பூசகருக்கு கொரோனா – கதிர்காமம் வள்ளியம்மன் கோவிலுக்கு பூட்டு!

கதிர்காமம் ஸ்ரீ வள்ளியம்மன் ஆலய பிரதம பூசகருக்கும், அவரது மனைவிக்கும் கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது பி.சி.ஆர். பரிசோதனை மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று கதிர்காமம் பொது சுகாதாரப் பரிசோதகர் சமன் திசாநாயக்க தெரிவித்தார்.

இதையடுத்து பொது சுகாதாரப் பரிசோதகரின் உடனடி உத்தரவின் பேரில் ஸ்ரீ வள்ளியம்மன் ஆலயம் 28.01.2021 முதல் மீள் அறிவிருக்கும் வரையில் மூடப்பட்டுள்ளது.

அத்துடன் தொடர்ந்து 15 நாட்களாக இவ் ஆலயத்திற்கு வந்து வழிபாடு நிகழ்வுகளில் கலந்து கொண்டு தத்தம் ஊர்களுக்கு சென்றவர்கள் மற்றும் கதிர்காமத்திலிருந்து இவ் ஆலயத்திற்கு வந்து சென்றவர்கள் அவ்வப்பகுதி பொது சுகாதாரப் பரிசோதர்களிடம் உடன் அறிவிக்கும்படி கதிர்காமம் பொது சுகாதாரப் பிரிவினரால் கேட்கப்பட்டுள்ளனர்.

இவ் ஆலயப் பூசகரின் உறவினரொருவரது மரணச்சடங்குகளில் கலந்து கொண்டிருந்தவர்களில் எவருக்கேனும் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம். அவர்களிடமிருந்து ஆலயப் பூசகருக்கும் அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று பரவியிருக்கலாமென்ற சந்தேகமும் ஏற்பட்டிருக்கின்றதென்று பொது சுகாதாரப் பரிசோதகர் மேலும் கூறினார்.

எம். செல்வராஜா, பதுளை

Related Articles

Latest Articles