கல்வியியற் கல்லூரி ஆசிரியர்கள் 7,500 பேருக்கு நாளை நியமனம்

கல்வியியற் கல்லூரிகளிலிருந்து வெளியேறியுள்ள 7,500 பேருக்கு நாளைய தினம் ஆசிரியர் நியமனம் வழங்கப்படவுள்ளதாக கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

அதேவேளை, கணிதம், விஞ்ஞானம், தொழில்நுட்பம், மொழி மற்றும் வாணிபம் ஆகிய பாடங்களுக்கான ஆசிரியர்கள் மூன்று மொழிகளிலும் கற்பிக்கக்கூடிய 5,500 பட்டதாரி ஆசிரியர்களுக்கு விரைவில் நியமனம் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேற்படி 5,500 பேரையும் இணைத்துக்கொள்ளும் போது, 35 வயதுக்கு மேற்படாத பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கல்வியமைச்சில் இடம்பெற்ற கூட்டமொன்றிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அமைச்சர், பௌதீக மற்றும் மனித வளங்களை பூரணப்படுத்துவதால் மாத்திரம் கல்வித் துறையை மேம்படுத்தமுடியாது. மாணவர்களின் வினைத்திறன் மிகவும் அவசியமாகும். அதேபோன்று சமூகத்தில் தற்போது நிலவும் போதைவஸ்து போன்ற தீய செயற்பாடுகள் மற்றும் முறையற்ற விதத்தில் நடந்துகொள்ளுதல் ஆகியவற்றை பாடசாலைகளுக்குள் பிரவேசிப்பதற்கு இடமளிக்கக்கூடாது. அதேபோன்று புதிய தலைமுறையினர் மத்தியில் ஏற்பட்டுள்ள ஒழுக்கங்களுக்கு மாறான செயற்பாடுகள் குறிப்பாக பிரிவேன் போன்ற கல்வி நடவடிக்கைககளின் போது, இதுதொடர்பில் மிகவும் அவதானம் செலுத்தவேண்டியது அவசியமாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் பாடசாலை நிர்வாகத்தில் அதிபர் சுயாதீனமாக செயற்படுவதற்கு இடமளிக்கப்பட வேண்டும்.

பாடசாலை அபிவிருத்தி சங்கமோ அல்லது பழைய மாணவர் சங்கமோ தேவையற்ற விதத்தில் அந்த விடயங்களில் தலையிடுவது பொருத்தமானதல்ல. இதனை, தாம், ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லையென்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles