குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரிசி பெற்றுக் கொடுக்கும் வேலைதிட்டத்தின்போது தேவையுடைய எவரையும் தவறவிட வேண்டாமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரச அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
இதேவேளை, 28 இலட்சத்து 50ஆயிரம் குடும்பங்களுக்கு (2,850,000) அரிசி பெற்றுக் கொடுப்பதற்காக ஆகக்கூடியது 20 பில்லியன் ரூபாவுக்காயினும் போதுமானளவு நெல்லை கொள்வனவு செய்யுமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.
நெல் கொள்வனவு செய்வது தொடர்பில் இன்று (14) பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலில் கருத்து தெரிவிக்கும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கொள்வனவு செய்யப்படும் நெல்லை அரிசியாக்கி, வெளிப்படைத் தன்மையுடன் கூடிய பொறிமுறை ஒன்றினூடாக அதனை குறைந்த வருமானம் பெறுவோருக்கு பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
குறைந்த வருமானம் பெறும் 20 இலட்சம் குடும்பங்களுக்கு மாதாந்தம் தலா 10 கிலோகிராம் அரிசி வீதம் இரண்டு மாதங்களுக்கு இலவசமாகப் பெற்றுக் கொடுக்கும் வேலைதிட்டத்தின் கீழ் 61,600 மெட்ரிக் தொன் நெல்லை விலைக்கு வாங்குவதற்காக 10,000 மில்லியன் ரூபாவை ஒதுக்குவதற்கு ஏற்கனவே தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
எனினும் இந்த வேலைதிட்டத்தின் கீழ் பயனடைவதற்காக 28 இலட்சத்து 50 ஆயிரம் குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டிருப்பது இந்தக் கலந்துரையாடலின் மூலம் தெரிய வந்துள்ளது. இதற்கமைய, அவர்கள் அனைவருக்காகவும் இவ்வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் உத்தரவு வழங்கினார்.











