ஐ.நா. அமைதி காக்கும் படைப் பணிகளுக்காக இலங்கையிலிருந்து  1,132 பேர்!

ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் படைப் பணிகளுக்காக இலங்கையிலிருந்து புறப்படவிருக்கும் இலங்கை இராணுவம் மற்றும் இலங்கை பொலிஸ் விசேட அதிரடிப்படை உறுப்பினர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவிப்பதற்காக, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று (26) முற்பகல் பனாகொடையிலுள்ள இலங்கை காலாட்படைப் பிரிவு தலைமையகத்தில் கலந்துகொண்டார்.

ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிகாக்கும் பணிகளுக்காக இலங்கையிலிருந்து ஒரே தடவையில் புறப்பட்டுச் செல்லும் மிகப்பெரிய குழு இதுவாகும். அதேநேரம், இவர்களுக்கு வாழ்த்துத் தெரிவிப்பதற்காக ஜனாதிபதி ஒருவர் வருகை தந்த முதலாவது சந்தர்ப்பமும் இது என்பதுவும் இதன் சிறப்பம்சமாகும்.

உலகில் எங்கு இருந்தாலும் பாதிப்புக்குள்ளான மக்களின் பாதுகாப்பு, ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கத் தயாராக உள்ள இராணுவம் நம்மிடம் உள்ளது என்பதை இதன் மூலம் உலகிற்கு உணர்த்துவதாக இங்கு குறிப்பிட்ட ஜனாதிபதி, அது நாட்டிற்குப் பெருமையையும் கௌரவமும் ஆகும் என்றும் தெரிவித்தார். மேலும், நாம் உலகின் செல்வந்த நாடாக மாறுவது கடினமாக இருந்தாலும், உலகின் பெருமைமிக்க நாடாக மாற முடியும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

அமைதிகாக்கும் பணிகளுக்காகப் புறப்பட்டுச் செல்லும் அனைவரும் தங்கள் தோள்களில் நாட்டின் பெருமையை சுமந்து செல்கிறார்கள் என்றும் , தங்களது கடமைகளைச் சரியாக நிறைவேற்றி நாட்டின் பெருமையையும் கௌரவத்தையும் பாதுகாப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயல்படுவது அனைவரினதும் பொறுப்பாகும் என்றும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.

தற்போது ஹைட்டி நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை சீர்செய்து, அந்நாட்டில் அமைதியை நிலைநாட்டும் நோக்கில், இலங்கை அரசாங்கம் இந்த வன்முறை ஒழிப்புப் படைப்பிரிவை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் ஹைட்டி நாட்டிற்கு அனுப்பி வைக்கத் திட்டமிட்டுள்ளது.

இந்தக் வன்முறை ஒழிப்புப் படையில் பல்வேறு படைப்பிரிவுகளைச் சேர்ந்த 900 இராணுவ படையினர், பொலிஸ் விசேட அதிரடிப்படையின் 189 அதிகாரிகள் மற்றும் நாட்டின் இராணுவ வரலாற்றில் முதல் முறையாக நிலக்கண்ணிவெடிகள் மற்றும் மரணப் பொறிகளை செயலிழக்கச் செய்வதில் சிறப்புப் பயிற்சி பெற்ற 43 பெண் இராணுவ உறுப்பினர்கள் உள்ளனர். இதற்கு மேலதிகமாக, கவச வாகனங்கள், இலங்கையில் தயாரிக்கப்பட்ட ‘யுனி பபல்’ரக வாகனங்கள் மற்றும் ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவினால் வழங்கப்பட்ட 02 சிறப்பு குண்டுதுளைக்காத வாகனங்களும் இந்தப் படைப் பிரிவுக்கு வழங்கப்பட்டுள்ளன.

Related Articles

Latest Articles