ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கொள்கை விளக்க உரை ஏமாற்றமளிப்பதாக தமிழ் முற்போக்கு கூட்டணி தெரிவித்துள்ளது.
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்படுகின்றது என அறிவிக்கப்பட்டாலும், அது இன்னும் முறையாக அமுலுக்கு வரவில்லை.
அதேபோல பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான காணி உரிமை, அவர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்கும் திட்டம் என அவர்கள் சார்ந்து எதுவும் ஜனாதிபதியின் உரையில் இடம்பெறவில்லை என முற்போக்கு கூட்டணி சுட்டிக்காட்டியுள்ளது .
நாட்டில் வாழும் மக்கள் சமமாக நடத்தப்படுவார்கள் என கூறும் ஜனாதிபதி, அதுதான் தனது உண்மையான கொள்கையெனில் மலையக மக்களுக்கான உரிமைகள் பற்றியும் அறிவித்திருக்க வேண்டும். அது நடக்கவில்லை. நாடாளுமன்ற விவாதத்தின்போது இந்த விடயத்தை சுட்டிக்காட்டுவோம் எனவும் முற்போக்கு கூட்டணி குறிப்பிட்டுள்ளது.










