தலவாக்கலை கூட்டத்தை சஜித்துக்கான பிரச்சார கூட்டமாக மாற்றியது தவறு – ஜீவன்

“நாட்டு மக்கள் தன்னெழுச்சியாக போராடிவரும் நிலையில், தலவாக்கலையில் சஜித் பிரேமதாசவுக்கு தேர்தல் பிரச்சாரம் செய்யும் வகையில் கூட்டம் நடத்தியது தவறு. மக்களுக்கு தமது உள்ளக்குமுறலை வெளியிடும் உரிமை உள்ளது. நாம் அதனை தடுக்கவில்லை. வன்முறையின்றி ஜனநாயக வழியில் இடம்பெறும் போராட்டங்களை ஆதரிப்போம்.”

இவ்வாறு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர் இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு,

” நாட்டு மக்கள் பொருளாதார நிலைமையில் கடும் கஷ்டத்தில் உள்ளனர். எனவே, நாம் ஒன்றிணைந்து தீர்மானமொன்றை கொண்டுவர வேண்டும். அவ்வாறு இல்லையெனில் சபையில் இருப்பதில் அர்த்தம் இருக்காது.

நாம் இராஜினாமா செய்தோம். அது தொடர்பில் வதந்தி பரப்பிவருகின்றனர். பதவி துறந்து எமக்கு முதுகெலும்பு உள்ளது என்பதை காண்பித்தோம். அபிவிருத்தி, சலுகை அரசியலை விடவும் கொள்கை அரசியல்தான் முக்கியம்.” – என்றார்.

Related Articles

Latest Articles