தமிழ்க் கட்சிகள் ஒன்றுபட வேண்டும்: சாணக்கியன் அழைப்பு!

தமிழ் மக்கள் ஒரே குடையின் கீழ் ஒன்றுபட வேண்டும் என்ற நோக்கில் முன்னெடுக்கப்படும் முயற்சிகளை, சில அரசியல் புல்லுருவிகள் தங்களது சுயநல சுகபோகத்துக்காகத் தடுத்து வருகின்றனர் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் சாடியுள்ளார்.

மட்டக்களப்பு, துறைநீலாவணையில் நடைபெற்ற ‘யுனைட்டெட்’ விளையாட்டுக் கழகத்தின் சித்திரை விளையாட்டுப் போட்டியில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்;

“தமிழ் மக்களின் நியாயமான அரசியல் தீர்வைப் பெற்றுக்கொள்ள வேண்டுமாயின், அனைத்துத் தமிழ்த் தேசியக் கட்சிகளும் ஓரணியில் இணைந்து ஒற்றுமையுடன் செயற்பட வேண்டியது அவசியமாகும்.

இதற்காகப் பல்வேறு சிவில் அமைப்புகள் கட்சிகளுடன் தீவிரப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றன.

இருப்பினும், சில அரசியல்வாதிகள் தங்களது தனிப்பட்ட அரசியல் இருப்பைத் தக்கவைத்துக்கொள்வதற்காக இவ்வாறான ஒற்றுமை முயற்சிகளைத் திட்டமிட்டுச் சீர்குலைக்கின்றனர்.” – என்றார்.

இதேவேளை, நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடர்பாகவும் அவர் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.

அத்திரைப்படத்தின் சில காட்சிகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருவதைக் குறிப்பிட்ட அவர், அதில் சித்தரிக்கப்படுவது போலவே நிஜ வாழ்க்கையிலும் சில அரசியல்வாதிகள் மக்களிடையே பிரிவினைவாதத்தை விதைத்து, அதன் மூலம் அரசியல் இலாபம் ஈட்டி வருகின்றனர் என்றும் குற்றம் சுமத்தினார்.

Related Articles

Latest Articles