இலங்கைக்கு IMF கடன் – நிதி உத்தரவாதத்தை வழங்கியது இந்தியா!

இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெற்றுக் கொள்வதற்கு அவசியமான நிதி உத்தரவாதத்தை அளிக்க நடவடிக்கை எடுத்ததாக இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெயசங்கர் தெரிவித்தார்.

இலங்கையை மீண்டும் மீட்டெடுப்பதற்கு கடன் வழங்குனர்கள் செயற்திறனுடன் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்தியா உறுதியாக நம்புவதாகவும் அதனால் ஏனைய தரப்புகளைப் பற்றி பாராமல் சரியானவை என தான் நினைக்கும் விடயங்களை நடைமுறைப்படுத்த இந்தியா தீர்மானித்ததாகவும் வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (20) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடனான அவர்களுடனான சந்திப்பை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட இணைந்த செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கும்போதே இந்திய வெளிவிவகார அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதாரச் சவாலை வெற்றிகொள்ளுமென இந்தியா நம்புவதுடன் இந்த இக்கட்டான காலகட்டத்தில் இலங்கையின் நம்பிக்கை மிகுந்த நண்பராக இந்தியா இருக்குமென்றும் அவர் கூறினார்.

இலங்கையின் பொருளாதாரத்தை மீண்டும் மீட்பதற்கு இந்தியாவிடம் இருந்து பெற்றுக்கொள்ளக்கூடிய உதவிகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக வெகு விரைவில் இந்தியா வருமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி விடுத்துள்ள அழைப்பை தான் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களிடம் கையளித்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கையின் நம்பகமான அண்டைய நாடு மற்றும் நம்பகமான பங்காளி என்ற அடிப்படையில் இந்த இக்கட்டான நேரத்தில் இலங்கையின் மீட்சிக்காக பல மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுக்க இந்தியா தயாராக இருப்பதாகவும் அமைச்சர் ஜெயசங்கர் கூறினார்.

இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் பொருளாதாரத்தின் முக்கிய துறைகளாக விளங்கும் வலுசக்தி, சுற்றுலாக் கைத்தொழில் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி போன்றவற்றில் முதலீடு செய்ய முதலீட்டாளர்களை ஊக்குவிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Related Articles

Latest Articles