தாயும், சேயும் சடலங்களாக மீட்பு – யாழில் சோகம்! விசாரணை தீவிரம்

யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் உள்ள வீடொன்றின் கிணற்றில் இருந்து தாயும், கைக்குழந்தை ஒன்றும் இன்று சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

மிருசுவில் தெற்கை சேர்ந்த பிரகாஷ் சந்திரமதி (வயது 40) மற்றும் அவரின் 7 மாத குழந்தையான பிரகாஷ் காருண்யா ஆகியோரே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

கணவன் மனைவிக்கு இடையில் நேற்று (10) வியாழக்கிழமை இரவு வாய்த்தர்க்கம் ஏற்பட்டதாகவும் , அதன் பின்னர் அதிகாலை 2 மணியளவில் மனைவியையும் பிள்ளையையும் காணவில்லை என கணவன் தேடிய நிலையில் காலை இருவரும் கிணற்றில் சடலமாக காணப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

இதேவேளை, சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் அ.ஜுட்சன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்து, சடலத்தை மீட்டு உடல்கூற்று பரிசோதனைக்கு அனுப்பி வைக்குமாறு உத்தரவிட்டார்.

பொலிசாரின் விசாரணைகளின் அடிப்படையில் உயிரிழந்த பெண்ணின் கணவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, கொடிகாம பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.

Related Articles

Latest Articles