மலையக பகுதிகளில் தெரிவு செய்யப்பட்ட வறிய குடும்பங்களை சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி செலவுகளுக்கு உதவும் முகமாக “ஆறுமுகன் தொண்டமான் புலமைப்பரிசில் திட்டம்” அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது என்று இ.தொ.காவின் இளைஞர் அணி பொதுச்செயலாளர் அர்ஜுன் தெரிவித்துள்ளார்.
முதற்கட்டமாக தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களினது வங்கி கணக்குகளில் அவர்களின் கல்விக்கு தேவையான ஒருதொகை பணம் வைப்பு செய்யப்பட்டுள்ளது.
கொவிட் தொற்று பரவல் காரணமாக தெரிவு செய்யப்பட்டோருடனான ஒன்று கூடலை தவிர்த்து இணைய வழியாக வ இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானால் இந்நிகழ்வு அங்குரார்ப்பனம் செய்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இச்செயற்றிட்டத்தின் இரண்டாம் கட்டம் கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் சிறந்த சித்தியைப் பெற்ற மலையகத்தின் வறிய மாணவர்களுக்கு மடிக்கணணிகள் வழங்கும் செயற்திட்டத்துடன் வெகு விரைவில் தொடரும் .
“இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் எதிர்காலத்தில் மே தின செலவீனங்களைக் கட்டுப்படுத்தி கல்விக்கு அதிக முக்கியத்துவம் வழங்ககும்” என அண்மையில் இராஜாங்க அமைச்சர் தெரிவித்திருந்ததற்கு அமைய, அதன் ஆரம்பக்கட்ட செயற்பாடாகவே இத்திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டது.
குறித்த செயற்றிட்டங்களுக்கான ஒருங்கிணைப்பு மற்றும் ஏற்பாடுகளை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் இளைஞர் அணி மேற்கொண்டது.
மலையகத்தின் கல்வி வளர்ச்சிக்கு தொடர்ச்சியாக தங்களது பங்களிப்பை இது போன்ற செயற்றிட்டங்கள் ஊடாக எதிர்காலத்திலும் தொடர்ந்து முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் இளைஞர் அணி பொது செயலாளர் அர்ஜுன் தெரிவித்துள்ளார்.
