‘இனப்பிரச்சினைக்கு தீர்வு கண்டால் வெளிநாட்டு முதலீடு வரும்’

இனப்பிரச்சினை தீர்க்கப்படும்போது, வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் முதலீடு செய்ய முன்வருவார்கள் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.

” இலங்கையின் நல்லிணக்கம் தொடர்பான செயல்முறை ஒழுங்கு நீதியமைச்சிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது. இப்போதும், காணாமல் போனோர் அலுவலகம் நீதி அமைச்சின் கீழேயே பராமரிக்கப்பட்டு வருகிறது. இங்குள்ள அனைத்து கோப்புகளையும் அடுத்த ஆண்டு டிசம்பர் 31ம் தேதிக்குள் முடிப்பதற்கு நாம் எதிர்பார்க்கின்றோம்.” – எனவும் நீதி அமைச்சர் குறிப்பிட்டார்.

காணாமல் போனவர்களுக்கான இழப்பீடாக ஒவ்வொருவருக்கும் தலா ஒரு இலட்சம் ரூபா வழங்கப்பட்டுள்ளது. சொத்து இழப்பீடு குறித்தும் தற்போது நாம் பரிசீலித்து வருகிறோம்.

வடக்கில் யுத்தம் காரணமாக பிறப்புச் சான்றிதழ்கள் மற்றும் அடையாள அட்டைகளை இழந்த சுமார் 11,000 பேர் வடக்கில் இருந்தனர். அவற்றை நாம் மீண்டும் பெற்றுக் கொடுத்தோம். நீதியமைச்சின் கீழ் வட மாகாணத்தில் பல இணக்கப்பாட்டு மத்தியஸ்த நிகழ்வுகளை நாம் முன்னெடுத்தோம்.

இப்பிரச்சினைகள் தீர்க்கப்படும் போது வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் இலங்கையில் முதலீடு செய்ய ஊக்குவிக்கப்படுவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு தற்போதும் செயற்பட்டு வருகிறது. இவ்விடயத்தில் எமக்கு தென்னாபிரிக்க அரசாங்கம் ஆதரவளித்து வருகின்றது. ” -எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

Related Articles

Latest Articles