டித்வா புயலால் பகுதியளவு சேதமடைந்த 50,554 வீடுகளுக்கு ரூ. 13,505 மில்லியன் வழங்கல்

‘டித்வா’ பேரழிவிற்குப் பிறகு உட்கட்டமைப்பு வசதிகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான ஒப்பந்தம் செய்யப்பட்ட திட்டங்களின் தாமதங்கள், 2026 ஆம் ஆண்டிற்கான இலக்குகளை அடைவதில் உள்ள தடைகள் மற்றும் ‘Rebuilding Sri Lanka’ திட்டத்தின் தற்போதைய முன்னேற்றம் குறித்து இதன் போது விரிவாக ஆராயப்பட்டது.

பகுதியளவு சேதமடைந்த 50,554 வீடுகளுக்காக 13,505 மில்லியன் ரூபாயும், முழுமையாக சேதமடைந்த 4,918 வீடுகளுக்காக 11,510 மில்லியன் ரூபாயும் இதுவரை வழங்கப்பட்டுள்ளதாக இந்த கூட்டத்தின் போது சுட்டிக்காட்டப்பட்டது.

சேதமடைந்த வீதிகள், ரயில் பாதைகள், பாலங்கள் உள்ளிட்ட உட்கட்டமைப்புகளை மறுசீரமைத்தல், பகுதியளவில் மற்றும் முழுமையாக சேதமடைந்த வீடுகளின் நிர்மாணப் பணிகள், மீள்குடியேற்றம் மற்றும் நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்கள் தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

டித்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று தற்போதைய நிலைமையை ஆராயுமாறு அறிவுறுத்திய பிரதமர், மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கையை விரைவாக மீட்டெடுப்பது அத்தியாவசியமானது என்றும், அதற்காகச் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்வது மிக முக்கியம் என்றும் சுட்டிக்காட்டினார்.

தற்பொழுது மீளக் கட்டியெழுப்பும் பணிகளில் சிக்கல் எழுந்துள்ள திட்டங்களை விரைவுபடுத்த ஆளுநர்கள், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்கள், மாவட்டச் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள் மற்றும் தொடர்புடைய அதிகாரிகளுடன் உடனடியாக கலந்துரையாடல்களை மேற்கொள்ளுமாறு செயலணி உறுப்பினர்களுக்கு பிரதமர் பணிப்புரை வழங்கினார்.

தொழில் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் கலாநிதி ஏ. எச். எம். எச். அபேரத்ன, பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) அருண ஜயசேகர, ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி, டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ஹான்ஸ் விஜயசூரிய, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரஸல் அபொன்சு, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷண சூரியப்பெரும, பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எஸ். ஆலோக பண்டார ஆகியோருடன் குழுவின் ஏனைய உறுப்பினர்களும் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றனர்.

Related Articles

Latest Articles