” மலையகத்தின் மூத்த தொழிற்சங்கவாதிகளில் ஒருவரும் முன்னாள் இ.தொ.கா தலைவரும் பிரதி அமைச்சரும் எனது அரசியலுக்கு வழிகாட்டியாக நின்று செயற்பட்டவருமான முத்தசிவலிங்கம் அவர்களின் மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கின்றேன்.”
இவ்வாறு மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்தள்ளார்.
” அமரர் முத்து சிவலிங்கம் என்னை அரசியலுக்கு அறிமுகப்படுத்தியவர்.அதனை நான் என்றும் மறக்கமாட்டேன்.அவர் எனக்கு பல்வேறு நிலைகளிலும் நின்று வழிகாட்டியாக செயற்பட்டவர்.என்னுடைய இன்றைய இந்த அரசியல் வளர்ச்சிக்கு அவரும் ஒரு காரணகர்த்தா என்றால் அது மிகையாகாது.
அவர் இலங்கை தொழிலாளர் காங்கிரசில் இருந்து ஒய்வு பெறுகின்ற வரை அந்த அமைப்பிற்காக முழுமையான நின்று உழைத்தவர்.இந்த அமைப்பின் சாதாரண ஒரு உறுப்பினராக உள்வாங்கப்பட்டு பின்பு படிப்படியாக பல்வேறு பதவிகளுக்கு உயர்த்தப்பட்டு பின்பு நிதிச் செயலாளராக அதன் தலைவராக மிகவும் சிறப்பாக செயற்பட்ட ஒருவர்.
நான் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக தலைமைத்துவம் வகிக்கின்ற நுவரெலியா ஆவேலியா ஸ்ரீ முத்துமாரியம்மன் சீத்தாஎலிய சீதையம்மன் ஆலயத்தின் ஆயள் காப்பாளராக செயற்பட்டு பல்வேறு சிக்கலான நிலையிலும் எங்களுடன் நின்று மிகவும் துணிச்சலாக செயற்பட்டவர்.
அவருடைய பிரிவானது அவருடைய குடும்பத்திற்கு மாத்திரம் அன்றி இந்த முழு மலையக சமூகத்திற்குமே ஒரு பெரும் இழப்பாகும்.அவர் உடபுஸ்ஸல்லாவ டலோஸ் தோட்டத்தில் பிறந்து உயர்ந்த நிலையை அடைந்தவர்.அவருடைய ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்.” – எனவும் ராதா குறிப்பிட்டார்.










