வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காம கந்தனின் வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு மலையகத்தின் ஊவா மாகாணத்தில் அமைந்துள்ள பசறை பிரதேசம் நேற்று (28) ஆன்மிக ஒளியில் ஒளிர்ந்தது. ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும் ஆடிதேர் திருவிழா இம்முறையும் பக்தர்களின் பெரும் திரளுடன் விமர்சையாக இடம்பெற்றது.
“சின்னக் கதிர்காமம்” எனப் போற்றப்படும் அம்மணிவத்தை ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தின் முத்தேர் பவனியுடன் தொடங்கிய இந்த ஆன்மிக நிகழ்வு, பசறை நகரை முழுமையாக பக்தி பரவசத்தில் ஆழ்த்தியது.
அதனைத் தொடர்ந்து பசறை நகரில் அமைந்துள்ள ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி கோயிலின் இரண்டு தேர்கள், கிக்கிரிவத்தை தோட்ட ஸ்ரீ கதிர்வேலாயுத ஆலயத்தின் இரண்டு தேர்கள், டெமேரியா மாத்தன்னை பிரிவு ஸ்ரீ சிவசுப்பிரமணிய ஆலய தேர், கோணக்கலை காவத்தை தோட்ட ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய தேர் மற்றும் கல்குடாவத்தை அம்மன் ஆலய தேர் ஆகியவை ஒவ்வொன்றாக நகரில் உலா வந்து இறுதியில் ஒரே இடத்தில் சங்கமித்தன.
பத்து தேர்களுக்கு மேற்பட்ட இத்தேர்கள் ஒரே இடத்தில் சங்கமித்த அபூர்வ தருணம் பக்தர்களுக்கு கண்கொள்ளாக் காட்சியாக அமைந்தது. பாரம்பரிய இசை, மேளதாள ஒலிகள், பக்தர்களின் கந்த சஷ்டி கவசம், “ஹரஹர மகாதேவா”, “முருகா முருகா” என ஒலித்த முழக்கங்கள் ஆகியவற்றால் பசறை நகரம் முழுவதும் ஆன்மிகத் தாளத்தில் திளைத்தது.
நிறைவாக நடைபெற்ற தேரோட்ட நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அருள் பெறினர். குறிப்பாக பல பகுதிகளிலிருந்து வந்த பக்தர்கள், மலையகத்தில் இவ்வாறான பல தேர்கள் ஒன்றிணையும் நிகழ்வு அரிது என்பதால் பெரும் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.
இலங்கையில் தொன்மை காலத்திலிருந்து பசறை பிரதேசத்திலேயே நடைபெற்று வரும் இத்தகைய தேர்கள் சங்கமிக்கும் விழா, மதச்சார்பற்ற ஒற்றுமையையும் பண்பாட்டு பெருமையையும் வெளிப்படுத்தும் முக்கியமான ஆன்மிக நிகழ்வாகவும் திகழ்கிறது.
— நடராஜா மலர்வேந்தன்










