மாகாணசபை முறைமை குறித்து அரசின் உறுதியான நிலைப்பாடு என்ன?

மாகாணசபை முறைமை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுமா அல்லது இல்லாதொழிக்கப்படுமா என்பது தொடர்பான தனது நிலைப்பாட்டை அரசாங்கம் நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போது, மாகாணசபை முறைமை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார மேற்கண்டவாறு வலியுறுத்தினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” இனப்பிரச்சினை காரணமாகவே நாட்டில் போர்கூட ஏற்பட்டது. அவ்வாறானதொரு இனப்பிரச்சினைக்கு தீர்வாகவே மாகாணசபை முறைமை கொண்டுவரப்பட்டது. அதற்கு நீண்ட வரலாறு இருக்கின்றது. 13 ஆவது திருத்தச்சட்டத்தை கொண்டுவரும்போது அன்று அதற்கு எதிராக செயற்பட்டவர்கள் அதன்பின்னர் தேர்தல்களில் போட்டியிட்டனர். ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி காலப்போக்கில் மாகாணசபைகளின் ஆட்சி அதிகாரத்தைக்கூட கைப்பற்றியிருந்தது.

மஹிந்த ராஜபக்ச 13 பிளஸ் பற்றிகூட கருத்து வெளியிட்டிருந்தார். ஆனால் 13 ஐ நிராகரிக்கும் வகையிலெயே கோட்டாபய ராஜபக்ச செயற்படுகின்றார். 13 விடயத்தில் மஹிந்தவின் நிலைப்பாட்டில் கோட்டாபய இல்லை. ஆளுங்கட்சிக்குள் குழப்பநிலை உருவாகியுள்ளது. எனவே, மாகாணசபை முறைமை தொடருமா அல்லது இல்லையா என்பது குறித்து நாட்டு மக்களுக்கு அரசாங்கம் தெளிவுபடுத்தவேண்டும்.

மாகாணசபைத் தேர்தலை எதிர்கொள்வதற்கு நாம் தயார். வேட்பாளர்களுக்கான விண்ணப்பபடிவங்களும் கோரப்பட்டுள்ளன. ஆனால் மூன்றிலிரண்டு பலம் இருக்கும் அரசாங்கம் தேர்தலுக்கு அஞ்சுகின்றது. ” – என்றார்.

Related Articles

Latest Articles