‘பயங்கரவாத தடுப்புக்கான அரச சட்டம்’ 2 மாதங்களுக்குள் நிறைவேற்றப்படும்!
பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு மாற்றாகக் கொண்டு வரப்படும் சட்டம், இரண்டு மாதங்களுக்குள் நிறைவேற்றப்படும் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் மற்றும் சிவில் சமூகத்தின் பரிந்துரைகளை உள்ளடக்கி, பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களுக்கான அனைத்துலக கட்டமைப்புகளுக்கு இணங்கும் இந்த சட்டமூலத்திற்கு, பயங்கரவாத தடுப்புக்கான அரச சட்டம் (State Prevention of Terrorism Act (SPTA) எனப் பெயரிடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சட்டமூலம் இறுதி செய்யப்பட்டு விட்டதாகவும், முதலில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு, பின்னர் அரசிதழில் வெளியிடப்பட்டு, பின்னர் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்றும், அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இரண்டு மாதங்களுக்குள் இந்தச் சட்டத்தை நிறைவேற்றத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்து செய்வது குறித்து ஆய்வு செய்து பரிந்துரைகளை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் சில பரிந்துரைகளை இந்த சட்டவரைவு உள்ளடக்கியுள்ளது.
அரச தலைவர் சட்ட ஆலோசகர் ரியன்சி அரசகுலரத்ன தலைமையிலான இந்தக் குழு, பரந்த மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய சீர்திருத்தச் செயல்முறையை உறுதி செய்வதற்காக, பொதுமக்களின் கருத்துக்களைக் கோரியதுடன், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் சர்வதேச அமைப்புகளிடமிருந்தும் உள்ளீடுகளைப் பெற்றது.
இந்த வரைவு, தொடர்புடைய ஐ.நாவின் முகமைகளுடனும், ஐ.நாவின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-அன்ட்ரே பிரான்ஷேவுடனும் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களுக்கு என்ன நடக்கும் என்பது குறித்து தீர்க்கப்பட வேண்டிய சில சிக்கல்கள் உள்ளன.
இது தொடர்பாக மேலும் தெளிவு தேவைப்படுகிறது, இது விரைவில் தீர்க்கப்படும் என்றும் அமைச்சர் விஜித ஹேரத் குறிப்பிட்டார்.










