மன்னாருக்கும், இராமேஸ்வரத்துக்கும் இடையிலான படகு சேவை விரைவில் மீண்டும் ஆரம்பமாகவுள்ளது என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
மன்னாரில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” மன்னாருக்கும், இராமேஸ்வரத்துக்கும் இடையில் பாரிய படகுசேவை இருந்தது. இது தொடர்பில் இந்திய அரசாங்கத்துடன் பேச்சு நடத்தப்பட்டுவருகின்றது. இதற்கமைய இராமேஸ்வரத்துக்கு மீண்டும் படகு சேவை ஆரம்பிக்கப்படும்.
அதேபோல மன்னாரில் காற்றாலை மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்குரிய வளம் உள்ளது. கடந்தகாலங்களில் மக்களிடம் கருத்து கோரப்படாமல், சுற்றாடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. அதனை நாம் தற்காலிகமாக நிறுத்தியுள்ளோம்.
எனினும், அந்த வளத்தை நாம் பயன்படுத்த வேண்டும். மக்களிடம் கருத்து கோரப்பட்டு, சுற்றாடல் பாதிப்பை குறைத்து, மக்களின் வாழ்க்கை பாதிக்காத வகையில் வேலைத்திட்டத்தை முன்னெடுக்க நாம் தயார்.” – என்றார்.
