” இனங்களுக்கிடையிலான நம்பிக்கையின்மை விரைவில் களையப்பட வேண்டும். புதிய அரசியலமைப்பு விரைவில் இயற்றுவதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும்.” என்று முன்னாள் சபாநாயகர் கருஜயசூரிய தெரிவித்தார்.
தேசபிதா டி.எஸ். சேனாநாயக்கவின் 73 ஆவது நினைவு தின நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” பல நாடுகளில் உயிர் தியாகம் செய்தே சுதந்திரம் பெற்றனர். எமக்கு இலகுவில் சுதந்திரம் கிடைக்கப்பெற்றதால் சுதந்திரத்தின் பெறுமதி எமக்கு சரியாக புரியவில்லை. அதனால்தான் இனங்களுக்கிடையில் முரண்பாடு ஏற்பட்டு நாடு பின்நோக்கி சென்றது.
எனினும், அண்மையில் ஏற்பட்ட இளைஞர்களின் எழுச்சியின்போது இளைஞர்கள் இன, மத, குல பேதங்களை முழுமையாக நிராகரித்தனர். கோல்பேஸ் மற்றும் ஏனைய இடங்களில் இதனை கண்டோம்.
நாடாளுமன்றத்தில் இன்றுள்ள கட்சிகள் இனவாதத்தை நிராகரித்துள்ளன. இது வரவேற்ககூடிய விடயமாகும். இதனை தொடர்ந்து முன்னோக்கி கொண்டுசெல்ல வேண்டும்.
இனங்களுக்கிடையிலான நம்பிக்கையின்மை இந்த தலைமுறையுடன் முடிவுக்கு வரவேண்டும். அடுத்த தலைமுறைக்கு செல்லக்கூடாது.
இனங்களுக்கிடையில் பிரச்சினையை ஏற்படுத்துவதற்கு சிறு குழுவொன்று முயற்சித்தாலும் அது வெற்றியளிக்காது.
அன்று அனைத்து இன மக்களும் ஒன்றாக கல்வி பயின்றனர், ஒன்றாக விளையாட்டுகளில் ஈடுபட்டனர். 1960 களில்தான் இந்நிலைமை மாறுபட்டது. இன, மத ரீதியாக மாணவர்கள் பிளவுபட்டனர்.
இன நல்லிணக்கம் மற்றும் புதிய அரசியலமைப்பு தொடர்பில் தற்போதைய அரசாங்கம் கதைத்துவருகின்றது. இதற்குரிய பணிகள் விரைவில் செய்யப்பட்டால் நல்லது.” – என்றார்.