ஈரான் உடனான போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்துள்ள நிலையில், அந்நாட்டின் மீது காலவரையற்ற கடற்படை முற்றுகையைத் தொடரப்போவதாகவும், பொருளாதார நெருக்கடிகளை மேலும் தீவிரப்படுத்தப்போவதாகவும் அமெரிக்கா அறிவித்துள்ளது.
இந்த முட்டுக்கட்டைக்கு இடையே, உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகம் தொடர்ந்து குறைந்து வருவதோடு, பிராந்திய பதற்றமும் அதிகரித்துள்ளது.
கடந்த பெப்ரவரி பிற்பகுதியில் அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதல்களைத் தொடங்கியதில் இருந்து, ஈரானும் ஹோர்முஸ்நீரிணை பகுதியில் முற்றுகையை அமல்படுத்தி வருகிறது.
மேலும், அவ்வழியாகச் செல்லும் கப்பல்களுக்குக் கட்டணம் வசூலிக்க விரும்புவதாகவும் அறிவித்துள்ளது.
போருக்கு முன்னர் எவ்விதத் தடையுமின்றிப் பயன்படுத்தப்பட்ட இந்த நீரிணையில் தொடர் தாக்குதல்கள் நடத்தப்பட்டதால், ஏப்ரல் மாதம் மேற்கொள்ளப்பட்ட போர்நிறுத்தம் தோல்வியடைந்ததோடு, ஜூன் மாதம் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தமும் முறிந்தது.
பனாமா பயணத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் (Pete Hegseth), “ஈரான் மீதான முற்றுகையை அமல்படுத்தும் வகையில் அமெரிக்கப் படைகளின் இருப்பைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ளும் திறன் அமெரிக்க ராணுவத்திற்கு உள்ளது.
சுழற்சி முறையில் போர்க்கப்பல்களை மாற்றி மாற்றிப் பயன்படுத்துவதன் மூலம் இந்த முற்றுகையை எங்களால் காலவரையறை இன்றித் தொடர முடியும்,” என்று குறிப்பிட்டார்.
அதேபோல், அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசென்ட் (Scott Bessent) வியாழனன்று அளித்த பேட்டி ஒன்றில், ஈரான் மீது மேலும் கடுமையான நிதி நெருக்கடியை ஏற்படுத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
“வரவிருக்கும் வாரங்களில் வெளியாகும் அறிவிப்புகளைக் கவனியுங்கள். ஒரு நாட்டின் மீது வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிலான பொருளாதாரத் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை நாங்கள் நடைமுறைப்படுத்த உள்ளோம்,” என்று அவர் கூறினார்.
போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக ஜூன் மாதம் எட்டப்பட்ட தற்காலிக ஒப்பந்தம் முறிந்த நிலையில், ஹோர்முஸ் நீரிணையைக் கட்டுப்படுத்துவதன் மூலம் அமெரிக்காவிற்கு அழுத்தம் கொடுக்க ஈரான் முயன்று வருகிறது.










