பதுளை, பசறை பள்ளகெட்டுவ பகுதியில் அமைந்துள்ள நியூபாக் தோட்டத் தொழிலாளர்கள், தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்றைய தினம் பணிப் பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சமீப கால மழை காரணமாக கொழுந்து பரிமாற்ற அளவு குறைந்துள்ளதாகவும், இதனால் தோட்ட நிர்வாகம் தொழிலாளர்களுக்கு அதிக கொழுந்தை பறிக்குமாறு அழுத்தம் கொடுத்து, பணிச்சுமையை அதிகரித்துள்ளதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.
மேலும், நாளாந்த ஊதியம் குறைக்கப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.
தோட்டங்கள் உரிய முறையில் பராமரிக்கப்படவில்லை என்பதும் தொழிலாளர்களின் முறைப்பாடாகும்.
இந்த நிலைமையை எதிர்த்து, நியூபாக் மேல்பிரிவு, நியூபாக் கீழ்பிரிவு மற்றும் கோஸ்டா பிரிவுகளில் சேர்ந்த சுமார் 150 தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த பிரச்சனைக்கு சம்பவ இடத்திற்கு வருகை தந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பிரதிநிதிகளும், தொழில்சங்க பிரதிநிதிகளும் தோட்ட நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். எனினும், பேச்சுவார்த்தைகள் எவ்வித பயனுமின்றி முடிவடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
ராஜரதினம் சுரேஷ்குமார்
