தேசிய பேரவையை புறக்கணிக்கும் முடிவில் ஐக்கிய மக்கள் சக்தி!

” மக்கள் எழுச்சி ஏற்பட்டபோது வழங்கிய வாக்குறுதிகளை மறந்து அரசாங்கம் செயற்படுகின்றது. பிரச்சினைகளுக்கு தீர்வு தேடுவதைவிடுத்து, அரசியல் நடத்தப்படுகின்றது. எனவே, தேசியப் பேரவையை புறக்கணிக்கும் முடிவையே எமது கட்சி பெரும்பாலும் எடுக்கும்.”

இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட உறுப்பினரும், எதிரணி பிரதம கொறடாவுமான லக்‌ஷ்மன் கிரியல்ல நேற்று தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” குறுகிய காலத்துக்கு அரசாங்கமொன்று நிறுவப்பட வேண்டும், அமைச்சரவை மட்டுப்படுத்தப்பட வேண்டும், பொருளாதாரப் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும், குறுகிய காலப்பகுதிக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பன உட்பட முக்கிய பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இவற்றில் ஒரு அங்கமே தேசியப் பேரவையாகும்.

தேசியப் பேரவை அமைப்பதற்கே 3 மாதங்கள் எடுத்துள்ளன. அதற்கிடையில் ஆளுங்கட்சி அரசியலும் நடத்திவருகின்றது. அமைச்சர்கள் நியமிக்கப்படுகின்றனர், இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்படுகின்றனர். போராட்ட காலத்தில் இருந்த அக்கறை தற்போது அரசாங்கத்திடம் இல்லை. எல்லா பிரச்சினைகளும் தீர்ந்துவிட்டதாக அது கருதுகின்றது.

குறிப்பாக கோப் மற்றும் கோபா குழுக்களின் தலைமைப்பதவி எதிரணிகள் வழங்கப்படும் என சபாநாயகர் உறுதியளித்தார். தற்போது முடியாது என்கிறார். எனவே, தேசியப் பேரவை குறித்தும் எமக்கு ஐயப்பாடு உள்ளது. எனவே, அதனை புறக்கணிக்கும் முடிவையே கட்சி பெரும்பாலும் எடுக்கும்.” – என்றார்.

Related Articles

Latest Articles