நுவரெலியா – பதுளை பிரதான வீதியின் ஹக்கல தாவரவியல் பூங்கா பகுதியில் இன்று (16) பிற்பகல் கனரக வாகனம் ஒன்று, மேலும் மூன்று வாகனங்களுடன் மோதி பாரிய விபத்துக்குள்ளாகியுள்ளது.
நுவரெலியாவிலிருந்து வெலிமடை நோக்கி அதிக சுமைகளை ஏற்றிக்கொண்டு பயணித்த கனரக வாகனம் ஒன்றின் தடையாழி (Brake) ஆபத்தான வளைவுப் பகுதியில் திடீரென செயலிழந்துள்ளது.
இதனால் கட்டுப்பாட்டை இழந்த கனரக வாகனம், ஹக்கல தாவரவியல் பூங்காவிற்கு அருகில் வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றுடன் மோதியதுடன், முன்னால் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டி மற்றும் ஜீப் வண்டி ஆகியவற்றுடனும் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்தக் கோர விபத்தில் நான்கு வாகனங்களும் சேதமடைந்துள்ள போதிலும், அவற்றில் பயணித்தவர்கள் அதிர்ஷ்டவசமாக சிறிய காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.
‘திட்வா’ சூறாவளி காரணமாக ஹக்கல பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவினால் பிரதான வீதியின் ஒரு பகுதி சேதமடைந்து தாழிறங்கியுள்ளது.
அவ்வாறு ஏற்கனவே சேதமடைந்திருந்த குறுகிய பகுதியிலேயே இந்த விபத்தும் நேர்ந்துள்ளதால், நுவரெலியா – பதுளை பிரதான வீதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன், வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்த நுவரெலியா பொலிஸார், விபத்துக்குள்ளான வாகனங்களை வீதியிலிருந்து அகற்றி போக்குவரத்தைச் சீர்செய்ததுடன், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.










