ஈரான் தலைநகர் தெஹ்ரானின் உக்கிர தாக்குதல் இடம்பெற்றுவருவதால் இலங்கை தூதரக அதிகாரிகள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
அத்துடன், இஸ்ரேலில் நான்கு இலங்கையர்கள் காயமடைந்துள்ளனர் எனவும் அவர் கூறினார்.
நாடாளுமன்றத்தில் நேற்று கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் இந்த தகவலை வெளியிட்டார்.
” இஸ்ரேல், ஈரான் போர் காரணமாக இஸ்ரேலில் உள்ள நான்கு இலங்கையர்கள் காயமடைந்துள்ளனர். மூன்று பெண்களும், ஆணொருவருமே இவ்வாறு காயமடைந்துள்ளனர். இவர்களில் மூவருக்கு சிறு காயங்களே ஏற்பட்டுள்ளன. ஒருவருக்கு மட்டுமே காலில் கண்ணாடி விழுந்து படுகாயம் ஏற்பட்டுள்ளது.
சிறு காயம் ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. படுகாயம் அடைந்தவருக்கு வைத்தியசாலை ஊடாக சிகிச்சையளிப்பதற்கு தூதரகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இஸ்ரேலில் சுமார் 20 ஆயிரம் இலங்கையர்கள் பணியாற்றுகின்றனர். ஈரானில் 35 இலங்கையர்கள் மாத்திரமே உள்ளனர். அவர்களில் 8 பேர் இஸ்ரேல் பிரஜைகளை மணம் முடித்தவர்கள். மாணவர்களாக சிலர் உள்ளனர். சிலர் தொழில் செய்கின்றனர்.” எனவும் அமைச்சர் விஜித ஹேரத் குறிப்பிட்டார்.
தெஹ்ரானில் உள்ள இலங்கை தூதரகத்தை நேற்று அகற்றினோம். தெஹ்ரான்மீது தாக்குதல் தொடர்வதால் இதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதிகாரிகள் மற்றும் தூதரகத்தில் தஞ்சமடைந்த 8 மாணவர்கள் ஈரான் வடக்கு பிரதேசம் நோக்கி அனுப்பட்டுள்ளனர். அங்கிருந்து தற்காலிக தூதரக சேவை இடம்பெறும்.
இஸ்ரேலுக்கு தொழில் நிமித்தம் இலங்கையர்கள் செல்வது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. விடுமுறையில் வந்துள்ளவர்களுக்கு விசா கால நீடிப்பை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
போர் நிலைமை மேலும் மோசமடைந்தால் இலங்கையர்களை மீட்பதற்காக அயல்நாடுகளுடனும் பேச்சு நடத்தப்பட்டுவருகின்றது.” – என வெளிவிவகார அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.