெண்களும் சிறுமிகளும் இடைநிலை மற்றும் உயர்கல்வியைப் பெறுவதற்கு அதிகாரபூர்வமாகத் தடை விதிக்கப்பட்டுள்ள உலகின் ஒரே நாடு ஆப்கானிஸ்தான் என்று UNESCO தெரிவித்துள்ளது.
இந்த நிலைமை, “ஆப்கானிஸ்தானின் பல தசாப்த கால மனித வளத்தையும் திறனையும் வீணாக்குவதுடன், வறுமையை மேலும் தீவிரப்படுத்தி, திருத்த முடியாத பாதிப்புகளையும் ஏற்படுத்தும் அபாயம் உள்ளது” என்று அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.
பெண்கள் இடைநிலை மற்றும் உயர்கல்வியைப் பெறுவதற்கான தடை தொடர்ந்தால், 2066ஆம் ஆண்டுக்குள் சுமார் 6 இலட்சம் ஆப்கான் பெண்கள் தொழிலாளர் சந்தையிலிருந்து வெளியேறக்கூடும் என்று UNESCO மதிப்பிட்டுள்ளது.
இதனால் மொத்தமாக 9.6 பில்லியன் அமெரிக்க டொலர் வருமான இழப்பு ஏற்படக்கூடும் என்பதுடன், பெண்கள் சிறுவயதிலேயே திருமணம் செய்யப்படும் அபாயமும் அதிகரிக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து கருத்துக் கேட்கப்பட்டபோது, தலிபான் நிர்வாகத்தின் கல்வி அமைச்சு உடனடியாக பதிலளிக்கவில்லை.
2021ஆம் ஆண்டு அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறியதைத் தொடர்ந்து தலிபான்கள் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியபோது, பெண்கள் தொடர்ந்தும் பாடசாலைகளுக்குச் சென்று கல்வி கற்க அனுமதிக்கப்படுவார்கள் என்று சர்வதேச சமூகத்திற்கு பலமுறை உறுதியளித்திருந்தனர்.
ஆனால் அந்த வாக்குறுதிகளுக்கு மாறாக, 2022 மார்ச் மாதம் சிறுமிகளுக்கான இடைநிலை மற்றும் உயர்நிலைப் பாடசாலைகள் மூடப்பட்டன. அதனைத் தொடர்ந்து 2022 டிசம்பர் மாதம் பெண்கள் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்பதற்கும் தடை விதிக்கப்பட்டது.
இந்த இரண்டு தடைகளும் தற்காலிகமானவை என்று தலிபான்கள் கூறியிருந்தபோதிலும், அவை இன்று வரை தொடர்ந்து அமுலில் உள்ளன.
மேலும், தலிபான் விதித்துள்ள கட்டுப்பாடுகள் பெண்கள் வேலை செய்வதற்கும், சுதந்திரமாக வெளியே செல்வதற்கும் மற்றும் பயணிப்பதற்கும் பல்வேறு தடைகளை ஏற்படுத்தியுள்ளன.
இஸ்லாமிய சட்டத்திற்கான தங்களது விளக்கம் மற்றும் ஆப்கான் கலாசாரத்திற்கு ஏற்ப பெண்களின் உரிமைகளை தாங்கள் மதிப்பதாக தலிபான்கள் வாதிடுகின்றனர்.
பெண் ஆசிரியர்களுக்கும் பெரும் தட்டுப்பாடு
ஆப்கானிஸ்தானில் பெண்கள் உயர்கல்வி கற்பதற்கான தடைகள், எதிர்காலத்தில் பெண் ஆசிரியர்களுக்கான கடுமையான பற்றாக்குறையை உருவாக்கும் என்றும் UNESCO எச்சரித்துள்ளது.
சிறுமிகள் மற்றும் பெண்களுக்கான கல்வித் தடைகளைத் தவிர்ந்த ஏனைய காரணங்களாலும், ஏற்கனவே 20 இலட்சத்திற்கும் அதிகமான ஆரம்பப் பாடசாலை மாணவர்கள் பாடசாலைகளுக்கு வெளியே உள்ளனர் என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
2030ஆம் ஆண்டுக்குள் ஆப்கானிஸ்தானில் 11,000 இற்கும் அதிகமான தகுதிவாய்ந்த பெண் ஆசிரியர் பற்றாக்குறை ஏற்படும் என்று UNESCO மதிப்பிட்டுள்ளது.
அவசரகால கல்விக்கான UNESCO திட்ட ஒருங்கிணைப்பாளர் Hoda Jaberian இது தொடர்பாக கூறுகையில், பல ஆசிரியர்கள் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளதுடன், கல்வி அமைப்பிற்குள் தொடர்ந்து பணியாற்றிய பெண்களும் தற்போது கற்பித்தலைத் தொடர முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
பெண்கள் ஆண் மாணவர்களுக்கு கற்பிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டிருப்பதால், கல்வி அமைப்பிலிருந்த கணிசமான எண்ணிக்கையிலான தகுதிவாய்ந்த ஆசிரியர்களும் கல்வியாளர்களும் வெளியேற்றப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இதன் விளைவாக, ஆண் மாணவர்களுக்கு போதுமான தகுதி இல்லாத ஆண் ஆசிரியர்கள் கற்பிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
“இப்போது எங்களிடம் தகுதியற்ற ஆண் ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர்; சில இடங்களில் ஆசிரியர்களே இல்லாத நிலையும் காணப்படுகிறது,” என்று Hoda Jaberian தெரிவித்தார்.
10 வயது குழந்தைகளில் 90% பேருக்கு எளிய உரையைக் கூட வாசிக்க முடியவில்லை
UNESCO வெளியிட்டுள்ள தகவலின்படி, ஆப்கானிஸ்தானில் 10 வயதுடைய குழந்தைகளில் 90 சதவீதத்திற்கும் அதிகமானவர்களுக்கு ஒரு எளிய உரையைக் கூட வாசிக்க முடியாத நிலை காணப்படுகிறது.
நாட்டின் மொத்த எழுத்தறிவு விகிதம் வெறும் 37 சதவீதமாக உள்ளது.
ஆப்கானிஸ்தானிலுள்ள பாடசாலைகளில் கிட்டத்தட்ட பாதிக்கு குடிநீர், சுகாதார வசதிகள் அல்லது வெப்பமூட்டும் வசதிகள் இல்லை என்றும் UNESCO தெரிவித்துள்ளது.
திரும்பிவரும் மில்லியன் கணக்கான மக்கள் – பாடசாலைகளுக்கு மேலும் அழுத்தம்
2025ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 30 இலட்சம் பேர், கட்டாயமாகவோ அல்லது தன்னார்வமாகவோ ஆப்கானிஸ்தானுக்குத் திரும்பியுள்ளனர்.
இதனால் ஏற்கனவே கடுமையான சவால்களை எதிர்கொண்டு வரும் நாட்டின் பாடசாலை அமைப்புகள் மீது மேலும் அழுத்தம் ஏற்பட்டுள்ளது.
அத்துடன், 2021ஆம் ஆண்டிலிருந்து ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கங்கள் மற்றும் வெள்ளப்பெருக்குகள் உள்ளிட்ட இயற்கை அனர்த்தங்கள் காரணமாக சுமார் 1,000 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன என்றும் UNESCO தெரிவித்துள்ளது.
Source: UNESCO, as reported by Reuters










