மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் கோடிக்கணக்கான மக்கள் உணவின்றி பட்டினியில் தவிப்பதாக ஐக்கிய நாடுகள் சபை கவலை தெரிவித்துள்ளது.
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் நிலவும் வறுமை குறித்து விரிவான அறிக்கையை ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஒரு பிரிவான உலக உணவு அமைப்பு வெளியிட்டுள்ளது. இதில் சுமார் 6 கோடி பேர் உணவின்றி தவிப்பதாகவும், இவர்களுக்கு உதவ தங்களிடம் போதிய நிதி ஆதாரங்கள் இல்லை என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
உணவு கிடைக்காததால் மக்கள் சட்டவிரோத செயல்களில் ஈடுபடவதாகவும் ஆயுதக்குழுக்களில் சேர்ந்து அரசுகளுக்கு எதிராக இயங்கி வருவதாகவும் ஐ.நா. அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.
5 வயதுக்குட்பட்ட ஒன்றரை கோடி குழந்தைகள் ஆரோக்கியமான உணவு கிடைக்காமல் அவதிப்படுவதாகவும் ஐ.நா. கூறியுள்ளது.
இப்பிரச்னைக்குத் தீர்வுகாண வளர்ந்த நாடுகள் உதவுவதுடன் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் விவசாய உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஐ.நா. உணவு அமைப்பு கூறியுள்ளது.
