பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் போராட்டம் வெடிக்கும் – என்று பெருந்தோட்ட தொழிலாளர் ஊதிய உரிமைக்கான இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
மஸ்கெலியாவில் நேற்று மேற்படி இயக்கத்தால் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டின்போதே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட பொகவந்தலாவ தோட்டத்தை சேர்ந்த திருமதி அருளப்பன் இதய ஜோதி கூறியவை வருமாறு,
” பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள உயர்வு வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டிருந்தது. எனினும், ஆறு வருடங்கள் கடக்கவுள்ள நிலையிலும் அந்த உறுதிமொழி நிறைவேற்றப்படவில்லை. இந்நிலையில் பட்ஜட் ஊடாக மீண்டும் உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி ஜனவரி மாதம் முதல் அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா அவசியம். இல்லையென்றால் போராட்டங்களை முன்னெடுப்போம். தற்போது வாழ்க்கைச்சுமை அதிகரித்துள்ளது. பொருட்கள், சேவைகளின் விலைகள் அதிகரித்துள்ளன. எனவே, எமக்கும் சம்பள உயர்வு அவசியம்.” – என்றார்.
மஸ்கெலியா நிருபர் – பெருமாள்
