” தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை காண்பதற்கு இதுவே சிறந்தகாலகட்டம். எனவே, இது விடயத்தில் ஜனாதிபதியால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவு வழங்கப்படும்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை தேடும் முயற்சியை ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையிலான கூட்டணியே கடந்த காலங்களில் குழப்பி வந்தது. நான் 13 பிளஸ் எனக் கூறியபோது, அதனை மஹிந்த எதிர்த்தார். ஆனால் இன்று மஹிந்த ராஜபக்சவைக்கூட 13 பிளஸ் என்ற நிலைக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கொண்டுவந்துள்ளார். இது சிறந்த மாற்றமாகும். அதனை பயன்படுத்தி இப்பிரச்சினையை தீர்த்துவிட வேண்டும்.
இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே அன்று முதல் நான் இருந்து வருகின்றேன். இனியும் இந்நிலைப்பாடு மாறப்போவதில்லை. வாக்கு வேட்டைக்காக கொள்கைகளை விட்டுக்கொடுக்க முடியாது.
அதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு பொருளாதார நெருக்கடியை சமாளித்த அனுபவம் உள்ளது. 2002 இல் சரிவில் இருந்த பொருளாதாரத்தை அவர் மீட்டார். ” – என்றார்.
