கம்பளை நகரில் இருந்து வீகுலவத்தை பகுதிக்குச் செல்லும் பிரதான வீதியில், பாடசாலையொன்றுக்கு அருகில் இன்று காலை பாரிய மரமொன்று முறிந்து விழுந்துள்ளது.
இப்பிராந்தியத்தில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் பலத்த மழை காரணமாகவே இந்த மரம் முறிந்து வீதியின் குறுக்கே விழுந்துள்ளது. இதன் காரணமாக, இன்று காலை அவ்வீதியூடான போக்குவரத்தில் கடும் நெரிசலும் தடங்கலும் ஏற்பட்டது.
இதனை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து மரத்தை வெட்டி அகற்றியதை தொடர்ந்து, போக்குவரத்து நிலைமை தற்போது சீராக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இப்பிரதான வீதியோரமாக இன்னும் பல ராட்சத மரங்கள் காணப்படுவதனால், அவற்றுள் ஆபத்தான நிலையில் உள்ள மரங்களை அடையாளங்கண்டு உடனடியாக வெட்டி அகற்றுவதற்குச் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
– க. யோகா










