‘அவர்கள் கண்ட கனவு பகல் கனவாகியுள்ளது’ – உதயா சாடல்

ஆட்சிக்கு வரும் போது பலர் பல்வேறு கதைகளை கூறினார்கள். அவர் கண்ட கனவு நனவாகிறது. இவர் கண்ட கனவு நனவாகிறது என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால் இப்போது எல்லோரும் கண்ட கனவு பகல் கனவாக மாறியுள்ளதாக நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி தலைவருமான எம்.உதயகுமார் தெரிவித்தார்.

கொட்டகலை போகாவத்தை பகுதியில் முன்னாள் அமைச்சரும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தலைமையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

மலையகத்தினை பொருத்த வரையில் அமைச்சர் திகாம்பரம் அமைச்சராக இருந்த போது மலையக மக்களுக்கு பாரிய அளவில் சேவை செய்தார். தனி வீடுகளை கட்டிக்கொடுத்தார்.

உரிமைகளை பெற்றுக்கொடுத்தார் மக்களுக்கு தேவையானவற்றை பெற்றுக்கொடுத்தார். ஆனால் அதற்கு பிறகு ஆட்சிக்கு வந்தவர்கள்.

ஒரு வீடமைப்பு திட்டத்தை கூட ஆரம்பிக்கவில்லை. மாறாக கனவு கண்டுகொண்டிருக்கிறார்கள் கொட்டகலை பகுதியில் மாத்திரம் எனக்கு நினைவிருக்கும் வரையில் கொட்டகலை, போகாவத்தை, ஹரிங்டன் குயின்ஸ்பெரி என கொட்டகலை பகுதியில் மாத்திரம் சுமார் 350 இற்கும் மேற்பட்ட வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளன. அப்போது இருபது பேர்ச் காணியில் வீடு கட்டி தருவேன் என்றார்கள்.

அதன் பின் அதுவும் சாத்தியமில்லை 10 பேர்ச்சஸ் காணியில் கட்டித்தருவோம் என்றார்கள். வாக்குறுதி பெற்றுக்கொடுக்கும் போது 20 பேச்சஸ் சாத்தியமில்லை. என்று தெரியாதா? இப்போது இருவது பேச்சஸ்ஸூமில்லை 10 பேச்சஸ்ஸூமில்லை மாடு வீடும் இல்லை தனி வீடும் இல்லை குருவி கூடுகளும் இல்லை.

திகாம்பரம் அமைச்சுப்பதவி ஏற்கும் போது மலையக மக்களுக்கு சேவை செய்யக்கூடிய காணியுரிமையுடன் ஒரு அமைச்சுப்பதவி வழங்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

அதற்கமைய மலைநாட்டு புதிய கிராமங்கள் அமைச்சு என்று ஒரு புதிய அமைச்சு உருவாக்கப்பட்டது. ஆனால் இந்த அரசாங்கம் வந்ததும் தோட்ட வீடமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

ஆனால் அந்த அமைச்சிலும் வீடமைப்புமில்லை உட்கட்டமைப்புமில்லை. இப்போது அது கோதுமை விநியோகிக்கும் ராஜாங்க அமைச்சாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் சிறந்த முறையில் சேவையாற்றியதற்காக மலைநாட்டு புதிய கிராமங்கள் வீடமைப்பு அமைச்சுக்கு விருது கிடைத்தது. இப்போது விருது வழங்க வேண்டும் என்றால் வேலை செய்யமைக்காகவே விருது வழங்க வேண்டும் இன்று பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் பல்வேறு இன்னல்கள் அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள் மூன்று வேளை சாப்பிட முடியாது மிகவும் துன்பப்படுகிறார் ஆனால் இன்றுள்ளவர்கள் உள்ளாச பூங்கா அமைத்துக்கொண்டிருக்கிறார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

Related Articles

Latest Articles