” சிறியதொரு சம்பவம் நடந்தால்கூட களத்துக்குவரும் இதொகாவின் தலைவர் செந்தில் தொண்டமான் இறம்பொடை ஆர்.பீ. தோட்ட பிரச்சினை தொடர்பில் மௌனம் காப்பது ஏன்? இது விடயத்தில் அமைச்சர் ஜீவன் தொண்டமான் பின்வாங்குவது ஏன்”
இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார் ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார்.
நாடாளுமன்றத்தில் இன்று இது தொடர்பில் கருத்து வெளியிட்ட வேலுகுமார் எம்.பி. மேலும் கூறியவை வருமாறு,
” இறம்பொடை ஆர்.பீ. டிவிசனில் 160 இற்கு மேற்பட்ட குடும்பங்கள் வாழ்கின்றனர். அத்தோட்டத்தில் வேலை செய்த தொழிலாளர்களுக்கு ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி என்பன பல வருடங்களாக செலுத்தப்படாமல் உள்ளன. சம்பளத்தில் தொகை கழிக்கப்பட்டிருந்தாலும் அவை செலுத்தப்படவில்லை. தொழிலாளர்களுக்கு ஆவணங்கள் வழங்கப்படவும் இல்லை.
ஈபிஎப், ஈடிஎப் உள்ளிட்ட தமது தொழில் உரிமைகளுக்காக அத்தோட்ட மக்கள் 2018 ஆம் ஆண்டு முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் 2020 இல் அமரர் ஆறுமுகன் தொண்டமான் அத்தோட்டத்துக்கு சென்று, குறித்த கொடுப்பனவுகள் புதிய நிர்வாகத்தால் செலுத்தப்படும் என உறுதியளித்துள்ளார். அந்த உறுதிமொழியை நம்பி மக்கள் தொழிலுக்கு சென்றுள்ளனர்.
ஆனாலும் ஈபிஎப், ஈடிஎப் உள்ளிட்ட கொடுப்பனவுகள் இன்னும் செலுத்தப்படவில்லை. மக்கள் நடுத்தெருவில் உள்ளனர். தற்போதும் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த தோட்டத்தின் பிரதானி எனக் கூறப்படும் நபர், அமைச்சர் ஜீவன் தொண்டமானின் அமைச்சின்கீழ் வரும் அரச நிறுவனமொன்றில் பதவி வகிக்கின்றார். ஆகவே வேலியே பயிரை மேயும் நிலை இன்று ஏற்பட்டுள்ளது.தோட்ட தொழிலாளர்களின் காவலன் என கூறிக்கொள்பவர்கள், ஊழியர்களுக்கு அநீதி இழைப்பவர்களுக்கு உயர் பதவி வழங்கி பாதுகாக்கின்றனர்.
சிறிய சம்பவம் நடந்தால்கூட வந்துநிற்கக்கூடிய கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் எங்கே? தோட்ட மக்களை வெளியேற்ற முற்பட்டபோது மௌனம் காத்தது ஏன்? ” – என்றார் வேலுகுமார் எம்.பி.










