ஃபைஸர் தடுப்பூசிகள் தொடர்பாக வெளியாகும் தகவல் பொய்யானது- வைத்தியர் மஹிந்த விக்ரமாரச்சி

நாட்டில் தற்போது எஞ்சியுள்ள ஃபைஸர் தடுப்பூசிகள் காலாவதியாகிவிட்டதாகவும், அவற்றை மீளவும் பயன்படுத்த முடியாது எனவும் சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என பொரளை சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் தடுப்பூசி மையத்திற்கு பொறுப்பான பிரதம வைத்தியர் மஹிந்த விக்ரமாரச்சி தெரிவித்துள்ளார்.

பொரளை புனித லூக்கா தேவாலயத்தில் நேற்று (13) ஆரம்பமான தடுப்பூசி செலுத்தும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

உலக சுகாதார ஸ்தாபனமும் சுகாதார அமைச்சும் இணைந்து மேற்கொண்ட பரிசோதனைகளின் பின்னர் மேலும் மூன்று மாதங்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளுக்கு ஃபைஸர் தடுப்பூசிகளை பயன்படுத்த முடியும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக வைத்தியர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, பொரளை புனித லூக்கா தேவாலயத்தின் அருட்தந்தை கிருஷாந்த மென்டிஸின் வேண்டுகோளுக்கு இணங்க, நேற்று (13) முதல் வார நாட்களில் காலை 8.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை அனைத்து தரப்பினருக்கும் மூன்றாவது மற்றும் நான்காவது தடுப்பூசியாக ஃபைஸர் தடுப்பூசி  வழங்கப்படுகிறது.

அத்துடன், 12 முதல் 20 வயது வரையான அனைவருக்கும் முதலாம் மற்றும் இரண்டாம் தடுப்பூசிகள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles